ஆனால், ‘இன்னொரு தடவையா... ஹுஹும் வாய்ப்பே இல்லை... யார் அந்த அஜய் கிட்ட போய் மாட்டிட்டு முழிக்குறது,’ என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்...
இருந்தாலும், அது என்னவோ அஜயை பற்றி யோசித்த உடனேயே அவளுக்குள் ஒரு இனிய உணர்வு ஏற்படத் தான் செய்தது!!!
✽✽✽
காலிங் பெல்லை ஒலிக்க விட்டு விட்டு காத்திருந்தான் அஜய். அவன் அதிக நேரம் காத்திருக்க வேண்டி இருக்காமல் உடனேயே கதவு திறந்தது. அம்மாவை எதிர்பார்த்து பேச வாயை திறந்தவன், அங்கே ரோஹினி நிற்கவும் வாயை மூடிக் கொண்டு அவளைப் பார்த்தான்.
சாரதாவின் கைங்கரியத்தில் அன்று புது விதமான ஹேர்ஸ்டைலில் இருந்தாள் ரோஹினி.
நெற்றியில் வந்து விழுந்த முடியை கைகளால் அவள் ஒதுக்கி தள்ளி விடவும், அது அவனுக்குள் என்னவோ செய்தது.
அவனுடைய பார்வை ரோஹினியையும் பாதித்தது...
“அம்மா குளிக்குறாங்க... நீங்க ஒரு மணி போல தான் வருவீங்கன்னு சொன்னாங்க,” என்றாள் அவனின் பார்வையையும், கவனத்தையும் திருப்புவதற்காக.
“ஆமா... இன்னைக்கு சீக்கிரமா பசிச்சது,” என்று அவனின் உதடுகள் சொன்னாலும், அவனின் கண்ணில் மின்னிய பளிச் பளிச் பாஷை ‘உன்னைப் பார்க்க தான் சீக்கிரம் வந்தேன்,’ என்று தெளிவாக அவளிடம் சொன்னது...
காலையை போலவே இப்போதும் அவளின் இதயம் படபடத்தது... ஆனாலும் அஜயின் பார்வையும்... அது சொன்ன செய்தியும் அவளுக்கு இனிக்கத் தான் செய்தது...
அது புரிந்ததால், அதுவே ஒரு பக்கம் ரோஹினிக்கு கலக்கத்தையும் கொடுத்தது...