அவள் மவுனம் அவனை வதைக்க, “யு தேர் சந்தியா??”
“ம்ம்”, சொல்லும் போதே அவளை அறியாமல் கண் கலங்கினாள். தவிப்பை மறைப்பது எளிதல்லவே!
அந்த “ம்ம்…” மே அவள் ஏதோ அசௌகரியமாய் உணர்வதை தெரிவிக்க மேலும் அவளிடம் அதைப் பற்றி பேசாமல், “ஹே...காலேஜ்ல இந்த பாட்டை நான் பாடினா கண்டிப்பா எல்லாரும் ஒன்ஸ் மோர் கேப்பாங்க...அந்த அளவுக்கு என் வாய்ஸ்க்கு கரக்ட்டா செட் ஆகும். ஹிந்தி பாட்டு. கேக்குறியா?” கனிவாக கேட்டான்.
“ம்ம்ம்” , என்ற பதில் தான் இதற்கும். ஆனால் இந்த “ம்ம்ம்" மை உதிர்த்த வேகம் அவள் ஆர்வத்தை அவனுக்கு காட்ட, பூரித்தான்.
“முதல்ல இந்த பாட்டுக்கு அர்த்தத்தை சொல்லிடுறேன்…”
“இந்த பெண்ணை பார்த்த பொழுது அவள் எப்படி இருந்தா தெரியுமா…
மலரும் ரோஜாப்பூ போல…
கவிஞனின் கனவு போல….
பிரகாசமான ஒளிக்கீற்றை போல…
காட்டில் ஓடும் மான் போல…
நிலாக்காயும் இரவு போல…
இதமான வார்த்தை போல…
கோவிலில் எரியும் தீபத்தை போல…. ” என்று சொல்லிவிட்டு,
“கண்களை மூடியவன் கண் முன், முதன் முதலில் பார்த்த சந்தியா தோன்ற ,
“ஏக்கு லடுக்கி கோ தேகா தோ ஏசே லகா…” என்ற பாடலை உணர்ச்சிப்பூர்வமாக பாடினான். இசையை ரசிக்க மொழி தெரிய வேண்டிய கட்டாயம் இல்லையே! அவள் உருகி விட்டாள்..அவளை நினைத்து பாடுகிறான் என அவள் அறிந்ததே!
பாடி முடித்த பின்னும் அவள் நினைவில் மிதந்தான். எத்தனை நிமிடங்கள் அமைதியாக கழிந்ததோ! இயல்பு நிலைக்கு திரும்பிய சந்தியா, “ஒன்ஸ் மோர் கார்த்திக்” கொஞ்சலாக கெஞ்சினாள்.
“ஊஹூம்..என்னால முடியல” ஏக்கம் குடிகொண்ட வார்த்தைகளாய் வெளி வந்தன. அவன் மேலும் “ஐ நீட் ஹெர்...” கிறக்கமான குரலில் சொன்னான்.
அவளிடம் இருந்து பதில் இல்லை.
சில நொடி காத்திருந்து விட்டு அவனே மவுனத்தை கலைத்தான். “சரி...அஞ்சு நிமிஷ டைம் முடிந்து போச்சு…பை”, சோர்ந்த குரலில் சொன்னான்.
“குட் நைட் கார்த்திக்”, சொல்லும் போது அவன் உணர்வையே பிரதிபலித்தாள்.
அவளின் வருத்தத்தை போக்கும் பொருட்டு, “நாளைக்கும் இதே மாதிரி பைவ் மினிட்ஸ் ஒதுக்குங்க பாஸ். உங்க புண்ணியத்தில ஐந்து மணி நேரமாவது நல்லா தூங்குவேன்” போலியான பணிவுடன் கோரிக்கை வைத்தான்.
“எட்டு மணி நேரம் தூங்கினா தான் உடம்புக்கு நல்லது” என்றாள் அக்கறையுடன்.
“ஓகே பாஸ்… இந்த ஒரு வாரம் மன்னிச்சு விட்டுடுங்க. ஏகப்பட்ட பேக்லாக் இருக்கு. அப்படியே ஒரு கைன்ட் ரிக்வஸ்ட்”, பம்மினான்.
“ம்ம்ம்ம்????”, அவளிடம் இருந்து இந்த “ம்ம்” கேள்வியாய் ஒலித்தது.
“கொஞ்சம் நீங்களும் வேலை பாத்தா நல்லாயிருக்கும். நேத்து வேலை இன்னும் முடியலை. கொஞ்சம் கருணை காட்டுங்க பாஸ்” கெஞ்சினான்.
“ம்ம்ம் ஹா ஹா”, இந்த “ம்ம்” சம்மதமாய் சிரிப்புடன் ஒலிப்பதை கேட்டு சந்தோஷமாய் இணைப்பை துண்டித்தான்.
புழல் சிறைச்சாலை
பார்வையாளர் நேரம் 10:30 மணி என சிறைக் காவலர் சொல்லி விட பச்சையப்பனை பார்த்து செல்லும் முடிவுடன் காத்திருந்தான் பாண்டியன். ஒரு வழியாக அவனை பார்க்க அனுமதிக்க, மெல்லிய மிக நெருக்கமான கம்பிகளால் ஆன தடுப்பு சுவரில் பார்வையாளர் புறம் காத்திருந்தான் பாண்டியன். குறுக்காக ஓடிய கம்பிகளும் நெடுக்காக ஓடிய கம்பிகளும் இணையும் இடங்களில் உருவாக்கி வைத்திருந்த சதுரங்களில் சிலவற்றில் விரல் நுனியை மட்டும் திணித்து பற்றி நின்று கொண்டிருந்த பாண்டியனை பார்த்து முகம் மலர, வாயெல்லாம் பல்லாக கைதிகள் பக்கம் இருந்த கதவை திறந்து கொண்டு பாண்டியனை நோக்கி வந்த பச்சையப்பன்,
“புது மாப்பிள்ளை புதையலோடு வந்திருக்காக” பாண்டியன் முகத்தில் சிவந்த காயங்களை பார்த்துக் கேட்ட படி வந்தான்.
“ப்ச்...நான் புது மாப்பிளை இல்ல பச்சை. நிச்சயம் நின்னு போச்சு.” என்றான் வருத்தத்துடன்.
“என்னது நிச்சயம் நின்னு போச்சா? போன வாரம் தான உனக்கு தன்ராசு மாமன் மவளை முடிக்க போறாகன்னு ஆத்தா சொல்லிபுட்டு போனாளே”
அதிர்ச்சியாய் கேட்டான் பச்சை.
பாண்டியன் நடந்ததை எல்லாம் விவரிக்க கேட்டு கொந்தளித்தான் பச்சையப்பன். பச்சையப்பன் பாண்டியனின் தந்தை வழி சொந்தம். சிறு வயதிலிருந்தே பாண்டியன் மேல் ஒரு தனி பாசம் உண்டு அவனுக்கு. படிப்பு வராமல், உழைத்து முன்னேறும் எண்ணம் இன்றி ஊதாரியாய் சுற்றித் திரிந்தவன், பின் அந்த பகுதி ரவுடி கும்பலில் இணைந்து பல்வேறு குற்றங்களை செய்து வருபவன்.
“அந்த எடுப்பட்ட பய உன்னை நம்ப வைச்சு கழுத்துருட்டானா? அவன் சங்கை அறுக்காமா விட மாட்டேன்” சீறினான் பச்சை.
“பச்சை, இது எல்லாத்துக்கும் காரணம் அந்த சிவப்பி சந்தியா தான். பத்து வருஷத்துக்கு முன்னாடி ஊர்காரங்க முன்னாடி என்னை அசிங்கப்படுத்துனா. இப்போ வீடு தேடு போலீஸ்காரனுங்க அனுப்பி, குடியிருக்கிற இடத்தில அசிங்கப்பட வைத்துத்துட்டா. அவ அதோட விடலை பச்சை. இங்க பாரு ” என சொல்லிக் கொண்டே தனது டி-ஷர்ட்டை தூக்கி காண்பித்தான். அவன் மார்ப்பில் வரி வரியா ரத்த காயங்கள்..
“ நைட் எல்லாம் ஒரே வலி. பிரண்டு கூட படுக்க முடியலை. முதுகுலையும் காயம் பச்சை. எந்த பக்கம் திரும்பினாலும் வலி உயிர் போயிருச்சு” வேதனையுடன் சொன்னான் பாண்டியன்.
“நேத்து வேதனையில் உடம்பெல்லாம் காந்துனப்போ, என்னமோ தெரியலை எனக்கு உன் நியாபகம் வந்தது. என்னை முகத்தில எத்துன அவ பெரியப்பனை மூச்சுக்கூட விட முடியாத படி அவன் முகரையை பேத்து எடுத்தியே அது நியாபகம் வந்தது. பச்சை எனக்காக எதையும் செய்வான்னு ஆத்தாகிட்ட சொல்லிட்டு உன்னை தேடி வந்தேன்” என்றான் பாண்டியன் நெகிழ்ச்சியுடன்.
ஊர் பாசமும், உறவு பாசமும் மட்டும் அல்லாது சிறு வயது முதல் பழகின பாசமும் கண்ணை மறைக்க, “சரியா சொன்ன பங்காளி. உன்னை உடம்பு முழுக்க காயமாக்குனவளை சும்மா விடுவேனா...அந்த சிவப்பிக்கு என்ன நெஞ்சழுத்தம் இருக்கணும்? அவளை...” என சொல்லும் போதே கண்களில் கோபம் கொப்பளிக்க பல்லை கடித்தவன், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு,
“மத்ததை இங்க வைச்சு பேச வேண்டாம். இன்னும் பத்து நாள் பொறுத்துக்கோ நான் செயிலுல்ல இருந்து வெளிய வந்தததும் உன்கிட்ட பேசுறேன். நீ கவலைப்படாம வீட்டிக்கு போ.” தீர்மானமாக சொன்னான் பச்சை. தன்னை காட்டிக் கொள்ளாமல் குற்றம் செய்வதில் அவன் கில்லாடி. என்ன குற்றம் செய்தாலும் சாட்சி இல்லை என அவன் பத்து நாளில் வெளியே வந்து விடுவான்… ஒரு நிரபராதி தண்டிக்கப் படக்கூடாது என்ற நோக்கில் எழுதிய சட்டம் ஆயிரம் குற்றவாளிகள் தப்பி செல்வதற்கு அல்லவா சாதகமாகி விடுகிறது!
அவன் செய்யாத கொலையா...கற்பழிப்பா….கல்வீச்சா...ஆள் கடத்தலா….உயிர் பிரியும் ஓலத்தை கேட்டு கூட கலங்காமல் கல் நெஞ்சானவனுக்கு சந்தியா ஒரு பொருட்டே அல்ல!
ஆட்டம் தொடரும் ...
{kunena_discuss:610}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.