Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 21 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
கதவை மெல்ல தட்டிய நளினி, சின்ன யோசனைக்கு பின் காலிங் பெல்லையும் அழுத்தினாள்!
கதவு திறக்கப் படவும், சின்ன புன்னகையை கொடுத்து, “நான் நளினி, மைத்ரேயியோட அம்மா,” என தன்னையே அறிமுகப் படுத்திக் கொண்டாள்!
கதவை திறந்து நின்றிருந்த சரண்யா, வந்திருப்பது யார் என்று புரியவும், “உள்ளே வாங்க மேடம்,” என பரபரப்புடன் நளினியை வரவேற்றாள்! அவளுடனே ஒட்டிக் கொண்டு கொண்டு நின்றிருந்த நிஷாவும் கண்கள் விரிய நளினியை பார்த்தாள்!
உள்ளே வந்த நளினி மெல்ல பார்வையை சுழற்றினாள்! வீட்டினுள்ளே கார்ட்போர்ட் டப்பாக்களும், பாத்திரங்கள் சிலவும் ஆங்காங்கே தரையில் இருந்தது!
நளினியின் பார்வையை கவனித்த சரண்யா, “இன்னும் எதுவும் அடுக்கி வைக்கலை மேடம்! மைத்ரேயி மேடம் காலைல நல்ல டைம்ன்னு அப்போவே வர சொன்னாங்ன்னு வந்துட்டோம்... சாவியும் என் கிட்ட கொடுத்திருந்தாங்க,” என்றாள் மெல்லிய தயக்கத்துடன்.
“எனக்கே அதெல்லாம் தெரியும் சரண்யா! சண்டே என்பதால மைத்தி பத்து மணிக்கு மேல தான் தூங்கி எழுந்திருப்பா. நீயும் நிஷாவும் வருவீங்கன்னு என் கிட்ட சொல்லி வச்சிருந்தா! உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமான்னு கேட்க தான் வந்தேன்...”
“அப்படி ஹெல்ப்ன்னு எல்லாம் வேண்டாம் மேடம்! இருங்க உங்களுக்கு உட்கார சேர் எடுக்குறேன்...”
“அதெல்லாம் வேண்டாம் சரண்யா! நீங்க ரெண்டுப் பேரும் சாப்பிட்டீங்களா? உங்களுக்கு டிஃபன் எடுத்துட்டு வரலாம்னு நினைச்சேன்... நிஷாக்கு என்ன மாதிரி டிஃபன் பிடிக்கும்னு சரியா தெரியலை... சரி, முதல்ல கேட்டுடலாம்னு வந்தேன்...”
“அப்படி எல்லாம் வேண்டாம் மேடம்... நான் எங்களுக்குன்னு சிம்பிளா பொங்கல் செஞ்சேன்... நீங்க கொஞ்சம் சாப்பிடுறீங்களா???”