“விடுங்க.... மணி ஏழாக போகுது... இன்னைக்கு பெங்களூரு போகனும்னு சொன்னீங்களே கிளம்பலையா??”
“ஏழா??? கிளம்பனும் கிளம்பனும்... பெட்டி எடுத்து வச்சுட்டீயா சரண்?”
“ம்ம்ம்... எல்லாம் ரெடியா இருக்கு...”
“தேங்க்ஸ் டா செல்லம்...”
மனைவியையும், மகளையும் கீழே இறக்கி விட்ட கோபி, அவசர அவசரமாக கிளம்ப தயாராக தொடங்கினான்.
சரண்யா நிஷாவை கையில் தூக்கிக் கொண்டு, ஒரு ஓரமாக நின்று கணவனையே பார்த்திருந்தாள்.
மூன்று வருட உறவு என்றாலும் பல பல வருடங்களாக தொடர்ந்து வந்ததைப் போல கோபியுடன் அவளுக்கு ஒரு இனிமையான பந்தம் ஏற்பட்டிருந்தது.
பெற்றவர்கள் பார்த்து நடந்த திருமணம் என்ற போதும், திருமணத்திற்கு பின் தருவதாக அவளின் அப்பா சொல்லி இருந்த பணத்தை கொடுக்க முடியாமல் போனதால் ஏற்பட்ட சச்சரவில், மனைவியின் பக்கம் நின்று வீட்டை விட்டு வெளியே வந்தவன் கோபி...
இப்படி ஒரு நல்லவன் இருப்பானா என்பது போன்ற குணம்... அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்பவன்... அவன் கிடைத்தது அவளின் அதிர்ஷ்டம்...
சரண்யா தன்னை மறந்து கணவனையே பார்த்துக் கொண்டிருக்க, சட்டை பாக்கெட்டை காலி செய்த கோபி, ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து தனியே வைத்தான்.
“மைத்ரேயி மேடம் போல ஒரு நேர்மையானவங்களை பார்க்கவே முடியாது சரண்...”