பொன்முடிக்கு வந்ததே கோபம் ஆத்திரத்தில் சங்கமேஸ்வரனின் சட்டையை பிடித்து உலுக்க அவரோ அவனை தள்ளிவிட்டார்
”டேய் நிறுத்துடா என்னடா பொங்கற”
”அநியாயமா என் அம்மாவை கொன்னுட்டியேடா பாவி, நீயெல்லாம் ஒரு தகப்பனா”
”வார்த்தையை கொட்டாத காலமெல்லாம் உன்னை மகாராணி போல வைச்சிக்கிறேன்னு சொன்னேன், உங்கம்மா கேட்கலை உண்மையாவே இந்த வீட்டுக்கு மகாராணி போல வாழனும்னு ஆசைப்பட்டா, எவ்ளோதான் கெஞ்சி புரிய வைக்கறது, என்னோட சூழ்நிலையை அவள் சாதகமா பயன்படுத்திக்கிட்டு என்னை மிரட்டினா, எனக்கு ஆத்திரம் வந்தது அதான் கழுத்தை நெறிச்சி கொன்னுட்டேன்”
”இப்படியா அநியாயம் செய்வீங்க”
”என்னவோ நீ நல்லவன் போல பேசறியே நீ மட்டும் என்னவாம், உன் பொண்டாட்டியையும் ஆண்டாளையும் கொன்னவன்தானே“
”நானா அப்படி செய்தேன் நீங்கதானே செய்ய வைச்சீங்க, பாவம் ஆண்டாள் அம்மா என் பொண்டாட்டியை காப்பாத்த முன்வந்து அநியாயமா என் கையால இறந்துப் போனாங்க”
”சரி வருத்தப்படாத இப்ப வருத்தப்பட்டாலும் போனவங்க என்ன திரும்பி வரவா போறாங்க“
“என்ன இருந்தாலும் நாம செய்தது பெரிய தப்பு”
”சொத்துக்காகதானே எல்லாம் செய்தோம், வாரிசு இருந்தாதானே சொத்து கிடைக்கும், பெண் குழந்தையை வைச்சிக்கிட்டு சொத்தை உரிமை கொண்டாட முடியுமா, இப்ப வாழற இந்த ஆடம்பர வாழ்க்கையை இழக்கச் சொல்றியா, இந்த ஊருக்குள்ள நமக்கிருக்கற மதிப்பு மரியாதையை இழக்கச் சொல்றியா, நாமலாம் இந்தளவுக்கு உயர்ந்து வந்ததே பெரிசு எல்லாம் ஆண்டாளாலதான், நாம இந்தளவுக்கு வந்திருக்கோம் இல்லைன்னா என் பிறப்புக்கு இந்நேரம் நாம கீழவீதியிலதான் கிடந்திருப்போம்”