“சரிக்கா...”
“கோபமா?”
“அச்சச்சோ... உங்க மேல போய் கோபப் படுவேனா? அதெல்லாம் இல்லை. நீங்க சொல்றது ரொம்ப சரி!”
“உனக்கு புரிஞ்சா சரி....!!! நான் போய் மெஸ் ரூம்ல இருந்து டின்னர் எடுத்துட்டு வரேன், நீ நெயில் பாலிஷ் போட்டுட்டு இதெல்லாம் கிளீன் செய்து வை...”
மகாலட்சுமி அறையை விட்டு வெளியே செல்லவும், அதுவரை அவர்களின் பேச்சை கவனிக்காதது போல கேட்டுக் கொண்டிருந்த ஷெல்லி,
“இருந்தாலும் அவங்க ரொம்ப ஓவரா உங்களை கண்ட்ரோல் செய்றாங்க சினேகா. உங்க லைஃப் உங்க இஷ்டம், அவங்களுக்கு என்ன வந்தது?” என்றாள் கோபமாக.
சினேகா பதில் சொல்லாமல் புன்னகைத்தாள்.
சினேகா மூன்று ஆண்டுகளுக்கு முன் அவளுடைய படிப்பை முடித்த உடன், அவள் வளர்ந்த இல்லத்தில் தந்திருந்த சொற்ப பணத்துடன் இந்த ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்திருந்தாள். அப்போது ஷெல்லி இங்கே இல்லை ஆனால், மகாலக்ஷ்மி இதே அறையில் தான் இருந்தாள்.
வேலை தேடி, தேடி அலுத்து களைத்துப் போனாள் சினேகா.
பொதுவாக யாருடனும் பேசாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருக்கும் மகாலக்ஷ்மி, தன்னை போலவே அறைக்குள்ளேயே அடைந்து கிடைக்கும் சினேகாவை கூர்ந்து கவனித்தாள். சினேகாவின் முகத்தில் இருந்த அலுப்பும், சோகமும் அவளை பாதிக்கவே, தானாகவே அவளே வந்து சினேகாவிடம் பேசினாள்.