ப்ரியா தலை அசைக்க, துளசி நந்திதாவிடம் கேட்டுக் கொண்டு இருக்காமல் அவளின் கையை பிடித்துக் கொண்டு நடந்தாள்!
✽✽✽
ஏசி ரெஸ்டாரன்ட்டில் அமர்ந்து, சில்லென்ற ஜூஸ் குடித்த பின்பும் கூட நந்திதாவின் மனம் அமைதியாகவில்லை!
அவள் கோபமாக இருப்பது கூடவா உதய்க்கு புரியவில்லை?
இன்று புடவை விஷயத்தில் விட்டுக் கொடுத்ததைப் போல அவள் வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்திலும் விட்டுக் கொடுக்க வேண்டுமா???
இப்போதே அமைதியாக இருக்கும் உதய் திருமணத்திற்கு பின்பு மட்டும் எப்படி அவளுக்கு ஆதரவாக இருப்பான்????
நந்திதா வெகு தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்க, துளசியும், ப்ரியாவும் ரெஸ்ட்ரூம் சென்று வருவதாக சொல்லி விட்டு சென்றார்கள்...
தனியாக அமர்ந்திருந்த நந்திதா மீண்டும் தன் சிந்தனையை தொடர்ந்தாள்...
சேலை என்பது சின்ன விஷயம் தான்... ஆனால் அதில் கூட உதயால் அவளை புரிந்துக் கொள்ள முடியவில்லையே...
அவன் சொன்ன காதலின் வேகம் எல்லாம் அவனின் அம்மா இல்லாத இடத்தில் மட்டும் தானா????
தான் ஜாலியாக உலாவிக் கொண்டிருந்த மாய காதல் உலகில் இருந்து தொபுக்கடீர் என தரையில் விழுந்து விட்டதைப் போல நந்திதா உணர்ந்தாள்...