“...உங்களைப் பத்தி மட்டும் இல்லை, அப்பா பொறுப்பில்லாதவராம். அப்படி இப்படின்னு நிறைய சொல்றான் அத்தை...“
சித்ரா ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
“என்ன அத்தை அமைதியா இருக்கீங்க?”
“நீ சொல்றது வச்சு பார்த்தா ஜெய் நல்லவன் பாப்பா. அவனை தப்பு சொல்ல முடியாது. இப்படி ஒருத்தனை கண்டுப்பிடிக்குறது சுலபம் கிடையாது!”
புவனேஸ்வரியின் முகம் மலர்ந்தது. சித்ரா தொடர்ந்துப் பேசினாள்.
“ஆனால் நீ யோசிக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு பாப்பா. ஜெய்யை எனக்கு எப்படி தெரியும் தெரியுமா?” சித்ரா நடுரோட்டில் ஜெய் செய்துக் கொண்டிருந்த ஆர்ப்பாட்டத்தை, சுரேஷிடம் நடந்துக் கொண்ட விதத்தை சொன்னாள்.
“உன் மாமா சொன்னதுப் போல அவன் செய்தது சரி தான். நானும் மறுக்கலை. ஆனால் அவனே நம்ம குடும்பத்துல ஒருத்தன்னு யோசிச்சுப் பார்க்கும் போது ஏதேதோ கேள்விகள் வருது. நாம ரோட்டுல போறோம் ஏதோ அசிங்கம் இருக்கு. நாம ஒதுங்கிப் போவோம். ஜெய் அந்த மாதிரி கிடையாது. அதைப் பத்தி சத்தமா குரல் கொடுக்குறவன். அவன் செய்றது தான் சரி. ஆனால் உன் அத்தையா யோசிக்கும் போது அது என் கண்ணுக்கு பொறுப்பில்லாத தனமா படுது. அவன் இப்படி நடந்துக்குறதை உன் அப்பா, அக்கா எல்லோரும் எப்படி எடுத்துப்பாங்கன்னு நினைக்குற?”
புவனேஸ்வரி இப்போது அமைதியாக அமர்ந்திருந்தாள்.