Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 56 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
”என்ன இவ்ளோ நேரம் தூங்கிட்டோம், இந்த ஜனனி என்ன மருந்து போட்டாளோ தெரியலையே இப்படி ஆளையே அசைச்சி போட்டிடுச்சி, இனி என்ன செய்யலாம்” என யோசித்தவனுக்கு அதிசயமாக சம்யுக்தாவின் நினைவு வந்தது
”சம்யுக்தா இருக்காளா, போயிட்டாளா, நியாயம் கேட்டு வந்தவளுக்கு அநியாயம் செஞ்சாச்சி, போன முறையாவது அவள் கேள்வி கேட்டதுக்கு தைரியமா பதில் சொன்னோம், ஏன்னா அப்ப நாம அவளை காப்பாத்தினோம் நம்ம பக்கம் உண்மையிருந்தது ஆனா, இந்த முறை வசமா மாட்டிக்கிட்டோமே, நின்னுப் போன கல்யாணத்துக்கே அவள் நியாயம் கேட்டு நின்னு என் உயிர் எடுத்தா, இப்ப நடந்த கல்யாணத்துக்கு நியாயம் கேட்டா என்ன செய்றது, மன்னிப்பு கேட்டாலும் நாம பண்ண தப்பை சரிகட்ட முடியாது.
கோபத்தில தப்பு செஞ்சிட்டோம், இதனால அவள் வாழ்க்கையும் கேள்விக்குறியாயிடுச்சி, இதை எப்படி சரியாக்கிறது, எப்படியும் அவளுக்கு நம்மளை பிடிக்காது, கண்டிப்பா நம்மளை ஏத்துக்க மாட்டா, பேசாம நாம கட்டின தாலியை நாமளே கழட்டிட்டு அவளை ஊருக்கு அனுப்பி வைச்சிடலாம், இதுக்கப்புறம் அவள் பயத்தில இருப்பா, நம்மகிட்ட நியாயம் கேட்க மாட்டா, போ சொன்னா போயிடுவாள்” என நினைத்தவன் ஒரு முடிவுக்கு வந்து
”சித்தா சித்தா” என சத்தமாக அழைக்க சம்யுக்தா வந்து வாசலில் நின்றாள். அவளைக் கண்டதும் குற்ற உணர்ச்சியில் தலை குனிந்தான் தில்லை. அவளோ
”சித்தன் இல்லை வெளிய போயிருக்காரு” என்றாள் அமைதியாக, அவனோ அவளின் அமைதியைக் கண்டு
”இன்னும் நீ எதுக்காக இங்க இருக்கனும், கிளம்ப வேண்டியதுதானே”
”எங்க போறது” என கேட்க அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது, சட்டென அவளைப் பார்த்தான், அவளோ சோகமாக இருந்தாள்
”கோபத்தில நடந்த விசயத்தை பெரிசாக்க வேணாம், ஊர் உலகத்துக்கு தெரியறதுக்கு முன்னாடி அந்த தாலியை நானே கழட்டிடறேன், நீ உன் ஊரை பார்த்துட்டு போயிடு”