Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 25 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ஆச்சர்யத்தில் இருந்து முதலில் வெளி வந்த சரண்யா, “அப்படி எல்லாம் பேசக் கூடாது நிஷா... மரியாதை கொடுத்துப் பேசனும்... சாரி சொல்லு... இப்படி பேர் சொல்லியும் கூப்பிடக் கூடாது... அங்கிள்ன்னு சொல்லு,” என்றாள் அதட்டலாக...
மைத்ரேயிக்கு சரண்யாவின் கோபம் புதிதாக இருந்தது...
நிஷா தவறு செய்யும் நேரங்களில் கொஞ்சமும் பதற்றமடையாமல், கோபப்படாமல், அவளை சரண்யா சரி செய்ய முயல்வதை பல முறை பார்த்து அதிசயப் பட்டிருக்கிறாள் மைத்ரேயி...!
இன்று ரோல் ரிவர்சல் போலும்!
எப்போதும் கோபப் படும் அண்ணன், அமைதியாக பேசுகிறான், கோபமே படாத சரண்யா கோபப்படுகிறாள்...!!!
மைத்ரேயி தனக்குள் யோசனையில் இருந்த நேரத்தில் மித்ரன் அம்மாவிற்கு ‘சேட் லுக்’ கொடுத்துக் கொண்டிருந்த நிஷாவை கையில் தூக்கிக் கொண்டு, மேஜையில் கேக் இருந்த இடத்திற்கு கொண்டு சென்றான். நிஷாவை அங்கிருந்த நாற்காலியின் மீது நிற்க வைத்தான்...
“ஓகே, நிஷா செல்லம்... என் குட்டி பிரின்சஸ் கேக் கட் செய்ய ரெடியா???”
அம்மாவின் கண்டிப்பை எல்லாம் மறந்து, “ரெடி...! ரெடி மித்ரன்,” என கை தட்டி நிஷா ஆர்ப்பரிக்க... மோனிக்காவும் தன் பங்கிற்கு கை தட்டி சிரித்தாள்...
ஜெயந்த் மோனிக்காவையும் நிஷாவின் பக்கத்தில் இருந்த நாற்காலியில் தூக்கி நிற்க வைத்து விட்டு பின்னிருந்து பிடித்துக் கொண்டான்...
பர்த் டே கேக் கட் செய்ய தயாராக மைத்ரேயியும், நளினியும் கூட அங்கே சென்றார்கள்...
சரண்யாவின் மனம் துணுக்குற்றது...