தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 02 - பிந்து வினோத்
This is a Chillzee Originals - Princess Novel episode.
- Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
- Visit Chillzee Princess Novels page for other current Chillzee Princess stories.
ரோஹினி நேரம் போவது தெரியாமல் தன்னுடைய யோசனையில் ஆழ்ந்திருக்க, “ரோ,” என அவளை அழைத்த குரல் கேட்டது.
நிமிர்ந்து பார்த்த ரோஹினியின் விழிகள் கலா வருவதை பார்த்து நிம்மதியுடன் விரிந்தது!
கலா அவளின் மனதிற்கு மிகவும் நெருக்கமானவள் என்பதால் யோசிக்காமல் தாவி சென்று அறைக்குள்ளே நடந்து வந்துக் கொண்டிருந்த கலாவை கட்டி அணைத்துக் கொண்டாள் ரோஹினி.
“கலாம்மா...” மேலே பேச முடியாமல் அவளின் தொண்டை அடைத்தது!
கலா ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருப்பவள்.
இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன், குழந்தை இல்லை என்பதை காரணம் காட்டி அவளின் கணவன் அவளை ஒதுக்கி விட்டு வேறு திருமணம் செய்துக் கொண்டான். அப்போது, வேறு வழி இல்லாமல் வேலை தேடி இந்த தீவிற்கு வந்தவள் கலா! இங்கே, அதிர்ஷ்டவசமாக அவளின் மனதிற்கு பிடித்ததுப் போல குழந்தை இளவரசி ரோஹினியை வளர்க்கும் அரண்மனை வேலை அவளுக்கு கிடைத்தது.
முதல் நாள் முதலே ரோஹினியை தன் சொந்த குழந்தைப் போலவே சீராட்டி பாராட்டி வளர்த்து வந்தாள் கலா.
ரோஹினியும் கலாவை தன் சொந்த அம்மாவாகவே நினைத்து அன்பு செலுத்தி வந்தாள்.
மஹாராணியான ரோஹினியின் அம்மா ரேவதி, தீவிற்காக மக்களுக்காக என பெரும்பாலான நேரம் செலவிட, கலாவே ரோஹினிக்கு முழுநேர தாயாகி போனாள்.
பொதுவாக அந்த தீவின் அரசக் குடும்பத்தினர் தங்களின் உறவினர்களை தவிர வேறு யாரிடமும் நெருங்கி பழகுவதில்லை. ஆனால் ரோஹினி கலா விஷயத்தில் அதை பின்பற்றியது கிடையாது.