திரும்பி படுத்துக் கொண்டு,
“நீங்க ரொம்ப லக்கி... உங்க இரண்டு மகன்கள், அப்புறம் அவங்க நிரஞ்சனா, எல்லோரும் உங்க கிட்ட ரொம்ப அன்பா இருக்காங்க,” என்றாள்.
கட்டில் பக்கத்தில் சென்று, ரோஹினியின் நெற்றியில் இதமாக வருடிக் கொடுத்தாள் சாரதா...
“உனக்கும் நான் இருக்கேன்... கலா இருக்கா...”
ரோஹினி முகத்தில் சின்ன புன்னகை உதயமானது!
“இப்படி சிரிச்சா தான் நல்லா இருக்கு! அப்படியே, கண்ணை மூடிக்கோ... தானா தூக்கம் வரும்...”
சாரதா சொன்னதை போலவே கண்களை மூடிக் கொண்டாள் ரோஹினி...
ஒரு சில நிமிடங்களில் அவள் தூங்கி விட, சாரதா விளக்கை அணைத்து விட்டு படுத்து தூங்க முயன்றாள்!
ஆனால், மெத்தையின் மென்மைக்கு பழக்கப் பட்டு போயிருந்தவளுக்கு தரையில் படுத்து தூங்குவது கஷ்டமாக தான் இருந்தது...
திரும்பி திரும்பி அவள் படுத்துக் கொண்டிருக்க... திடீரென, பக்கத்தில் யாரோ இருப்பதாக தோன்றியது...
யாரென்று கவனித்தால், ரோஹினி அங்கே இருந்தாள்!
“நான் உங்க பக்கத்துல படுத்துக்கவா???”
“அச்சோ ரோஹினிம்மா, உனக்கு பாய்ல படுக்குறது எல்லாம் சரியா இருக்காது... கஷ்டமா இருக்கும்...”