அதன் பிறகும் மித்ரன் சொன்னவற்றுக்கு பெரும்பாலும் தலை அசைத்து விட்டு தேவை பட்டால் மட்டுமே பேசினார் சேகர்! மித்ரனுக்கு கேள்விகள் மட்டுமில்லை, அறிவுரைகளும் பிடிக்காது என்பதை அவர் எப்போதோ தெரிந்துக் கொண்டிருந்தார்!
மித்ரன் சொன்ன ஹோட்டல் வந்ததும் மித்ரனும், சேகரும் ஒன்றாகவே உள்ளே சென்றார்கள்.
அந்த ஆடம்பர உணவகத்தில் உணவு என தொடங்கியது மெல்ல மது பானங்கள் பக்கமாக சென்றது.
சங்கடத்துடன் நெளிந்த சேகர், “எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை மித்ரன்... வேண்டாம்... நான் கிளம்புறேன்,” என்றார்.
“காமெடி செய்யாதீங்க சேகர்... ஒரு காலத்துல என்னை கூட என் ஃப்ரென்ட்ஸ் எல்லாம் அமுல் பேபின்னு கிண்டல் செய்வாங்க... இப்போ நான் எப்படி முன்னேறி இருக்கேன்னு பாருங்க.... சும்மா ட்ரை செய்ங்க சார்,” என வற்புறுத்தினான் மித்ரன்.
“இல்லை எனக்கு பிடிக்காது... வேண்டாம்...”
தெளிவாக சொன்ன சேகரை அதற்கு மேலே வற்புறுத்தாமல் விட்ட மித்ரன், கம்பெனிக்காக அவன் வைத்திருக்கும் திட்டங்கள் என ஆரம்பித்து எதை, எதையோ பேசியபடி தன் கிளாஸ்களை காலி செய்யும் வேலையை தொடர்ந்தான்.
ஒரு மணி நேரம் அப்படியே செல்ல, பிலுக்கான பணத்தை மேஜை மேலே வைத்து விட்டு, “கிளம்பலாம்,” என குழறலுடன் சொல்லி எழுந்த மித்ரன் சரியாக நிற்க கூட இயலாமல் மெல்ல தள்ளாடினான்.
அவனை தாங்கி பிடித்த சேகர், “நல்ல வேளை டிரைவர் கூட வந்தீங்க மித்ரன்... இந்த நிலைமைல நீங்க டிரைவ் செய்யக் கூடாது,” என்றார்.