ரோஷன் சொல்வதைப் போல விக்ரம் அவளுக்கு நல்ல துணையாக இருப்பான் என்று அவளுக்கும் தோன்றியது. எனவே, ரோஹினியின் மனதை மாற்ற முயன்றாள்.
“ரோ கண்ணா, நான் உன் நல்லதுக்கு தான் சொல்வேன்னு உனக்கு தெரியும். விக்ரம் பொறுப்பானவர், நல்லவரும் கூட. இந்த தீவுக்கு நல்ல ராஜாவா, உனக்கு நல்ல துணையா இருப்பார்...”
“கலாம்மா, விக்ரம் என்னை விரும்பி கல்யாணம் செய்துக்குறார்ன்னா நினைக்குறீங்க? கிடையவே கிடையாது! அவருக்கு இந்த தீவு தான் அம்மா, மனைவி, குழந்தை எல்லாம்!!! நீங்க சொன்ன மாதிரி அவர் நல்ல ராஜாவா இருப்பார். ஆனால் என் மனசுக்கு பிடிச்சவரா இருக்க மாட்டார்...”
சற்று முன் குழந்தையாக அடம் பிடித்த ரோஹினி தெளிவான திடமான குரலில் சொல்லவும் கலாவிற்கு ஆச்சர்யமாக தான் இருந்தது! ஆனால், ரோஹினி சொல்வதிலும் உண்மை இருப்பதாக தான் அவளுக்குப் பட்டது.
ரோஹினியின் அம்மா அப்பா தான் அரசாங்க வேலைகளே வாழ்க்கை என்று இருந்தார்கள், அடுத்து கணவனும் அப்படி இருந்தால்...
“நான் ஏன் கலாம்மா இப்படி இளவரசியா பிறந்தேன்? சாதாரண பொண்ணா இருந்திருந்தா இந்த பிரச்சனை எல்லாம் இல்லையே,” என ரோஹினி புலம்பவும் கலா யோசனையில் இருந்து வெளி வந்தாள்.
“எல்லாருடைய வாழ்க்கையிலும் ஏதாவது பிரச்சனை இருக்க தான் செய்யுது ரோ கண்ணா... அதை அவங்கவங்க சந்திச்சு தான் ஆகனும்... பிரச்சனைகளுக்கு இளவரசி சாதாரணமானவங்கன்னு பாகுபாடு எல்லாம் கிடையாது...”
“சரி, நானும் என் பிரச்சனையை நேரடியாவே சந்திக்கிறேன்! விக்ரமை கல்யாணம் செய்துக்க எனக்கு விருப்பம் இல்லை! கல்யாணம் செய்துக்கவும் மாட்டேன்!”