“அதுக்கு புவனேஸ்வரி எதுக்கு ராஜி? இரண்டு வேலைக்காரங்களை வச்சுக்கோ. ராம் பிஸ்னஸ் எல்லாம் நல்லா தானே போகுது? வேலைக்கு ஆள் வைக்க முடியாத அளவுக்கு ஒன்னும் இல்லையே?” சித்ரா நாசுக்காக ராஜேஸ்வரியின் கோரிக்கையை மறுத்தாள்.
“அவர் பிஸ்னஸ்க்கு என்ன அத்தை அமோகமா போகுது. என்னை கல்யாணம் செய்தப் பிறகு லாபம் அதிகமா இருக்குன்னு அவர் மட்டும் இல்லை, அத்தை மாமா கூட சொன்னாங்க!”
“அப்புறம் என்ன? வேலைக்கு ஆளுங்களை வை.”
“எங்கே இருந்து ஆளுங்க கிடைக்குறாங்க அத்தை? அப்படியே கிடைச்சாலும் குழந்தைங்களை சரியா பார்த்துப்பாங்களான்னு எப்படி சொல்றது? குழந்தைங்க பர்த்டே வேற அடுத்த வாரம் வருது.”
“அட, இந்த இரட்டை க்யூட்டீஸ் பிறந்து இரண்டு வருஷம் முடிஞ்சிருச்சா!”
அதற்கு மேல் அமைதியாக நிற்பது சரியாக இருக்காது என்று தோன்ற, புவனேஸ்வரி அக்காவை அப்போது தான் பார்த்தவளைப் போல பேசினாள்.
“அக்கா, உன் குரல் போல இருந்துச்சு. நீயா இருக்காதுன்னு நினைச்சுட்டு வந்தேன். நீயே தான்! குழந்தைங்க எங்கே அக்கா?”
“ரொம்ப அக்கறை இருக்குற மாதிரி கேட்காதே. அப்பா கிளம்பி பத்து நாளாச்சு, நீ இங்கே ராணி போல நல்லா தூங்கி தூங்கி ரெஸ்ட் எடுக்குற. என் மேலயோ என் பசங்க மேலேயோ உனக்கென்ன அக்கறை?”