'முடிந்துவிட்டது. இனி அவள் அவனை நிமிர்ந்துக்கூட பார்க்கமாட்டாள் நிச்சியமாய்.. இவள் என்று இல்லை .இவள் இடத்தில் எந்த தன்மானம் உள்ள பெண் இருந்தாலும் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டாள் அவனை. புரிந்தது அவனுக்கு.
'தப்புதான். அவன் தெரிந்தே செய்த தப்பு. அவனது அம்மா காதில் விழுந்திருக்க வேண்டும் இந்த வார்த்தைகள். அந்த நொடியோடு அவனுடன் பேசுவதையே நிறுத்தி விடுவார் அவர்.' தெரியும் அவனுக்கு.
கொஞ்ச நேரம் முன்னால் 'ஒரு பொண்ணோட மனசோட விளையாடாதே ரிஷி' என்றாரே அவர்....
'எனக்கு வேறே வழி இல்லைமா...' வாய்விட்டே சொன்னான் அவன். ஆனால் மனம் ஆறவில்லை. அவனது மனமே அவனை மன்னிக்க மறுத்தது.
பாத்ரூமுக்குள் சென்று ஷவரை திறந்து அதனடியில் நின்றான். அலைப்புற்று கிடந்த மனது அடங்க மறுத்தது.
அதே நேரத்தில் பறந்துக்கொண்டிருந்தது அருந்ததியின் கார். செலுத்திக்கொண்டிருந்தாள் அவள். எங்கெங்கோ வளைந்து திரும்பி தேசிய நெடுஞ்சாலையை அடைந்து, அதி வேகமாய்.....
பலநூறு நினைவுகளில் தாக்கம். என்ன செய்தால் மனம் அடங்கும்? புரியவில்லை அவனுக்கு . 'மதுவுக்குள் விழுந்து விடலாமா.????? அம்மாவுக்கு பிடிக்காது. வாக்கு கொடுத்திருக்கிறான் அவரிடம் . அதை மீறும் எண்ணமில்லை.
இது போன்ற தருணங்களில் அவன் நாடும் ஒரே விஷயம் தூக்க மாத்திரை. தூக்கத்தில் புதைந்து போவதை தவிர வேறு வழி தெரியவில்லை அவனுக்கு . ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று மாத்திரைகளை விழுங்கி விட்டு கட்டிலில் விழுந்தான். தூக்கம் வருவதற்குள் அவளது நினைவுகள் அவனை அழுத்த துவங்கின. படப்பிடிப்பு தளத்திற்கு அவள் வந்தால் போதும், அங்கே எல்லாரிடத்திலும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். யாருடனாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும் அவளுக்கு.
'ஹா......ய் வ........சி' வந்தவுடன் இவனிடம் தான் ஓடி வருவாள் அவள்.
'வசியா? என்னை ஏன் இப்படி அழைக்கிறாள்? புரியத்தான் இல்லை அவனுக்கு. ஆனால் அவளிடம் கேட்கவில்லை. ஆரம்பித்திலிருந்தே சஞ்சீவை தவிர வேறு யாரிடமும் தேவைக்கு அதிமாக பேச மாட்டான் ரிஷி.
ஒருநாள் புரிந்தது. அவர்கள் இருவரும் நடித்தகொண்டிருந்த ஒரு படத்தின் படப்பிடிப்பின் ஒய்வு நேரத்தின் போது அவள் அவனை அப்படி அழைத்ததற்கான காரணம் புரிந்தது. ரிஷியை சந்திக்க அங்கே வந்திருந்த சஞ்சீவை இழுத்து வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தாள் அவள். அவர்கள் அருகில் அமராமல் ஒரு புத்தகத்தில் கண்களை புதைத்துக்கொண்டு சற்று தள்ளி அமர்ந்திருந்தான் ரிஷி.
'அது என்னது வசி?' அவனை ஏன் அப்படி கூப்பிடறே?' கேட்டான் சஞ்சீவ். அந்த கேள்வி காதில் விழ மெல்ல விழி நிமிர்தினான் ரிஷி.
மேகத்தின் பின்னாலிருந்து கொஞ்சமாய் எட்டிப்பார்க்கும் நிலவு போலே, அவளுக்கு முன்னால் அமர்ந்திருந்த சஞ்சீவை தாண்டி அவனையே பார்த்துக்கொண்டிருக்கும் அவள் கண்கள் மட்டும் தெரிந்தது ரிஷிக்கு. நீண்ட நாட்களாக தன்னிடம் எப்போது கேட்கப்படும் என்று அவள் காத்திருந்த கேள்வி கேட்கப்பட்டுவிட்ட மகிழ்ச்சி அவளிடத்தில்.
'என் பேர் என்ன?' கேட்டாள் அவள், ரிஷியை விட்டு விழி அகற்றாமல்.
'அருந்ததி' என்றான் சஞ்சீவ்.
'அருந்ததி யாரு?
'அவங்க ஒரு ரிஷி பத்தினி'
'எக்ஸாக்ட்லி. கையை குடு'. அவன் கையை பிடித்து குலுக்கினாள் அருந்ததி. இப்படிதான் தெளிவா சொல்லணும். 'ரி...ஷி ப...த்...தி...னி'. என்றாள் அவள்.
'ரி...ஷி ப...த்...தி...னி' அந்த வார்த்தையை ரிஷியை பார்த்துக்கொண்டே அவள் நிறுத்தி நிதானமாக உச்சரிக்க, ரிஷியின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது. புவியீர்ப்பு விசை கேள்வி பட்டிருக்கிறான். அவளிடம் இருப்பது இது என்ன விசையாம்? என்னை இப்படி ஈர்க்கிறதே? புரியவில்லை அவனுக்கு.
'அந்த அருந்ததியோட ஹஸ்பண்ட் பேர் என்ன தெரியுமா? வசிஷ்டர். ஷார்ட்டா வசி' என்று நிறுத்தியவளின் பார்வை அவன் மீதே நிலைக்கொண்டிருக்க 'ஏதாவது புரியுதா?' என்றாள்.
புரிந்துவிட்டிருந்து. சஞ்சீவ், ரிஷி இருவருக்குமே எல்லாம் புரிந்துவிட்டிருந்தது. சஞ்சீவ் அவனை திரும்பி பார்க்க, சட்டென இருக்கையிலிருந்து எழுந்துவிட்டிருந்தான் ரிஷி. கையிலிருந்த புத்தகத்தை நாற்காலியின் மேல் போட்டுவிட்டு அங்கிருந்து விறு விறுவென நடந்தான் அவன்.
அந்த நொடியிலிருந்து, அவள் மனம் அவனை நோக்கி சாய்வது தெரிந்த அந்த நொடியிலிருந்து அவளை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகத்துவங்கி இருந்தான் ரிஷி. இல்லை இல்லை!!!! விலகுவது போல், தனக்குள்ளே எதுவுமே இல்லை என்பதைப்போல் நடிக்க துவங்கியிருந்தான். அவனது வாழ்கையும், அவனுடைய செயல்களும் அவனை இந்த இடத்தில் தான் கொண்டு வந்து நிறுத்தும். என்பது அவன் அறிந்தது தானே? அதன் பின் அவன் அவளை நெருங்க முடியாது என்பது தெரிந்தது தானே? எல்லாம் தெரிந்தும் அவள் மனதில் ஆசையை வளர்த்து விளையாட விரும்பவில்லை அவன்.
அதற்காக அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளோ, அதன் பின் நிகழ்ந்த நிகழ்வுகளோ எதுவுமே அவளை பாதிக்கவோ, மாற்றவோ செய்யவில்லை. அவள் அவளாகவே இருக்கிறாள். இருந்தாள்... இன்று காலை வரை. இனிமேல்..... யோசித்தபடியே உறங்கிப்போனான் ரிஷி.
மதியம் இரண்டு மணி. கெஸ்ட் ஹவுஸ்க்குள் வேகமாய் நுழைந்தான் சஞ்சீவ். அவன் உடல் மொத்தமும் பதறிக்கொண்டிருந்தது. என்ன செய்கிறான் இந்த ரிஷி?. அவனது அறைக்குள் இவன் நுழைய கட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்தான் ரிஷி.
'ரிஷி... டேய்... எந்திரி டா...' சஞ்சீவின் குரலுக்கு எந்த அசைவுமில்லை ரிஷியினடத்தில். அவனுருகில் அமர்ந்து அவனை திருப்பி உலுக்கினான் சஞ்சீவ் . தூக்கத்தினுள்ளேயே புதைந்துகிடந்தான் அவன்.
'என்னவாயிற்று இவனுக்கு?' யோசித்தபடியே அவன் முகத்தில் கொஞ்சம் நீரை தெளித்தான் சஞ்சீவ்.
'போயிட்டாடா... அவ என்னை விட்டு மொத்தமா போயிட்டா..' தூக்கத்திலேயே புலம்ப துவங்கினான் ரிஷி.
அவன் இருந்த மனநிலையில் அந்த வார்த்தை கொஞ்சம் திடுக்கிட வைத்தது சஞ்சீவை.
'டேய்... எந்திரிடா முதல்லே. ஏதாவது உளறாதே. அவ நல்லா இருப்பா..'
மறுபடி சரிந்து படுத்தான் ரிஷி. 'டேய்... ஆர்.கே...' உலுக்கினான் சஞ்சீவ்.
அரைகுறையாய் கண் திறந்தான் ரிஷி 'அங்கே டா.... அங்கே ஒருத்தன்.... நாய்டா அவன் ..... எனக்கு சாய்ஸ் கொடுத்தான். ஒண்ணு... ரெண்டு... மூணுன்னு.... கரெக்டா சூஸ் பண்ணுடான்னு சொன்னான்..... தாங்க முடியலைடா என்னாலே..... அடிச்சண்டா ... அவனை... அடிச்சேன்.....' ரிஷியின் உளறல் தொடர்ந்தது. அவன் எதை சொல்கிறான் என்று புரிந்தது சஞ்சீவுக்கு.
'டேய்....குடிச்சிருக்கியா,....'???
'இல்லைடா தூக்க மாத்திரை. தூ..க்...க மா...த்..திரை '
லூசாடா நீ? ஒரு வாளி தண்ணீரை எடுத்து வந்து அவன் மீது அப்படியே ஊற்றினான் சஞ்சீவ். கிட்டத்தட்ட பத்து நிமிட முயற்சிக்கு பிறகு கொஞ்சம் தெளிந்தான் ரிஷி.
சூடாக கொஞ்சம் காபி அவனுக்குள் இறங்க, தலையை குலுக்கிக்கொண்டு நிமிர்ந்தவனை கொஞ்சம் கலவரத்துடன் பார்த்தான் சஞ்சீவ். 'இவனிடம் எப்படி சொல்வது தான் கொண்டு வந்திருக்கும் செய்தியை.? தாங்குவானா இவன்'???