”நானும் நிவேதினியும் ரொம்ப சின்சியரா லவ் பண்ணோம், எங்க லவ்வை யாரும் ஏத்துக்கலை, முக்கியமா நிவேதினியோட வீட்டுக்காரங்க யாருமே என்னை ஏத்துக்கலை, எங்க காதலை எதிர்த்தாங்க”
”இப்ப எதுக்கு இதெல்லாம் சொல்றீங்க தருண்“
”பொறு விசயம் இருக்கு, என்னைச் சொல்ல விடு” என சொல்ல அவள் அமைதியானாள்.
”எல்லாரோட எதிர்ப்பையும் மீறிதான் நான் நிவேதினியை கரம்பிடிச்சேன், அவளும் என்னை முழுசா நம்பி என்னை ஏத்துக்கிட்டா, எங்க அன்புக்கு ஒரு பங்கமும் வரலை, அவளால ஆடம்பர வாழ்க்கையை மறந்துட்டு என்கூட சாதாரண வாழ்க்கையை வாழ முடியாம தற்கொலை செய்துக்கிட்டா, அவளோட சாவுல மர்மம் இருக்குன்னு அவளோட வீட்டாளுங்க என்னை பிடிச்சிக்கிட்டாங்க, ஏதோ நான்தான் அவளை கொன்னுட்டு தற்கொலை செய்துக்கிட்டதா ஊரை நம்ப வைச்சேன்னு என் மேல வீணா பழியை சுமத்தினாங்க, என்னை அடிச்சாங்க மிதிச்சாங்க, என் உசுரை மட்டும்தான் எடுக்கலை, மத்தப்படி என்னை நார்நாரா கிழிச்சிட்டு போயிட்டாங்க” என சொல்லி கதறி கதறி அழத் தொடங்கினான்.
அவன் அழுவது அவளுக்கு நடிப்பு போன்றே தெரிந்தது, அதை விட பவானியின் டைரியில் அவள் தருண் தன்னிடம் சொன்னதாக சொல்லிய அனைத்து விசயங்களும் அப்படியே மனப்பாடம் செய்து வைத்திருப்பான் போல, வார்த்தை கூட மாறாமல் அப்படியே சொல்ல அதைக்கேட்டு அவளுக்கு வியப்புதான் வந்தது. அவளின் ஆச்சர்யமான முகத்தைக் கண்ட தருணோ தான் சொல்வதை அவள் நம்பிவிட்டாள் என நம்பிவிட்டான்
”அவங்க அடிச்ச அடியில என்னோட ஆண்மையை நான் இழந்துட்டேன், இந்த விசயம் வெளிய தெரிஞ்சா என்னை யாரும் மதிக்க மாட்டாங்கன்னு யார்கிட்டயும் நான் இதைச் சொல்லலை“
”இந்த விசயம் பவானிக்கு தெரியுமா”
”தெரியும்”