“ஏய்...நேத்து நான் கைய தொட்டதுக்கு கத்தினவ நீ தானா..? ஆச்சர்யம் போல் கேட்டாலும் அவள் தோள்கள் தொட்டு திருப்பிய அவன் கரங்கள் தொடங்கியது காதல் உற்சவம்.
“இல்ல...அது..வந்து....இது...வந்து...” அவள் உதடுகள் தந்தியடிக்க அவன் சிரித்தான்.
“அது வந்தாச்சு..., இது வந்தாச்சு...இன்னும் எது வரனும்...?”
“இல்ல...அது வந்து.......நமக்கு......அது வந்து ....ஹஃஸ்பண்ட் அண்ட் வைஃப்க்கு..... இடையில் எந்த ஈவிலும் வராம இருக்க.... என்ன சொன்னாங்கன்னா... இட் ஃஸ் பிப்லிகல்....”
அவள் தடுமாறினாலும் விஷயம் அவனுக்கு தெளிவாக புரிந்தது.
சிரித்தான்.
“ஓ..கடவுளோட சட்டமா...கண்டிப்பா கடை பிடிச்சிட வேண்டியதான்...லாயரே சட்டத்தை மீறுவனா?”
அந்த நொடி எதுவோ சுகந்தினிக்கு புரிந்தது போல் இருந்தாலும் மனம் மணம் கொண்டாடுபவனுடன் மாநாடு காணச்சென்றதால் கருத்தில் அது நிலைக்கவில்லை.
அங்கு அதே நேரம், அபிஷேக்கின் வீட்டில் அரண்டு, அழுது பயந்து ஒருவழியாய் சமனபட்டிருந்தாள் தயனி. வயிற்றுக்குள் ஆவி சென்றுவிட்டதா? அப்படியா இதற்கு அர்த்தம்? அல்லது வேறு என்ன? இவள் என்ன செய்ய வேண்டும்? ஏதும் செய்திருக்க வேண்டுமோ? அந்த எமிலியும் இவள் மாமனாரும் அத்தனையாய் அறிவுரை சொன்னார்களே!...(???!!!!) அதை இவள் தான் அலட்சிய படுத்திவிட்டாளோ? இந்த அத்தையின் வரவைத்தான் வேண்டாம் என்றார்களோ? ஆனால் அத்தையை வரச்சொன்னது இவளா என்ன? இல்லை இவள் சொல்லித்தான் அது இவள் உட்புகுந்ததா?
பேய் பிடித்தவர்கள் எப்படி எல்லாமோ ஆடுவார்களாமே? நான் நல்லாத்தானே இருக்கேன்...
குழப்பத்தின் உச்சத்தில் இருந்தாள். அவளை அணைத்தவாறு படுத்திருந்த அபிஷேக்கும் சிந்தனையில்தான் இருந்தான்.
என்ன நடக்கிறது? தயனிக்கு அவன் தந்தை விஷயம் தெரியும் முன்னே அவன் தந்தை என்ற அந்த ஆவியை பார்த்திருக்கிறாள், அதுவும் அது சொன்ன அனைத்தும் உண்மையுமாய் கூட தெரிகிறது. அந்த வகையில் தயனி மனதிலிருந்து இது தோன்றுகிறது என சொல்ல வழியில்லை. அப்படியானால் நடப்பது என்ன? இவன் தன் தயனியை, தன் குடும்ப வாழ்வை எப்படி பாதுகாக்க போகிறான்?
“அபிப்பா...” யோசித்து களைத்து அவனிடம் சரணடைந்தாள்.
“தூங்குடா..ப்ளீஃஸ்...” அவள் உச்சந்தலையில் இதழ்பதித்தான்.
தொடரும்
{kunena_discuss:762}