மித்ரன் எதிரியாக நினைத்தது சரண்யாவை மட்டும் தான்... இங்கே வேலை செய்பவர்களை இல்லை...
அதனால் தான் அவள் சென்ற உடனே இங்கே இவர்களை கவரும் வேலைகளை செய்ய தொடங்கி இருக்கிறான்...
சலிப்புடன் நினைத்தாலும், மித்ரனை அவரால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை... அவனின் திறமையை ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்...!
கூட்டத்தை முடித்து விட்டு வந்த மித்ரன் சேகரின் அருகில் வந்து, “உங்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் மிஸ்டர் சேகர்... வாங்க,” என்றான்.
எங்கே என்று கேட்காமல் அவனுடன் சென்றார் சேகர்.
மித்ரனுக்கு கேள்விகள் கேட்பது பிடிக்காது என்பதை அவர் கடந்த சில மாதங்களில் நன்றாகவே தெரிந்துக் கொண்டிருந்தார்.
மித்ரன் தன் காரில் ஏறவும், சேகரும் அவனை தொடர்ந்து காரில் அமர்ந்தார்.
தன்னுடைய கார் டிரைவரிடம் ஒரு பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பெயரை சொல்லி அங்கே செல்லுமாறு சொன்னான் மித்ரன்.
கார் கிளம்பவும், சேகரிடம், “இந்த ட்ரீட் உங்களுக்காக தான் சேகர்... ஏன்னு தெரியுமா... உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு... அந்த சரண்யா மேல அஃபெக்ஷன் இருந்தாலும், கம்பெனிக்கு இது தான் நல்லது அப்படின்னு எடுத்து சொன்னீங்க பாருங்க அந்த நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு,” என்றான் மித்ரன்.
சேகர் இப்போதும் அமைதியாக தலையை மட்டும் அசைத்து அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டார்.