இப்போதும் இருந்தது. அவளின் காதல் வந்த வயது தவறாக இருக்கலாம், ஆனால் அந்த காதல் தவறில்லை. அது உண்மையானது!
ராஜேஸ்வரியின் திருமணத்திற்குப் பிறகு பலரும் புவனேஸ்வரியை பெண் கேட்க முயன்றிருக்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்களின் வசதி குறைவு என்று குறைக்காத குறையாக துரத்தி இருக்கிறார் பரமசிவம். அதை தாண்டி வந்தவர்களை சித்ராவிடம் ஏதாவது காரணம் சொல்லி புவனேஸ்வரி மறுத்து விட்டிருந்தாள். சித்ராவிற்கும் அப்படி வந்த வரன்கள் மேலே நல்ல அபிப்ராயம் இல்லை என்பதால் இதுவரை பிரச்சனை எழவில்லை.
✽✽✽
தூக்கமே வராமல் பழைய நினைவுகளுடன் விழித்திருந்த புவனேஸ்வரி விடிந்தப் பிறகு தான் அவளையும் அறியாமல் கண்களை மூடினாள். அந்த தூக்கத்திற்கும் ஆயுள் குறைவாக இருந்தது..
“அதெப்படி அத்தை என் தங்கை என் வீட்டுல தங்காம இங்கே தங்குறது?” காதைப் பிளப்பதுப் போல சத்தமாக ஒலித்த ராஜேஸ்வரியின் குரல் புவனேஸ்வரியை தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்பியது.
நேரம் ஏழு மணியை தாண்டி விட்டது புரிந்து அவசர அவசரமாக படுக்கையில் இருந்து எழுந்தாள்.
அவள் குளித்து உடை மாற்றி வந்தப் போது ராஜேஸ்வரி அதே ஹை பிட்ச் குரலில் பேசிக் கொண்டிருந்தாள்.
“இரண்டுப் பசங்களை பார்துக்குறது ஈஸியா அத்தை? எனக்கு முதுகெல்லாம் வலிக்குது. அவ வந்தா எனக்கு வசதியா இருக்கும்.”