“ச்சே, நீங்களும் எல்லோரையும் போலவே தான் இருக்கீங்க! உங்களுக்கு உங்க விஷயம் தான் முக்கியம்... உங்க ஃப்ரென்ட் இந்த வீட்டுக்கு வந்தா உங்களுக்கு ரொம்ப வசதியா இருக்கும்.. உங்க இஷ்டம் போல இருக்கலாம்... நான் எப்படி போனா உங்களுக்கு என்ன வந்தது...”
“சஞ்சீவ்????”
“வேண்டாம்... உங்க மேல நான் வச்சிருக்கிற மரியாதையை கெடுத்துக்காதீங்க... இனிமேல் அவளை பத்தி பேசுறதா இருந்தா என்கிட்டே நீங்க பேசவே வேண்டாம்... பை...”
கீதா என்ன பதில் சொல்கிறாள் என்று கேட்க கூட தாமதிக்காமல் பைக்கை வேகமாக கிளப்பிக் கொண்டு பறந்தான் சஞ்சீவ்!
🌼🌸❀✿🌷
"ஓகே கீதா, இப்போவே அம்மா கிட்ட பேசவா இல்ல ஈவ்னிங் பேசவா? இப்படி இவங்க பொண்ணெல்லாம் பார்ப்பாங்கன்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை..."
டென்ஷனுடன் சொன்ன ராஜீவ், பதில் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்த கீதாவை ஆச்சர்யமாக பார்த்தான். உடனேயே அம்மாவிடம் கேட்க வேண்டும் என்று சொல்லி கொண்டிருந்தவள், இப்போது அமைதியாக இருப்பது, அதுவும் காஞ்சனா பெண் பார்ப்பது எல்லாம் தெரிந்தும் இப்படி அமைதியாக இருப்பதன் காரணம் அவனுக்கு புரியவில்லை!
சோஃபாவில் கீதாவின் பக்கம் சென்று அமர்ந்தவன் அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான். கீதாவின் முகத்தில் வழக்கமாக இருக்கும் மலர்ச்சியை காணவில்லை.
"ஏன்டா இப்படி டல்லா இருக்க? நீ இவ்வளவு ஃபீல் செய்ற மாதிரி இப்போ என்ன நடந்தது? நான் தான் எல்லாத்தையும் சரி செய்றேன்னு சொல்லிட்டேன்ல?"
"ப்ச்..."