“உண்மையிலேயே நீ நல்லா இருக்கன்னு இப்ப தான்மா தோணிச்சு....அதான் இதை குடுக்க வந்தேன்” என ஒரு சிறு தந்த நிற பவுச்சை குடுத்தார். பல வர்ண கற்கள் பதிக்கபட்டு கார்விங் வேலைப்பாடுகளுடன் படு அழகாகவும் வித்யாசமாகவும் இருந்தது அது.
“உன் அப்பா இதை எப்பவும் கூட வச்சு இருப்பாங்க.....உங்க அத்தை...தப்பா நினச்சுகாதீங்க தம்பி” என அபிஷேக்கிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டவர் மீண்டுமாக இவளிடம் திரும்பி “.அவங்க நடவடிக்கை சரியா படலை அதனால இதை அப்போ ஒளிச்சு வச்சேன்...என்னால முடிஞ்சது....”
காரணம் சொல்லி குடுத்துவிட்டு சிறு உரையாடலுக்கு பிறகு அவர் விடை பெற அதை தம்பதியர் திறந்து பார்த்தால் உள்ளிருந்தது ஒரு சாவி.
எதன் சாவி, அப்படி என்ன அதி முக்கியம் இது? தயனிக்கே தெரியவில்லை.
தயனியின் வீட்டின் உள்ளறை நிறம் பல அறைகளுக்கு தந்த நிறம்தான். காரணம் அவளது தந்தைக்கு அது மிகவும் பிடித்த நிறம். சில அறையின் சுவர்கள் இந்த பவுச்சைப்போல கார்விங் வேலைப்பாடுகளுடன் பலவர்ண கற்களால் அலங்கரிக்கப் பட்டும் இருக்கும்.
அந்தவகையில் இது அவ்வீட்டின் அப்படிப்பட்ட அறைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என இருவரும் நினைத்தனர்.
ஒருவேளை இந்த நிறமும் அதன் வேலைப் பாடும் அவளது தந்தைக்கு பிடித்ததாக இருந்ததால் இந்த பவுச்சும் அவருக்கு பிடித்த ஒன்றாக இருந்திருக்கலாம். உண்மையில் இந்த சாவிக்கும் இந்த அறைகளுக்கும் தொடர்பு இல்லாமலும் இருக்கலாம்.
ஆனாலும் அந்த அறைகளை தேடிப் பார்ப்பது என முடிந்தவரை தேடிப் பார்த்தனர் அபிஷேக்கும் அவன் மனைவியும்.
ஒன்றும் பிடிபடவில்லை.
இரவு.
தயனிக்கு எதைச் செய்யவும் மனதினில் ஒரு தடை. இதுதான் அந்த வேண்டாத விஷயமா இருக்குமோ என்ற குழப்பம்தான் காரணம்.
அவள் வயிற்றில் அந்த ஆவி மறைந்ததைப் பார்த்தவள் ஒரு வேளை அது குழந்தையாக பிறக்குமோ என பயம் கொண்டு அபிஷேக்குடன் இணைவதை முழுவதும் தவிர்த்தாள். ப்ரச்சனை முடியட்டும் அதன் பின் பார்த்துக் கொள்ளலாம் என்பது அவள் எண்ணம்.
இவள் ஒதுக்கத்தை புரிந்த கணவனுமே அவளிடம் காரணம் கூட கேட்கவில்லை. அதன்பின் அவளிடம் வழக்கம் போல் அன்பாக, ஆறுதலாக, அரவணைப்பாக, அக்கரையாக, நடந்து கொண்டாலும் அந்தவிதமாக அவளை அணுகவே இல்லை.
அவளது இந்த சிறுவயதிற்கு மருத்துவனான இவனே எந்த முன் திட்டமும் இன்றி முதல் முறை இணைந்தது அவனுக்கு தவறாக படவில்லை எனினும், புத்திசாலித்தனமாகவும் படவில்லை. இச் சூழலில் இந்த வயதில் அவளுக்கு தாய்மை பாரமாகிவிடும். இன்னும் நாள் செல்லட்டும் என்பது அவன் எண்ணம்.
சுமுகமான சூழலாக இருந்தால் தாய்மையைத் தள்ளிப்போட வழி செய்துவிட்டு தொடர்ந்திருப்பான் தான். ஆனால் இன்றைய நிலையில் அவள் நிம்மதி மட்டுமே முக்கியமாக பட, அவளுக்கு சூழலின் அழுத்தம் காரணமாக அதன் மீது விருப்பமில்லை என நினைத்து, அப்படியே அதை அமைதியாக தவிர்த்துவிட்டான்.
இருவரும் தங்களின் இதுபற்றிய கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவில்லை. மாறாக இருவரும் ஒரே கருத்தில் இருப்பதாக தவறாக புரிந்து கொண்டனர்.
ஆக அந்த இரவும் தயனிக்கு தவிப்பு. இவளை பேயை பெற்றுவிடுவாள் என நினைத்து இவள் கணவன் விலக்கியுள்ளான். இப்படித்தான் ஓடுகிறது இப்போதெல்லாம் இவள் மனம். இத்தனைக்கும் அவனே நாடினாலும் இவள் மறுக்கத்தான் செய்வாள் என இவளுக்கு தெரியும்.
முன்னும் பின்னும் அலை பாய்ந்தது மனம் படுக்கையில். அபிஷேக் தூங்கி இருந்தான். அவன் தூங்கிவிட்டது புரிய தனிமையாய் உணர்ந்தாள்.
அப்படி உணரும் போது ஜெபிப்பது அவள் வழக்கம். பைபிள் வாசித்து ஜெபிக்கலாம் என தோண தனது பைபிளைத் தேடினாள். சற்று தள்ளி இருந்த மேஜை மீது அதை வைத்திருப்பது சிறு இரவு விளக்கின் வெளிச்சத்தில் தெரிய அதை எடுக்க படுக்கையை விட்டு எழுந்து அதன் அருகில் சென்றாள்.
மேஜை விளக்கை ஆன் செய்தால் படிக்கலாம். அதற்கான சுவிட்சை நோக்கி இவள் கை நீட்டிய நொடி இவள் முதுகின் அருகில் யாரோ நிற்பதை உணர்ந்தாள். உடல் சில்லிட்டு விறைத்து தன்னுள் இறுகியது. கண்களை இறுக்கி மூடியபடி தன் கணவனை அழைக்க “அ” என அலறலாக இவள் ஆரம்பிக்க இருந்த நொடி
“தயா....” என வெண்ணெயாக வழுக்கி வந்தது அந்த குரல். மறக்க முடியுமா அந்த குரலை. “அம்மா!!!!!..” .கன்றாய் கதறிய படி திரும்பினாள் அவள்.
“என்னை பயம் காட்டாதீங்கம்மா....ப்ளீஸ்மா..அப்ப மாதிரி அழகாவே வாங்கம்மா...” கண்ணை இன்னும் திறக்காமல் கத்தினாள்.
“இல்லடா பிள்ள...” அவள் அம்மா அவளுக்கு உறுதிமொழி கொடுக்கும்போதேல்லாம் இதே பிள்ள தான் ப்ரயோகிப்பார். சொன்னதை கண்டிப்பாக செய்யவும் செய்வார்.
நம்பி விழி திறந்தாள். எதிரில் அவள் அழகு அம்மா. இலைப் பச்சை நிற ப்ளெயின் ஜார்ஜெட். கரையாக ஒரு அங்குல மெஜந்தா நிறம். அதன் மீது சிறு வேலைப்பாடு. அவள் அம்மா வழக்கமாக விரும்பி உடுத்தும் புடவை.
ஓவல் ஷேப் தந்த நிற முகம். அதே நிற கரங்கள். புடவை தாண்டி தெரிந்த அந்த தந்த நிற பாத முடிவில் இருந்த விரல் நகங்களில் மெஜந்தா நிற நெயில் பாலிஷ்.
“நீ உங்க அம்மா மாதிரியே இருக்கடா” அப்பா அடிக்கடி சொல்வது ஞாபகம் வருகிறது.
அம்மா முகம் பார்த்தாள். கண்களில் கருணை தாய்மை.
“என்னடா பார்க்கிற...?” மேலும் கீழுமாக அவரைப் பார்த்துக் கொண்டிருப்பதே இப்பொழுதுதான் அவளுக்கு புரிகிறது.
“அம்மா...” அழுகை அடைத்து கொண்டு வருகிறது.
“அழாதடா பிள்ள... அம்மா உன்ட்ட ஒருவிஷயம் சொல்லனும். வா!!!” அவரை பின் தொடர்ந்தாள் தயனி.
அதே அறையின் ஓரத்தில் இருந்த அந்த வாட்ரோபைத் திறந்தவர் அதன் உள் தட்டு ஒன்றின் உள் பக்கச் சுவரை இழுக்க கழன்று விழுந்தது அது. இப்பொழுது இன்னொரு உட்சுவர் உள்ளே. அதில் ஒரு சாவித்துவாரம்.
இவளைப் பார்த்துப் புன்னகைத்தார்.
அந்த சாவி இதற்குத்தான் போலும்.
“பிள்ள நீ மாப்பிள்ளய முழுசா நம்பலாம்....நம்பு...”
“சரிமா..” புன்னகைத்தாள்.
“ஆனால் இந்த குழந்த வேண்டாம்....” இவள் வயிற்றை நோக்கி கை நீட்டினார்.
“அம்மா...” அரண்டாள் தயனி.
“ஆமா.....அழிச்சிருடா தயா....”
அப்படியே அரண்டு போய் பின்னிட்டாள் தயனி.
“இல்லமா...அப்படி எதுவும் இல்ல.....”
“இருந்தா வேண்டாம்....சரின்னு சொல்லு....”
“அது...அது...”
“சரின்னு சொல்லு....” இப்பொழுது அதட்டினார் அம்மா.
இவள் தவறு செய்யும் போது, பிடிவாதம் பிடிக்கும்போது அம்மா கொள்ளும் முகபாவம்.
“இல்லமா....சொல்ல மாட்டேன்....” தயனிக்கு எல்லாவற்றையும் தாண்டி துடித்தது தாய்மை.
“இந்த ஒன்னு மட்டும்தாண்டா வேண்டாம்....அடுத்து வச்சுக்கோ.....இது உன் அத்தை பிசாசு...”
“நீ என் அம்மாவே இல்ல...” அதட்டினாள் தயனி. “நீ பேய்...பிசாசு......!!!”