"எல்லாம் சரியா நடக்கும் ப்ரியா! எனக்கு நம்பிக்கை இருக்கு,” என்றான் மென்மையாக.
அவன் கையைப் பற்றியப் போது கல்லைப் போல இறுகி போயிருந்த ப்ரியாவின் கரம், அவன் அந்த வார்த்தைகளை சொன்னதும் மெல்ல இளகுவதை அவனால் உணர முடிந்தது!
🌼🌸❀✿🌷
திடீரென்று அவள் எதிர்பார்த்திராத விதத்தில் விக்கிராந்த் கையை பற்றியப் போது ப்ரியா அதிர்ந்து தான் போனாள். அதற்கு அவள் வார்த்தைகளால் ரியாக்ட் செய்யும் முன்பே விக்கிராந்த் சொன்ன வார்த்தைகளும், அவன் பேசிய விதமும், அவளை எப்போதும் போல இளக வைத்தது!
மற்ற நேரங்களைப் போல அல்லாமல் அவளின் கை விக்கிராந்தின் கைப்பிடியில் இருப்பதை தாமதமாகவே உணர்ந்தவள், மனதின் உணர்வுகள் எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் சட்டென்று தன்னுள் அடக்கி கொண்டாள்.
விக்கிராந்திற்கு ஏதாவது புரிந்திருக்குமா என்ற கேள்வியுடன் அவன் பக்கம் அவள் பார்த்த அதே நேரத்தில், விக்கிராந்தும் அவன் பிடியில் இருந்த ப்ரியாவின் கையை ஒரு பார்வை பார்த்து விட்டு நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
இருவரின் விழிகளும் சந்தித்துக் கொள்ள, அவர்கள் இருவரையுமே புதிதாய் என்னவோ தாக்கியது! வார்த்தைகளுக்கான அவசியமே இல்லாமல் இருவருக்குமே ‘என்னவோ’ புரிந்தது!!
ஒரே ஒரு வினாடி விழிகளை விரித்து விக்கிராந்தை பார்த்த ப்ரியா, அடுத்த வினாடியே தன்னை சுதாரித்துக் கொண்டவளாக பார்வையை திருப்பிக் கொண்டாள்! அவள் இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது!
விக்கிராந்தோ ப்ரியாவை விட்டு கண்களை திருப்பாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்! ப்ரியாவின் கை சொன்ன செய்தியுடன், அவளின் விழிகள் சொன்ன செய்தியும் ஒத்துப் போனது!!!!