பக்கம் பார்த்தாள்.
அவர்கள் இருவர் நடுவே எதில் பொருத்தம் இருக்கிறதோ இல்லையோ, பொய் சொல்வதில் இருக்கிறது என்று நினைத்தப் படி அவள் பார்த்தால், சஞ்சீவ் முகத்திலும் திகைப்பு தான் இருந்தது!
அதற்குள், "இருந்தாலும் வேற ஃபோன் இல்லையா என்ன? கீதா ஃபோன்ல கூப்பிட்டு விஷ் செய்யலாம் தானே?" என அர்ச்சனா பேச்சை தொடரவும், கவனத்தை அம்மா பக்கம் திருப்பினாள் இந்து.
ஆனால் அர்ச்சனாவின் கேள்விக்கு அவள் பதில் சொல்லும் முன், காஞ்சனா, "நீங்க வேற! இந்து மாடியை விட்டு கீழே வந்தா தானே! பாவம் உங்களை தனியா விட்டு இருக்குறது அவளுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு போலருக்கு..." என்றாள்.
மீண்டும் அர்ச்சனாவின் ஆராய்ச்சி நிறைந்த விழிகள் இந்து மீது படர்ந்தது!
"என்ன இந்து இது? சஞ்சீவ், ராஜீவ், அவங்க அம்மா, கீதா, கண்மணி எல்லோரும் உனக்கு நல்லா தெரிஞ்சவங்க தானே? அப்புறம் என்ன?"
இந்து என்ன பதில் சொல்லி சமாளிப்பது என்று யோசிக்க தொடங்கும் போதே, "ஏன் ஆன்ட்டி இப்படி கேட்குறீங்க? இந்து பாவம்... எங்களுக்கு அவளை தெரியாதா என்ன?" என்றாள் கீதா.
"ஆமாம் பெரியம்மா... இந்து அக்காவை எதுவும் சொல்லாதீங்க..." என்றாள் கண்மணியும்.
அர்ச்சனாவிற்கு மனம் நிறைந்தது! அன்பான கணவன், பரிவான அவனின் குடும்பம், இதை விட இந்துவிற்கு வேறு என்ன வேண்டும்? அதற்கு மேல் அவள் கேள்விகள் கேட்கவில்லை!
அர்ச்சனா அன்றிரவு அங்கேயே தங்கி இருக்க அனைவரும் வற்புறுத்தவும், அர்ச்சனாவும் சரி என ஏற்றுக் கொண்டாள். இரவு உணவு முடித்து அனைவரும் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.