“நீ கொஞ்ச நேரம் தூங்குறீயாடா??”
மறுப்பாக தலை அசைத்த ரோஹினி, “வேண்டாம்... தூக்கம் வரலை,” என்றாள்!
“சரி, ரெண்டே நிமிஷம் கொடுடா... நான் பூ கட்டிட்டு வரேன்...”
சாரதா சொன்னதற்கு சரி என்ற அர்த்தத்தில் தலையை அசைத்து விட்டு, அவள் பூ தொடுப்பதையே ஆர்வத்துடன் பார்த்தாள் ரோஹினி!
சாரதா வார்த்தைக்கு வார்த்தை ‘ரோஹினிம்மா’, ‘டா’ என்றெல்லாம் அழைக்கும் போது ரோஹினிக்குள் எதுவோ ஒன்று உருகி வழிந்தது!
கலாவை தவிர வேறு யாருமே அவளை இப்படி அன்புடன் அழைத்தது இல்லை... அவளின் அம்மா, அப்பா உட்பட மற்ற அனைவருக்குமே அவள் எப்போதும் இளவரசி ரோஹினி மட்டும் தான்!
ரோஹினி தனியாக இருக்கும் நேரத்தில் கலா மட்டும் ‘ரோ’ என்று அவளை அன்புடன் அழைப்பாள். கலாவிடம் ரோஹினிக்கு சொந்த அம்மாவை போன்ற அன்பு இருந்தது. கலாவும் கூட அவளை சொந்த மகளை போல தான் அன்புடன் வளர்த்தாள். ஆனால் அரண்மனையில் இருக்கும் பல நேரங்களில் கலா இளவரசி எனும் மரியாதையுடனே அவளிடம் நடந்துக் கொள்வாள்...! அது கலாவால் தவிர்க்க முடியாததும் கூட...
அது போன்ற உறவுகளுக்கே பழகி போயிருந்த ரோஹினிக்கு சாரதாவின் குணம் வேறுப்பட்டு தெரிந்தது!
சாரதா இதற்கு முன் ரோஹினியை சந்தித்தது கூட கிடையாது... ஆனாலும் பார்த்த முதல் நொடி முதலே அவளை அன்புடன் ஏற்று, அரவணைத்துக் கொண்டிருந்தாள். ரோஹினியின் நடவடிக்கைகள் அஜய் போல பலருக்கும் கோபத்தை கிளறி இருக்கும். ஆனால் சாரதா கோபம் சிறிதும் இல்லாமல் இயல்பாக ரோஹினியிடம் அன்பு காட்டினாள்!