விஷ்வாவையே பார்த்தபடி நின்றிருந்தார் மைதிலி. அவர்கள் இருவரையும் விட்டு விட்டு, தன்னை மைதிலியின் மகன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு வெகு இயல்பாக மற்றவர்களுடன் பேச துவங்கினான் விஷ்வா.
அத்தனை பேர் முன்னிலையில் தனது உணர்வுகள் எதையும் வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாதவனாக அந்த இடத்தை விட்டு மெல்ல விலகி நடந்தான் பரத். ஒரு ஓரத்தில் சென்று நின்றவனின் மனம், நிலையற்று சுழன்றுக்கொண்டிருந்தது.
சில நொடிகள் கழித்து அந்த இடத்தை விட்டு மெல்ல விலகி நடந்து தள்ளிச்சென்று நின்றார் மைதிலி. விஷ்வாவின் பார்வை அவரையே தொடர்ந்தது. எல்லாவற்றையும் மெளனமாக கவனித்தபடியே விஷ்வாவின் அருகில் நின்றிருந்தாள் இந்து.
தனியாக சென்று நின்ற மைதிலியின் மனதில் ஒலித்தது அந்த கேள்வி 'ஊரிலே இருக்கிறவங்களையெல்லாம் கூப்பிட்டு சாப்பாடு போடறீங்க. உங்க பையனுக்கும் உங்க கையாலே ஒரு வாய் சாதம் போட்டால் அவரும் சந்தோஷ பட மாட்டாரா?
மாலையில் அவரிடம் கேட்கப்பட்டது அந்த கேள்வி. அந்த கேள்விக்கு சொந்தக்காரன் வேறு யாரும் இல்லை. நம் சுதாகரன்.
இன்று மாலைதான் நிகழந்தது அது. சில நாட்களுக்கு முன் வந்த மூச்சிறைப்பு, குணமடைந்து விட்டிருந்த நிலையில், வழக்கமான பரிசோதனைக்காக மைதிலி இன்று சுதாகரனை சந்திக்க வேண்டியிருந்தது.
கல்லூரி முடிந்தவுடன், மருத்துவமனைக்கு சென்றிருந்தார் மைதிலி.
அவரை பார்த்த மாத்திரத்திலேயே அவனுக்கு நினைவுக்கு வந்தது விஷ்வாவின் முகம்.
'அவன் வீட்டை விட்டு போய் பல வருஷம் ஆச்சு. சின்ன வயசிலேர்ந்து யாரும் விஷ்வாவை புரிஞ்சிக்கலை டாக்டர்' முன்பு இந்து சொன்னதும் நினைவுக்கு வந்தது.
ஏதேதோ பேசியபடியே அவரை பரிசோதித்துக்கொண்டிருந்தான் சுதாகரன்.
பேச்சினிடையே சொன்னார் மைதிலி, ‘இன்னைக்கு வீட்டிலே பார்ட்டி டாக்டர்’. நான் சீக்கிரம் போகணும்.
ஒ! நியூ இயர் பார்ட்டியா? வெரி நைஸ் என்றவன். உங்க சொந்தக்காரங்க எல்லாரும் வராங்களா? என்றான்.
ம். ஒரு சில பேர் மட்டும்.
ஒரு நொடி பேச்சை நிறுத்தி நிமிர்ந்தவன் மெல்லக்கேட்டான் ‘உங்க பையனும் வராரா?’
திடுக்கிட்டு நிமிர்ந்தார் மைதிலி.
அவரை நீங்க கூப்பிடலை இல்லையா? சரி இந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க நீங்க உங்க பையனுக்கு உங்க கையாலே சாப்பாடு போட்டு எத்தனை நாள் இருக்கும்.?
பதில் இல்லை அவரிடம்.
'ஊரிலே இருக்கிறவங்களையெல்லாம் கூப்பிட்டு சாப்பாடு போடறீங்க. உங்க பையனுக்கும் உங்க கையாலே ஒரு வாய் சாதம் போட்டால் அவரும் சந்தோஷ பட மாட்டாரா?
அவர் கண்களில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் சேர்ந்தது.
தப்பெல்லாம் உங்க பையனோடதாகவே இருக்கட்டும். பையனை அம்மா மன்னிக்காம யார் மன்னிக்கறது?. இந்த புது வருஷத்திலே அவரை மன்னிச்சிடுங்களேன்.’ கொஞ்சம் கெஞ்சலான குரலில் சொன்னான் சுதாகரன்.
பரிசோதனை முடிந்திருக்க மெல்ல எழுந்தார் மைதிலி.
நான் உங்க பையனோட friend . அவர் மேலே எனக்கு கொஞ்சம் அக்கறை. அதனாலே தான் கேட்டேன். தப்பா இருந்தா மன்னிச்சிடுங்கம்மா என்றான் சுதாகரன்.
‘நான் வரேன் டாக்டர்’. என்று தனது உணர்வுகள் எதையும் ’வெளிக்காட்டாமல் தான் கிளம்பினார் மைதிலி. ஆனால் சுதாகரன் கேட்ட கேள்விகள் அவர் மனதை விட்டு இன்னமும் நீங்க மறுக்கின்றன.
சில நிமடங்கள் கழித்து அம்மாவை நோக்கி நடந்து வந்தான் விஷ்வா.
எதையோ யோசித்தபடியே உணவுகள் இருந்த மேஜைக்கு அருகில் வந்து தட்டை எடுத்து கொண்டார் மைதிலி.
அவர் அருகில் வந்து நின்றான் விஷ்வா. பல வருடங்கள் கழித்து அத்தனை அருகமையில் மகனை பார்த்தவரின் கண்களில் நேரேற்றம்.
அவர் அருகிலேயே நின்றிருந்தான் அவன் . தாய்மை எனும் வரத்தை அவருக்கு முதன் முதலில் அளித்த மூத்த மகன். அவர் மனதிற்குள் ஆயிரம் நினைவுகள்.
அம்மா... என்றான் விஷ்வா. எப்படிம்மா இருக்கே?
கண்ணீரை துடைத்துக்கொண்டு மெல்ல தலையசைத்த படி தன் கையில் இருந்த தட்டை விஷ்வாவை நோக்கி நீட்டினார் அவர்.
என்னமா? என்றான் அவன்.
சாப்பிடுப்பா... என்றார் அவர். அம்மா கையாலே ரொம்ப நாளைக்கு அப்புறம் உனக்கு சாதம் போடறேன் சாப்பிடு.
வியந்து, குளிர்ந்து மகிழ்ந்தே போனான் விஷ்வா. நம்பவே முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் இந்து.
அங்கே இருந்த உணவுகளை .அவன் தட்டில் அவர் பரிமாற சாப்பிட துவங்கினான் விஷ்வா.
மௌனமாக அவன் அருகிலேயே நின்றிருந்தார் மைதிலி. அவர் இன்னும் தன்னை முழுவதுமாக மன்னித்து விட வில்லை என்று நன்றாகவே புரிந்தது விஷ்வாவுக்கு. அது ஒரே நாளில் சாத்தியமில்லை என்றும் தெரியும் அவனுக்கு.
அம்மா ‘ஹாப்பி நியூ இயர் மா.’ என்றான் விஷ்வா.
பதில் சொல்லவில்லை அவர்.
அம்மா நீ எனக்கு விஷ் பண்ணி ரொம்ப வருஷம் ஆச்சுமா. என்றான் விஷ்வா.
மெல்ல நிமிர்ந்தவர் என்ன தோன்றியதோ ‘ஹாப்பி நியூ இயர் டா ராஜா. நல்லா இரு’ என்றார் அவர் நெகிழ்ந்து போய் நின்றிருந்தான் விஷ்வா அவன் முகத்தை அவர் பார்த்த நொடியில். எங்கே எல்லார் முன்னாலும் உடைந்து அழுது விடுவோமோ என்று ஒரு பயம் அவருக்குள்ளே. தோன்றியது.
தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு நடந்து வீட்டுக்குள்ளே போய் விட்டிருந்தார் அத்தை.
அருகில் இருந்த விஷ்வாவின் கையை பிடித்து குலுக்கினாள் இந்து.
‘ஜெயிக்க ஆரம்பிச்சிட்ட விஷ்வா. உன்னை விட்டு போனதெல்லாம் இந்த வருஷம் உன்கிட்டே திரும்பி வரப்போகுது பார்.’ என்றாள் அவள்.
நடந்தது எதையுமே கவனிக்காமல் அந்த தோட்டத்தின் ஓரத்தில் ஒரு மரத்தில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டு நின்றிருந்தான் பரத்.
அவன் மனம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தாள் அபர்ணா.’ ‘வாய் விட்டு சொன்னான் அவன். நீ எப்படியும் வந்திடுவேன்னு நினைச்சேன். இப்படி பண்ணிட்டியேடா கண்ணம்மா.’
தொடரும்...
{kunena_discuss:726}