✽✽✽
“அப்புறம்?”
“ஹாங்... விழுப்புரம்...! வாயை மூடிட்டு அமைதியா இருங்க பார்ப்போம்...”
“அதெல்லாம் சான்சே இல்லை நந்து...”
துளசி மட்டுமல்லாமல், திருமணத்திற்கென வந்திருந்த தோழிகள் அபி, மனு, அருணாவின் அன்பு மழையில் நனைந்துக் கொண்டிருந்தாள் நந்திதா.
கல்லூரி கால தோழிகள்... அதுவும் பல வருடங்கள் கழித்து சந்திக்கும் தோழிகள் என்பதால் அவர்களுக்குள் பேச எத்தனையோ விஷயங்கள் இருந்தன... கல்லூரி நாட்களை போல ஒருவரை ஒருவர் வாரி... கலாட்டா செய்து... கிண்டல் செய்து என கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர்.
இதில் பெரும்பாலும் கேலி கிண்டல்களுக்கு ஆளானது நந்திதா என்று தனியாக சொல்ல வேண்டியதில்லை...
அம்மா, அப்பா, மற்ற நெருங்கிய உறவினர் என்று யாருமில்லாமல் நடக்கும் திருமணம் என்பதை நந்திதா நினைத்து வருந்தி விடக் கூடாது என்பதற்காகவே தான் அவர்கள் மூன்று பேரும் தங்களின் சொந்த வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு வந்திருந்தார்கள்...
அதனால் தான் உதய் நந்திதா நடுவே இருந்த வயது வித்தியாசத்தை பற்றி கூட பேசாமல் இருந்தார்கள்...
அவர்கள் எதிர்பார்த்தது போலவே நந்திதாவும் சந்தோஷத்தில் மிதந்துக் கொண்டு தான் இருந்தாள்...