தடை இல்லாமல் சிறகடித்து பறக்கத் தொடங்கியது...
சாரதாவின் பக்கத்தில் இருப்பது அவளுக்கு பிடித்திருந்தது என்றாலும், அவளின் மனசு இப்போது இறக்கை கட்டி சுற்றுவதற்கு காரணம் சாரதா இல்லை, அவரின் மகன் என்பது ரோஹினிக்கு தெளிவாகவே புரிந்தது... அவள் அங்கே தற்காலிகமாக தங்க வந்திருப்பவள்... இன்னும் சில நாட்களில் அவளுடைய தீவிற்கே திரும்பி போய் விடுவாள்... அஜய்க்கும் அவள் மீது அன்பு ஏற்பட்டால் கூட, அவளுக்காக அவனின் குடும்பத்தை மறந்து அவளின் தீவிற்கு வர முடியுமா என்ன???
இந்த ஆசையின் எதிர்காலம் என்ன??? ரோஹினிக்கு தெரியவில்லை...
ஆனால், அதற்கு மேல் காரண காரியம் ஆராய அவளுக்கு விருப்பம் இருக்கவில்லை என்பதால், அதை பற்றிய ஆராய்ச்சியில் இறங்காமல் அப்போது மனசுக்குள் இருந்த இனிய உணர்வை அனுபவித்து மகிழ்ந்தாள்...
அஜயை வழி அனுப்பி விட்டு வந்த சாரதா, நேராக ரோஹினியிடம் வந்தாள்.
“என்னாச்சு ரோஹினிம்மா? ஏன் அப்போ எப்படியோ இருந்த?? அஜய் கூட இன்னைக்கு எப்போவும் போல கோபப்படலையே?”
சாரதா அஜய் பற்றி பேசவும் ரோஹினியின் முகத்தில் மெல்லிய புன்னகை வந்தது.
“நான் வேற யோசிச்சுட்டு இருந்தேன்... நான் ராணி ஆனதும் என்ன எல்லாம் செய்யலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன்...”
ரோஹினியின் குரலில் கலந்திருந்த உற்சாகம் சாரதாவிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது!
“இவ்வளவு சந்தோஷமா சொல்றீயே... நல்ல மாற்றம் தான்... எல்லோருக்கும் இந்த மாதிரி ராணி ஆகுற வாய்ப்பு கிடைக்காது ரோஹினிம்மா... நீ நல்ல புத்திசாலி... யோசிச்சு உன் ஊர்ல நல்ல நல்ல மாற்றங்களை கொண்டு வா... அங்கே எல்லோரும் எந்த அளவுக்கு உங்க அரச குடும்பம் மேல நம்பிக்கை வச்சிருந்தா, தேர்தல் எல்லாம் வேண்டாம்னு சொல்லி இருப்பாங்க...