ஹிட்லருக்கு இந்த அளவுக்கு யாராலேயும் சப்போர்ட் செய்ய முடியாது,” என எப்போதும் போலவே கமலை ‘ஹிட்லர்’ என்று கவிதா சொல்ல, சுமித்ராவிற்கு நறுக்கென்று தைத்தது.
ஆனால், கமல் தான் அவளின் வாயில் பெரிய பூட்டு போட்டு விட்டிருக்கிறானே...!
கவிதாவிற்கு பதில் ஒன்றும் சொல்லாமல் தன் வேலையை தொடர சமையலறைக்கு சென்றாள்.
நேரம் மெல்ல நகர்ந்து சென்றது.
இரவு மணி எட்டு ஆக, சுமித்ரா ரேஷ்மியை அழைத்தாள்.
“ரேஷ்மி பாப்பா, போய் அப்பாவை சாப்பிட கூட்டிட்டு வரீயா???”
“நான் போ மாட்டேன். அப்பா திட்டினார்!”
மழலை மொழியில் கோபத்தை காட்டிய மகளின் பேச்சில் மயங்கி அவளை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்ட சுமித்ரா,
“நீ தப்பு செய்தா அப்படி தான் அப்பா திட்டுவார்... நீ போய் சாப்பிட கூப்பிடு... அப்போ உன் கிட்ட செல்லம் கொஞ்சுவார்...”
“அப்பாவா?”
கமலை பற்றி மற்றவர்கள் பேசும் விதமும், நடந்துக் கொள்ளும் விதமும், மகளையும் பாதிப்பதை புரிந்துக் கொண்ட சுமித்ரா, மகளின் மனதில் தந்தையை பற்றிய நல்ல உணர்வை கொண்டு வர முயன்றாள்.
“என்ன இப்படி கேட்குற? நேத்து உனக்கு பிடிச்ச க்ரீம் கேக் யாரு வாங்கி கொடுத்தது?”