பதில் பேசாமல் எழுந்து அனுவுடன் நடந்தார் அப்பா. 'நான் தேவையில்லை வசந்த் மட்டும் போதும் என்று சொல்லாமல் சொல்கிறாளா என் மகள்?
அவர் 'நகர்ந்தவுடன் கேட்டான் வசந்த் 'என்ன அர்ச்சனா நைட் நல்ல தூக்கமா?'
'இல்லப்பா. வசந்த் வசந்த்ன்னு உங்களை பத்தியே யோசிச்சு ராத்திரி பூர தூங்கவே இல்லை தெரியுமா?
அடுத்த நொடி சட்டென இருவரும் சிரித்த சிரிப்பொலி அறைக்கு வெளியே இருந்த அப்பாவின் காதில் விழ சற்று தடுமாறிய படியே நடந்தார் அப்பா.
அனுவுடன் வசந்த் வீட்டிற்கு வந்தார் அர்ச்சனாவின் அப்பா. மன நிறைவோடு அவரை உபசரித்தார் வசந்தின் அப்பா.
அந்த வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து அவரை வியப்பில் ஆழ்த்திய விஷயம் அனுவின் மீது வசந்தின் அப்பா காட்டிய அளவுகடந்த பாசம்.
அவளை அவர் தாங்கிய விதமும், வார்த்தைக்கு வார்த்தை எங்க அனு, எங்க அனு என்று அவர் உருகிய விதமும்.............
'வளர்ப்பு மகள் தானே இவள்? இவளிடம் இப்படி ஒரு பாசமா?' என்று யோசித்தபடியே சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த அர்ச்சனாவின் அப்பாவுக்கு ஏதோ தோன்ற சட்டென நிமிர்ந்து அனுவின் முகத்தை ஆராய்ந்தார்.
தான் தங்கி இருந்த ஹோட்டல் முன்னால் ஆட்டோ வந்து நிற்க பழைய நினைவுகளிலிருந்து மீண்டவராய் ஆட்டோவிலிருந்து இறங்கினார் அர்ச்சனாவின் அப்பா.
சிங்கப்பூரில் அதே நேரத்தில் மனதில் நிலைக்கொள்ளாத சந்தோஷத்தில் திளைத்துக்கொண்டிருந்தனர் ஸ்வேதாவின் பெற்றோர்.
அந்த நல்ல செய்தியை அம்மாவிடம் அப்போது தான் சொல்லியிருந்தாள் ஸ்வேதா.
அவர்களின் மூன்று வருட வேண்டுதலுக்கு பலன் கிடைத்து விட்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் மிதந்துக்கொண்டிருந்தார்கள்.
உடனே ஸ்வேதாவை பார்க்க வேண்டும் தவித்தது அவள் அம்மாவின் மனம்.
இதைப்பற்றியே பேசிகொண்டிருந்தார்கள் இருவரும்.
திடீரென்று கேட்டார் அவள் அப்பா. 'போறதுதான் போறோம். அப்படியே விவேக் நிச்சியதார்த்ததையும் முடிச்சிட்டு வந்திடுவோமா?
அடுத்த நிமிடம் அர்ச்சனாவின் அப்பாவின் எண்ணை அழுத்திவிட்டிருந்தார் அவர்.
சம்பிரதாயமான நலம் விசாரிப்புகளுக்கு பிறகு நேரடியாக விஷயத்திற்கு வந்தார் ஸ்வேதாவின் அப்பா.
'பொண்ணுகிட்டே பேசிட்டீங்களா?' கேட்டார் அவர்.. 'நாங்க பெங்களூர் வர்றதா இருக்கோம். எல்லாருக்கும் சம்மதம்னா உடனே விவேக் அர்ச்சனா நிச்சியத்தை முடிச்சிடலாம்.'
குளிர்ந்து போனார் அர்ச்சனாவின் அப்பா. இது நடந்து விட வேண்டும். நடந்து விட்டால் எல்லா மன உளைச்சல்களிலிருந்தும் விடுதலை கிடைத்துவிடும்.
இப்போது இருக்கும் மனநிலையில் அவர் சொல்வதை அப்படியே கேட்டுக்கொள்வாள் அர்ச்சனா என்றே தோன்றியது.
எல்லாருக்கும் சம்மதம் தான். நான் டெல்லிலே இருக்கேன். ஒரு வாரத்திலே பெங்களூர் வந்திடறேன். நான் வந்ததும் நல்ல நாள் பார்த்திடலாம். உறுதியான குரலில் சொன்னார் அப்பா.
தன் கையிலிருந்த வசந்தின் கைப்பேசியையே சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தாள் சாந்தினி.
அது ஏனோ புகைப்படத்திலிருந்த அர்ச்சனாவின் முகம் அவளை கவர்ந்தது.
அவள் குரல் எப்படி இருக்கும்? கேட்டு பார்த்துவிடலாமா? மனதிற்குள் சின்னதாய் ஒரு குறுகுறுப்பு பிறந்தது.
அடுத்த நிமிடம் அவன் கைப்பேசியிலிருந்தே அர்ச்சனாவின் எண்ணை அழுத்திவிட்டிருந்தாள் சாந்தினி.
'வசந்த்' என்று ஒளிர்ந்தது அர்ச்சனாவின் திரை.
சட்டென எடுத்துவிட்டாள் அர்ச்சனா.
'சொல்லு வசந்த்.'
அவள் குரல் சாந்தினியை லேசாய் வருடியது. 'சொல்லு வசந்த்' அந்த வார்த்தை அவளுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. 'நீ' 'வா' வென பேசிக்கொள்வார்களா இருவரும்?.
மறுமுனையில் மௌனமே இருக்க,
'ஹலோ..... வசந்த்....ஆர் யூ தேர்? என்றாள் அர்ச்சனா.
அதற்கு மேல் என்ன செய்வது, என்ன பேசுவது என்று தெரியாமல் சட்டென அழைப்பை துண்டித்து விட்டாள் சாந்தினி.
அப்போதுதான் உறைத்தது அவளுக்கு. 'ஏதோ ஒரு ஆர்வத்தில் அவன் கைப்பேசியிலிருந்து அழைத்து விட்டேனே? மறுபடியும் அழைப்பாளோ அர்ச்சனா.?
அவள் எண்ணை மனதிற்குள் மனப்பாடம் செய்துக்கொண்டு, விறுவிறுவென மாடிப்படி ஏறியவள் எதுவுமே பேசாமல் கைப்பேசியை வசந்த் கையில் கொடுத்து விட்டு கீழே இறங்கிவிட்டிருந்தாள் சாந்தினி.
மறுபடி வசந்தின் எண்ணை முயன்ற அர்ச்சனாவுக்கு ஏனோ இணைப்பு கிடைக்கவில்லை.
ஏன் துண்டித்துவிட்டான் அழைப்பை? யோசித்தபடியே மறுபடி முயன்றாள் அர்ச்சனா.
டைரியின் கடைசிப்பக்கத்தை படித்துவிட்டு டைரியை மூடினான் வசந்த். கடைசிப்பக்கத்தின் வரிகள் அவன் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தன
ஏதேதோ நினைவுகளில் மனம் சஞ்சரித்துக்கொண்டிருக்க டைரியை .தனது பீரோக்குள் வைத்துப்பூட்டிய நேரத்தில் அந்த டைரியிலிருந்து நழுவி சென்று கட்டிலின் அடியில் விழுந்த அந்த கடிதத்தை அவன் கவனிக்கவில்லை.
பால்கனியில் சென்று நின்றான் வசந்த். சிலு சிலுவென காற்று வீசிக்கொண்டிருந்தது.
இப்படிதான் இருந்தது அந்த இரவும். மனோ திருமணதிற்கு அவர்கள் கிளம்புவதற்கு முன்தினம் அது.
அவள் கால் குணமாகி நன்றாய் நடக்க துவங்கியிருந்தாள் அர்ச்சனா. அந்த வீட்டுக்குள் அவள் நுழைந்த போது இருந்த தயக்கம் மொத்தமாய் விலகி எல்லாருடனும் மனதால் நெருங்கி விட்டிருந்தாள்.
வசந்துக்கும் அர்ச்சனவுக்கும் இடையில் இனிமையானதொரு அன்னியோன்னியம் வளர்ந்துவிட்டிருந்தது.
அவளது நீங்க வாங்க, நீ வா வாக மாறி சில நாட்கள் ஆகிவிட்டிருந்தது.
அன்றிரவு அர்ச்சனா கீழே அனுவின் அறையில் உறங்கிக்கொண்டிருந்தாள். நேரம் இரவு பன்னிரண்டை நெருங்கிகொண்டிருந்தது.
மாடியில் தன் அறையில் உறக்கம் வராமல் புரண்டுக்கொண்டிருந்த வசந்த் அவளை கைப்பேசியில் அழைத்தான்.
'சீக்கிரம் ரெடியாயிட்டு வா. நாம வெளியே போறோம்'. என்றான் வசந்த்.
நன்றாய் உறங்கிக்கொண்டிருந்தவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
இந்த நேரத்துலே எங்கே வசந்த்.?
'கேள்வியெல்லாம் கேட்காதே. அஞ்சு நிமிஷத்துலே சைலெண்ட்டா யாரையும் எழுப்பாம கிளம்பி வா'