அவன் பார்வை அவளை விட்டு இம்மியும் அகளாமல் இருக்கவும் நந்துவுக்கு நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டது. அவளுக்கு அவன் பார்வையை எப்படி எடுத்துக் கொள்வதென்று தெரியவில்லை. சில நேரம் மிகவும் நெருக்கமாக இருப்பதுபோல் தோன்றச் செய்கிறான், பல நேரம் பார்வையிலேயே தூரமாய் நிறுத்துகிறான். பெயரைக் கேட்டு அந்நியமாய் இருப்பவன் உடனே உரிமையுடன் கையை பிடிக்கிறான். இவன் சுடும் சூரியனா இல்லை குளிர் நிலவா என்று வகைப்படுத்த முடியாமல் தடுமாறினாள். இதே யோசனையில் இருந்தவள் படபடவென்று கைதட்டும் சத்தமும் விசிலும் கேட்கவும் நிமிர்ந்து பார்க்க, சந்துருவின் கையில் ஒருவன் கிதாரை திணிக்க அதை அவன் மறுத்துக் கொண்டிருந்தான். பிறகு எல்லோரும் ஒத்த குரலில் 'சந்துரு, சந்துரு' என்று கத்த அதற்கு மேலும் மறுக்க முடியாமல் கிதாருடன் நடுவில் இருந்த சேரில் அமர்ந்தான். இடமே நிசப்தமாக கண்களை மூடி சில நிமிடங்கள் அமைதியானவன், கண்களைத் திறக்காமலே கிதாரை மீட்டியபடி பாட ஆரம்பித்தான். அவன் கனீர் குரல் அவன் மனதில் உள்ள வலியை அப்படியே காட்டியது.
"மனசெல்லாம் உன்னை நினைத்து,
வலிக்குது தோழா....
நினைவெல்லாம் நீதானே,
நேரில் வாடா....
வானென்று உன்னை நினைத்தேன்,
வானவில்லாய் மறைந்தாயே...
திருக்குறலாய் வாழ்வில் வந்து,
இரண்டடியில் மறைந்தாயே...
கண்மூடினால் ,
இருளெல்லாம் நீயே தெரிகிறாய்...
வாய்பேசினால்,
மொழியாக நீயே இருக்கிறாய்..."
ஆழ்ந்து பாடிவிட்டு மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தவன் சூழ்நிலை சோகமாக மாறியதைப் பார்த்து, தான் உணர்ச்சிவசப்பட்டதை உணர்ந்து உதட்டைக் கடித்துக் கொள்ள, அவன் நண்பனும் கலங்கிய கண்களுடன் அவன் தோளைக் கட்டிக் கொண்டான். எப்படி சூழ்நிலையை மாற்றுவது என்று எண்ணியபடி நிமிர்ந்து நந்துவைப் பார்த்தவன், அவள் கலங்கிய விழிகளுடன் அவனை சமாதானப் படுத்த துடிப்பதை அவள் பார்வையிலேயே உணர்ந்தவனுக்கு இருள் மறைந்து மனதில் சந்தோஷ சாரல் அடித்தது. அவளையே பார்த்தவன் கைகள் தானாக கிதாரை மீட்டியது.
"என் ஐன்னலில் தெரிவது
நிலவுதானா...
நான் சாலையில் தொலைத்தது
இவளைத் தானா...
நான் கண்டதும் காண்பதும்
கனவுதானா...
என் கடவுளின் முகவரி
எதிரில் தானா..."
என்று பாட, சூழ்நிலை மெதுவாக மாறி பழைய உற்சாகம் திரும்ப வந்து, அவன் பாட பாட கூடவே கைதட்ட வைத்தது.
நந்துவிற்கு அவன் தன்னையே பார்த்தபடி வாசித்த அந்த காட்சி இந்த ஜென்மத்தில் தன் மனதைவிட்டு அகலாது என்பது நிச்சயமானது. அவளுக்கு தன் மனதில் இருந்த குழப்பம் எல்லாம் மறைந்தது. அவன் மனதில் என்ன இருந்தாலும் பரவாயில்லை, தன்னால் அவனைத் தவிற வேறு யாரையும் நினைக்க கூட முடியாது என்று அவளுக்கு உறுதியானது.
இங்கு நடந்த பார்வை பரிமாற்றத்தை இன்னும் பலகண்கள் பார்த்தது. அதில் அனு ஆச்சயர்யமாய் நந்துவைப் பார்க்க, ஆரு கேள்வியாய் பார்த்தாள்.கவின் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு சந்துருவை நோக்கிச் சென்றான். அவனைத் தொடர்ந்து அனுவும் எழுந்து சென்றாள். அதைப் பார்த்த நந்துவிற்கு நெஞ்சம் படபடக்க ஆருவின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அவள் கைகள் சில்லிட்டிருப்பதை உணர்ந்த ஆரு கவலையுடன் நந்துவைப் பார்த்தாள்.
"சார்.. கலக்கிட்டீங்க" என்று கவின் கூற, சற்று யோசனையுடன் அவனை சந்துரு பார்க்கவும்
"கவின் சார்.. நந்திதாவுடைய friend.." என்றான். 'நந்திதா' என்ற வார்த்தையில் அழுத்தத்தோடு.
அவனை கூர்ந்து பார்த்த சந்துரு, உதட்டில் சிறு புன்னகையுடன்,
"Thanks da" என்றான் அவன் தோளில் தட்டி. அவன் செயலில் கவினுக்கு சற்று கலக்கம் குறைந்தது. அனுவும் பின்னோடு வந்து
“சார்.. சூப்பர்” என்று சொல்ல, முகம் மாறியவன் ஒன்றும் கூறாமல் இடத்தை விட்டு அகன்றான்.
“ம்ச்.. உன்ன யாரு இங்க வர சொன்னா.. நல்ல chance-அ கெடுத்திட்ட..” என்று கவின் அலுத்துக் கொள்ள,
“என்னடா.. என்னவோ நீ propose பண்ணப்போனதை நான் தடுத்திட்ட மாதிரி ஃபீல் பண்ற.. நானும் பாராட்ட தான்டா செஞ்சேன்.. அதுக்கு ஏன் அவரு அப்படி மூஞ்ச திருப்பிக்கிறாரு..?” என்று சந்துருவை முறைத்தபடியே சொல்ல,
“ம்க்கும்....”
பின்னாடி செருமும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பிப் பார்த்த அனு (அன்றொருநாள் கண்களால் சிரித்தவன், அவன் சந்துருவின் நெருங்கிய தோழன் என்று சற்று முன்தான் தெரிந்தது) திருதிருவென முழிக்க.. பின்னால் நின்றவன் அவள் இடையை சுட்டிக் காட்ட, குனிந்து பார்த்தவள் கோபமாக முறைக்க
“ம்ச்..” என்றவன் “பின்னாடி” எனவும்,
கவின் அவள் பின்னாடி இருந்த guitar-ஐ எடுத்து அவனிடம் குடுத்து விட்டு
“கதிர் சார்.. நீங்களும் நல்லா guitar வாசிப்பீங்கல்ல, நீங்க ஏன் வாசிக்கல?” என்று கேட்க,
‘கதிர் என்று மனதிற்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டாள் அனு. ஒன்றும் சொல்லாமல் லேசாக புன்னகைத்தவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அனு.
“பார்க்கலாம்..” என்று பொதுவாக சொல்லிவிட்டு பைக்கில் தனக்காக காத்திருந்த சந்துருவை நோக்கிச் சென்றான். பிறகு பைக்கில் ஏறி இருவரும் மறைந்தனர்.
“கதிர் சாரை உனக்கு முன்னாடியே தெரியுமா?” கவின் கேட்க, மையமாக தலை ஆட்டி வைத்தாள் அனு.
ஒரு வழியாக function முடிந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
அடுத்த நாள் சனி விடுமுறை என்பதால் இரவு முழுவதும் அனுவின் அறையில் ஒரே அரட்டை, அதிகாலையில் தான் கண்ணயர்ந்தார்கள்.
மறுநாள் காலை ஜான் வந்து ஜெனியை அழைத்துச் சென்றான். பிறகு இவர்கள் மூவரும் நளினியுடன் கிளம்பி பிரபலமான ஜவுளி கடையில் நந்துவுக்கு western உடைகள் கொஞ்சம் வாங்கி விட்டு, அடுத்து வரும் ப்ரொகிராம்க்காக ஒரே மாதிரியான வொயிட் கலர் சுடி ஜெனிக்கும் சேர்த்து வாங்கி வந்தனர்.
மறுநாள் ஒரு வாரத்திற்கான உடைகளை துவைத்து, iron செய்து ரெடி ஆவதற்கு சரியாக இருந்த்து.
இடையில் நந்து சிறு சிறு வாக்கியங்கள் தீப்தியுடன் பேச, அவளும் என்ன நினைத்தாளோ, நந்துவுடன் சுமூகமாகவே நடந்து கொண்டாள். கோவிலுக்கு போய்விட்டு பிரசாதம் கொடுத்தால் அதை புன்னகையுடன் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு இயல்பாக பழகினாள். ஆனால் அது நந்துவுடன் மட்டும் தான். அதுவும் அவர்கள் ரூமிற்குள் மட்டும் தான். வெளியே எப்போதும் அதே ராங்கி தான். நந்து ஏன் என்று கேட்டு உள்ளதையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று விட்டு விட்டாள். அப்பப்போ ஜன்னலை வெறித்துக் கொண்டு பார்ப்பதை பார்த்தால் நந்துவிற்கு கஷ்டமாக இருக்கும். ஆனால் அவளை நெருங்க முடியாது. அதனால் அவளை அவள் போக்கிலே விட்டு விட்டாள்.
அடுத்தடுத்த வாரங்களில் candle night, movie night என்று ஒவ்வொன்றாக ஜாலியாக சென்றது. அதுவும் candle night அன்றைக்கு மொத்த காலேஜும் வெள்ளை உடையில் வர வேண்டும் என்றுவிட பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருந்தது.
நந்து, ஆரு, ஜெனி மற்றும் அனு அனைவரும் தாங்கள் முன்பே எடுத்து வைத்திருந்த white color சுடியை அணிந்து வந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் அழகாய் இருந்தது. கையில் கேண்டிலுடன் மொத்த batch-உம் photo எடுத்துக் கொண்டனர். அந்த photoக்கள் எல்லாம் காலேஜ் magazine-இல் வெளிவரும், மற்றும் வேண்டும் என்பவர்கள் தனியாகவும் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். தாமாக தனியாக வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளலாம்.