பின், சிறிது நேரம் அனைவருடனும் பேருக்கு பேசிக் கொண்டிருந்து விட்டு, மகளை அழைத்துச் சென்றாள்...
அவர்கள் இருவரும் சென்ற பிறகு,
“நிஷா பர்த் டேன்னு ஏன்மா எனக்கு ஃபோன் செஞ்சு சொல்லலை? நான் ஏதாவது கிஃப்ட் வாங்கிட்டு வந்திருப்பேனே???” என அம்மாவிடம் குறைப் பட்டான் மித்ரன்.
“சரண்யாக்கு அதெல்லாம் பிடிக்காதுப்பா... கேக் இங்கே கட் செய்யலாம்னு சொனனதுக்கே ரொம்ப கஷ்டப் பட்டு தான் சம்மதிச்சா... நிஷா வேற நீ வந்தா தான் கேக் கட் செய்வேன்னு சொல்லி ரொம்ப அடம் பிடிச்சுட்டா...”
“நிஷா எனக்கு செல்லம்மா! ஆனாலும் அந்த சரண்யா ரொம்ப தான் பந்தா செஞ்சுக்குறா... ஏதோ நிஷாவுக்காக சும்மா இருக்கேன்... சரி, அவ எப்படியோ போகட்டும் நான் ட்ரெஸ் சேன்ஜ் செய்துட்டு வந்து சாப்பிடுறேன்,” என்று சொல்லி விட்டு தன் அறைக்கு சென்றான் மித்ரன்.
மைத்ரேயிக்கு அவர்கள் இருவரும் பேசியது காதில் விழுந்தது. ஆனால் அந்த பேச்சில் கலந்துக் கொள்ளாமல் மொபைலில் இருந்த ஃபோட்டோக்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.
மித்ரன் சென்ற பின் மகளை பார்த்த நளினி,
“ப்ச்... மைத்தி, அந்த ஃபோனை எடுத்து வச்சுட்டு, போய் மோனியை தூக்கு... எப்போ பாரு ஃபோனும் கையுமாவே சுத்து,” என்றாள்.
அம்மாவின் அதட்டலுக்கு கொஞ்சமும் அசராமல், “அம்மா, இந்த ஃபோட்டோஸ் பாருங்களேன்,” என்றாள் மைத்ரேயி.
மைத்ரேயியின் ஃபோனை வாங்கி பார்த்த நளினியின் கண்கள் விரிந்தன..!
நிஷாவின் ஒரு பக்கம் மித்ரனும் மறுபக்கம் சரண்யாவும் நின்றுக் கொண்டிருந்தார்கள்.