கஷ்டப்பட்டு எழுந்து, பல் துலக்கி வந்தவன், நளினியிடம், “அம்மா, ஒரு கப் காஃபி,” என்றான் தலையை பிடித்துக் கொண்டு...
மகனிடம் அப்போது எதையும் கேட்காமல், வேலையாளிடம் சொல்லி, மித்ரனுக்கு பிடித்தது போல ஸ்ட்ராங்காக காஃபி தயார் செய்துக் கொடுத்த நளினி, மகனின் அருகே அமர்ந்தாள்.
“நேத்தைக்கு வீட்டுக்கு வந்தப்போ நீ சுயநினைவே இல்லாமல் இருந்த மித்ரா...”
நளினியின் பேச்சில் இருந்த அந்த அமைதி கலந்த தோரணை மித்ரனுக்கு சங்கடத்தைக் கொடுக்க, “அம்மா ப்ளீஸ்... இப்போ வேண்டாம்,” என்றான் மெல்லியக் குரலில்.
“உங்கப்பா பிஸ்னஸ்ல எவ்வளவு பெரிய ஆளா இருந்தார்ன்னு உனக்கும் தெரியும்... அவரும் பிஸ்னஸ் மீட்டிங், பார்ட்டின்னு போவார்... ஆனால் ஜூசை தவிர வேற எதையும் கையில கூட தொட மாட்டார்...”
“அம்மா ப்ளீஸ்ம்மா... எனக்கு தலை வலிக்குது...”
“எப்போவுமே நீயும் மைத்தியும் என் பசங்கன்னு சொல்றதை நான் பெருமையா நினைச்சிருக்கேன் மித்ரா... ஆனால் இப்போ எல்லாம்...”
நளினி சொல்லாமல் நிறுத்த, மித்ரனுக்குள் நறுக்கென்று ஒன்று தைத்தது...
“நீ பெரியவனாயிட்ட மித்ரா. நான் சொல்லி உனக்கு தெரியனும்னு இல்லை. யோசிச்சு நட...”
நளினி சொல்லி விட்டு சென்று விட, மித்ரனின் கல்லான இதயத்தில் கூட எதுவோ ஒன்று அசைந்தது...
அவன் எப்போதுமே அம்மா பிள்ளை... காலேஜ் படித்த காலத்தில் கூட அம்மாவின் பின்னேயே சுற்றிக் கொண்டிருப்பான்... அம்மாவின் வாயில் இருந்த சின்னதாக பாராட்டை கேட்பது கூட அவனுக்கு நோபல் பரிசு பெறுவது போல தனிச்சிறப்பானது...