“க்கும்!!! எல்லாம் செய்யலாம். நம்ம வீட்டுல ரூல்ஸ் எல்லாம் எதுவும் கிடையாது... வா உட்காரு... முதல்ல சாப்பிடு...”
வீட்டுல ரூல்ஸ் எல்லாம் எதுவும் கிடையாது, என்று சாரதா சொன்னது ரோஹினியின் காதுகளுக்கு தேனாக இனித்தது!
அவளுடைய அரண்மனையில் நிற்க, நடக்க, பேச அனைத்திற்கும் சட்டத் திட்டங்கள் இருந்தது!
சாரதா சொன்ன படி உணவறை நாற்காலியில் அமர்ந்தவள்,
“நீங்க சாப்பிட்டீங்களா?” என்று பெரியவளைப் பார்த்துக் கேட்டாள்.
“அதெல்லாம் நான் டைம்க்கு செஞ்சிடுவேன்டா... என்னால பசி தாங்க முடியாது! காலைல சமைச்ச உடனேயே நான் ஃபர்ஸ்ட் சாப்பிட்டுருவேன்... இன்னைக்கு உனக்காக தான் ஆப்பம் செஞ்சேன்... தேங்கா பால் வச்சு சாப்பிடுவீயா???”
“நீங்க எது கொடுத்தாலும் சரி...”
“அப்போ தேங்கா பால் வச்சே சாப்பிடு... நைட்டு நல்லா தூங்குனீயா?”
“ரொம்ப நல்லா தூங்கினேன்... ம்மா...”
ரோஹினி தயக்கத்துடன் கடைசியாக சேர்த்த ‘ம்மா...’ சாரதாவின் மனதை இன்னும் இளக செய்தது... ஏற்கனவே ரோஹினியை தனக்கு பிறக்காத மகளாக பாவித்துக் கொண்டிருந்தவள், இப்போது மொத்தமாக கரைந்துப் போனாள்...
“ராணியா பஞ்சு மெத்தையில தூங்க வேண்டியவ, தரையில தூங்கிட்டு, நல்லா தூங்கினேன்னு சொல்ற???”
“அது ஏன்னா, இங்கே நீங்க என் பக்கத்துல இருந்தீங்க...”