✽✽✽
புவனேஸ்வரி இருட்டில் வட்டமாக தெரிந்த சீலிங் ஃபேனின் ப்ளேடுகளின் நிழல் உருவத்தை பார்த்துக் கொண்டே படுத்திருந்தாள். அன்றும் சரி, இன்றும் சரி, அவள் சித்ரா அத்தை கொடுத்த அறிவுரையை தவறென்று நினைத்ததே இல்லை.
பதினேழு வயதில் காதல் என்று மனதை அலைப் பாய விட்டது எந்த விதத்திலும் நியாயப் படுத்த முடியாத ஒன்று தான்! ஜெய் அவனின் எதிர்காலம் பற்றி கனவுகள் வைத்திருந்தான். அவள் என்ன வைத்திருந்தாள்??? காதல், கல்யாணம் தாண்டி வாழ்க்கை இல்லையா என்ன?
அவளின் அம்மா இருந்திருந்தால் கூட சித்ரா அத்தை அளவிற்கு பொறுமையாக அவளிடம் எடுத்து சொல்லி இருப்பார்களோ என்னவோ?!
அன்று ஜெய்யை பிரிவது என்ற முடிவை எடுத்தவள் அவள் தான்!
ஜெய் நல்லவன் என்பதில் அவளுக்கு சின்ன அளவில் கூட சந்தேகமில்லை! அவனின் காதல் மீதும் அவளுக்கு கேள்விகள் இல்லை. ஆனால் அவர்கள் இருவரின் உறவினால் பல ரகமான வருத்தங்கள், துன்பங்கள் ஏற்படும் என்பதை யோசித்தப் போது அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
அவர்கள் காதல் வெற்றிப் பெறுவதால் ஏற்படும் மகிழ்ச்சியை விட, அவர்கள் காதல் தோல்வி அடைவதால் ஜெய்க்கு கிடைக்கும் சுதந்திரம் பெரியது என்று அவளுக்கு தோன்றியது!