இறங்கினார்கள் இருவரும். ஆள் நடமாட்டமே தென்படாத அந்த பகுதியில் சுற்றிலும் முட்புதர்கள் நிறைந்திருந்த அந்த இடத்தில் இருந்தது அந்த கட்டிடம். பாதிக்கட்டப்பட்டு அப்படியே விடப்பட்டிருந்த அந்த கட்டிடம்.
.உயிரில் ஊசிப்போடும் நிசப்தம் நிலவியது அங்கே. முகுந்தனை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற என்ற தவிப்பு அவளிடத்தில். அதன் பின் தனது தாயிடம் தன்னை சமர்பித்து விடும் எண்ணம் மனதின் இன்னொரு ஓரத்தில்.. உறைய வைக்கும் இருளில் நடுக்கத்துடன் நடந்தாள் மாதங்கி.
அந்த கட்டிடம் இருந்த தெருவை தாண்டி நடந்துக்கொண்டிருந்தான் முகுந்தன். மாதங்கியை நோக்கி காத்திருக்கும் ஆபத்துக்கள் பற்றி அவன் அறியவில்லை. அவனது கைப்பேசி அந்த ரௌடிகளிடம் சிக்கிகொண்டிருக்க, அவன் மட்டுமே தப்பித்திருந்தான். வீட்டில் இருப்பவர்கள் யாரையும் அவனால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தனர் இருவரும். அங்கே அமர்ந்திருந்தனர் மனித உருவில் இருந்த சில அரக்கர்கள். பணத்திற்காக எதையும் செய்ய தயங்காத கயவர்கள்.
அவர்களை பார்த்த மாத்திரத்தில் நடுநடுங்கி போய் கொஞ்சம் பின் வாங்கினாள் மாதங்கி. அவர்கள் அவளது கிராமத்தை சேர்ந்தவர்கள்தான். அவர்களை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறாள் அவள்.
முகுந்தன் அங்கிருந்து தப்பித்துப்போனதில் கொதித்து போயிருந்தனர் அனைவரும் .
ராஜியை பார்த்துதும் சட்டென அருகில் வந்தான் ஒருவன்'. திடீர்னு எங்கே போயிட்டே நீ. தப்பிச்சி ஓடிட்டான் அந்த நாய் முகுந்தன்.'
அதை கேட்டதும் ஒரு நிம்மதி பெருமூச்சு எழுந்தது மாதங்கியிடம். 'நல்ல வேளையாக தப்பித்தானா!!!!! போதும் இது போதும்.!!!
அவர்களை வெறித்தபடியே நின்றிருந்தாள் ராஜி.
அந்த கயவர்களின் பார்வை மாதங்கியின் மீது விழுந்தது. எல்லாரும் எழுந்து அவர்கள் இருவரின் அருகிலும் வந்தனர்.
அவன் தப்பிச்சா என்ன? இவளை கூட்டிட்டு வந்திட்டே இல்லை. நல்லதாபோச்சு. இந்த கல்யாணம் நடக்ககூடாது அவ்வளவுதானே. அவனை விட்டுடுவோம். இவளை கொன்னுடுவோம். இவளை எங்ககிட்டே விட்டுடு ராஜி.
சூழ்ந்துக்கொண்டனர் மாதங்கியை. வியர்வையில் குளித்திருந்தாள் அவள். மாதங்கியின் நீர் நிறைந்திருந்த கண்கள் ராஜியை நோக்கி திரும்பின அவள் குரல் மெல்ல ஒலித்தது 'அ....ம்மா'
குலுங்கியது ராஜியின் உடல். 'என் மகள் அழுகிறாள். அவள் ஆபத்தில் இருக்கிறாள்'
ஒருவன் மாதங்கியை நெருங்கி வர அம்........மா.......... சத்தமாக ஒலித்தது மாதங்கியின் குரல். ராஜியின் கண்களில் தீவிரம்.
மாதங்கியின் சுவாசம் தடுமாறியது. அச்சத்தின் உச்சியில் உடலும், மனமும் செயலற்றுப்போன நிலை. அம்மா.....மறுபடியும் அலறினாள் மாதங்கி.
அவள் அலறல் ராஜியை குலுக்கியது. அவளுக்குள்ளே பிரளயம்
'அழைக்கிறாள். என் மகள் என்னை அழைக்கிறாள்.. அவளுக்கு எதுவும் நடக்கூடாது. அவள் வாழ வேண்டும். அவள் மகிழ்ச்சியாக வாழவேண்டும்'
அம்மா.... என்னை காப்பாத்துமா..... கட்டிடம் அதிரும் அலறல்.
அப்படியே ராஜி மயங்கி விழ அவளுக்குள்ளிருந்து சரேலென எழுந்தது அந்த புகை வடிவம். மாதங்கியை விட்டு விலகி திசைக்கொருவராக சென்று விழுந்தனர் அந்த கயவர்கள்.
இமைக்க மறந்தவளாக தன்னை சுற்றி நடப்பதை வியப்புடன் பார்த்தபடி எழுந்து நின்றாள் மாதங்கி.
அந்த நேரத்தில் கேட்டது ஒரு அலறல்.
அவள் திடுக்கிட்டு நிமிர அங்கே தீ பற்றி எரிந்துக்கொண்டிருந்தது ஒரு கயவனின் உடல். அதை பார்த்த மாத்திரத்திலேயே இன்னொருவன் தனது நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்து விழுந்து இறந்தான். தனது மகளை காப்பற்றுவதற்காக அங்கே ருத்திரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்தாள் ஒரு அன்னை.
அந்த நேரத்தில் சரியாக உள்ளே தாத்தாவுடன் நுழைந்தார்கள் முகுந்தனும், அவளது அண்ணனும்.
மாதங்கியை அனுப்பிவிட்டு காரில் அவளை பின் தொடர்ந்து வந்த தாத்தவும் முகுந்தனின் அண்ணனும், தப்பித்து வந்த முகுந்தனையும் வழியில் பார்த்து அழைத்துக்கொண்டு அப்போதுதான் அந்த கட்டிடத்துக்குள் நுழைந்தனர்.
முகுந்தனை பார்த்த மாத்திரத்தில் ஓடிச்சென்று அவன் கைகளில் சேர்ந்தாள் மாதங்கி.
நீ ஏண்டா தனியா வந்தே? என்றபடி அவள் அவளை தன்னோடு சேர்த்துக்கொண்டான் அவன்
அந்த புகை வடிவம் யார் கண்களிலும் தெரியவில்லை. அங்கே என்ன நடக்கிறது என்று புரிந்துக்கொண்டவர்கள் தாத்தாவும், மாதங்கியும் மட்டுமே.
தாத்தா அவளது அம்மாவை பற்றி சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நினைவிலாடியது மாதங்கிக்கு.
ராஜி அவர்கள் வீட்டு வாசலில் நின்றுக்கொண்டு கெஞ்சிக்கொண்டிருந்த நேரத்தில், மாதங்கியை உள்ளே அழைத்து சென்று எல்லாவற்றையும் சொன்னார் தாத்தா.
'வந்திருக்கறது ராஜி இல்லைமா. அது உங்க அம்மா. அவளுக்குள்ளே இருக்கிறது உங்க அம்மா. இத்தனை நாள் உன் பின்னாலேயே வந்தது அவங்களோட ஆத்மா.' என்றார் அவர்.
புரியவில்லை அவளுக்கு. எங்க அம்மாவா?
'ஆமாம். உன்னை பெத்த அம்மா. அழுத்தமாக சொன்னார் அவர். நீ அவங்களை பார்த்திருக்க மாட்டே. உன்னை வளர்த்தது அவங்களோட அக்கா. உன் பெரியம்மா.'
கொஞ்சம் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் மாதங்கி. அவள் முகம் முழுவதும் குழப்ப ரேகைகள்.
யாரையோ நம்பி ஏமாந்து, உன்னை சுமந்து பெத்தவ மா உங்க அம்மா. ஊரிலே அவளுக்கு கெட்ட பேர் வந்தப்பவும் உன்னை அழிக்க விரும்பலை அவ. . நீ பிறந்ததும் ஊரிலே இருக்கறவங்க அவளை ஊரை விட்டு தள்ளி வெச்சாங்க. அதனாலே உன்னையும் கூட்டிட்டு வேறே ஊருக்கு வந்திட்டா உங்க அம்மா.
ஆனால் உங்க அம்மாவுக்கு பெரிய படிப்போ வேலையோ இல்லை. உன்னை வளர்க்க காசில்லை. அதனாலே கொஞ்சம் வசதியா வாழ்ந்திட்டு இருந்த அவங்க அக்காகிட்டே உன்னை கொடுத்து வளர்க்க சொல்லிட்டா உங்கம்மா. உங்க பெரியம்மாவுக்கு ஏற்கனவே ரெண்டு பொண்ணுங்க.
உங்க அம்மாவுக்கு இருந்த கெட்ட பேருனாலே அவங்க வீட்டுக்கெல்லாம் அடிக்கடி போக முடியாது மாதங்கி, உங்க அம்மாவாலே. எப்பவாவது அந்த ஊரு பக்கம் உங்க பெரியம்மா வரும்போது தான் உங்க அம்மாவாலே உன்னை பார்க்க முடியும்.
உன்னை பெத்தவளுக்கு எல்லாமே நீதான்.. நீ வளர்ந்ததுக்கு அப்புறம் எப்பவாவது அவளை தேடி வருவே அப்படின்னு ஒரு நம்பிக்கை அவளுக்கு.
அவகிட்டே உன் ஞாபகமா இருந்தது உன்னோட கொலுசு மட்டும் தான். தினமும் அதை கையிலேயே வெச்சுக்கிட்டு நீ பேசற மாதிரி, நடக்கிற மாதிரி கற்பனையிலேயே வாழ்ந்திட்டு இருந்த ஒரு ஜீவன் உங்க அம்மா . கடைசியிலே ஊரிலே அவளுக்கு பைத்தியக்கார பட்டம்.
சில வருஷங்கள் இப்படியே போராடி பசி, வறுமை, தனியா இருக்கிற பெண்ணை உரசி பார்க்குற துச்சாதனங்க இது கிட்டேயிருந்தெல்லாம் தப்பிக்க முடியாம, அந்த கிணத்திலே விழுந்து உயிரை விட்டுட்டா உங்க அம்மா. இதெல்லாம் உனக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. உன்னை வளர்த்த உங்க அம்மாவும் உன்கிட்டே சொன்னது இல்லை இல்லையா? கேட்டார் தாத்தா.
மெல்ல தலை அசைத்தாள் மாதங்கி.
உன்னை வளர்த்த உங்க அப்பா இறந்து போனப்புறம், உங்க பெரிய அக்கா கல்யாணம் முடிஞ்சதும் நீயும் உங்க அம்மாவும் இப்போ நீ இருக்கிற ஊருக்கு வந்தீங்க கரெக்டா? மெல்லக்கேட்டார் தாத்தா.