அம்மா அவனை நோக்கி திரும்ப அவனது கை அம்மாவின் கையை பற்றிக்கொண்டது. அவனது கண்களில் அம்மாவிடம் மன்னிப்பு கோரும் பாவம். காரணங்கள் ஆயிரம் இருந்த போதும் அம்மாவை இந்த நரகத்தின் நடுவில் கொண்டு வந்து அமர்த்தி இருக்கிறானே அவன்.???
இதழ்களில் அமைதி கலந்த புன்னகை ஓட அவன் கையை இதமாக அழுத்தினார் அம்மா. வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத பல நூறு உணர்வுகளின் பிடியில் தான் அமர்ந்திருந்தான் ரிஷி. கண்களை மூடி ஆழமாக சுவாசித்து தன்னை நிதான படுத்திக்கொள்ள முயன்றுக்கொண்டிருந்தான் அவன். அவனையே பார்த்தபடி தனது அப்பாவின் அருகில் நின்றிருந்தாள் அருந்ததி.
அவனது அப்பாவும் இயக்குனரும் பேசிக்கொண்டிருக்க, சந்திரிக்காவின் பார்வை மெது மெதுவாய் மேகலாவை சேர்ந்தது. மேகலாவும் அதை உணராமல் இல்லை. சந்திரிகாவின் பக்கம் கண்களை கூட திருப்பாமல் விருட்டென மேகலா உள்ளே சென்றுவிட அவரை பின் தொடர்ந்தான் அஸ்வத்.
கண்களின் முன்னால் அந்த கனவு மறுபடியும் வந்து போனது சந்திரிக்காவுக்கு 'மேகலாவுடன் சில நிமிடங்கள் தனியாக பேசும் சந்தர்ப்பம் அமைந்தால் ஏதாவது செய்யலாம். அது வாய்க்குமா?. யோசித்தபடியே இயக்குனரின் பக்கம் திரும்பினார் சந்திரிகா.
'இந்திரஜித்!!! இந்தர்... என்றுதான் அவரை அழைத்து பழக்கம் சந்திரிகாவுக்கு. இருவருக்கும் இடையில் அழகான நட்பு எப்போதுமே உண்டு. சந்திரிகாவால் நடிக்கவும் முடியும் என்று தனது திரைப்படங்களில் வாய்ப்பு கொடுத்து உலகுக்கு நிருபித்து காட்டியவர் இந்திரஜித். ஏதேதோ நினைவலைகளில் நீந்தியபடி அமர்ந்திருந்தார் சந்திரிகா.
சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்த பிறகு, கேட்டான் ரிஷி 'அங்கிள் நாங்க கிளம்பட்டுமா?'
'என்னப்பா அதுக்குள்ளே? அப்பா, அம்மா ஊரிலே இருந்து நேரே இங்கே தான் வந்திருக்காங்க. குளிச்சு சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்து கிளம்பலாம்'
'ப்ளீஸ் அங்கிள்........ நீங்க கூட என்னை புரிஞ்சிக்கலைன்னா எப்படி?'
'இல்லைப்பா.... என்றார் இந்திரஜித். 'இப்போ விட்டா நீங்க எல்லாரும் திரும்ப இந்த வீட்டுக்கு எப்போ வருவீங்கன்னு தெரியலை. ஒரு வாய் சாப்பிட்டுட்டு என் பொண்ணை கூட்டிட்டு போங்க. அதுக்கு மேலே நான் தடுக்க மாட்டேன்.'
'இந்த வீட்டில் சாப்பிடுவதா??? முடியவே முடியாது என்றே தோன்றியது அவனுக்கு. 'வேண்டாம் அங்கிள்... அவன் ஏதோ சொல்ல ஆரம்பிக்க தடுத்தார் அம்மா.
'சாப்பிட்டுட்டு போவோம் ரிஷி. பேசாம இரு.'
'பச்.' என்றவன் வேறு வழி இல்லாமல் அமர்ந்திருந்தான். உள்ளுக்குள் உறுத்தல் மட்டும் இருந்துக்கொண்டே இருந்தது. எந்த அவமானமும் இல்லாமல் அம்மாவை இங்கிருந்து கூட்டிக்கொண்டு போய் விட முடியுமா????'
அதே நேரத்தில் சஞ்சீவின் வீட்டில்.....
ஒலித்தது அவனது கைப்பேசி. அழைத்தது அவனது இன்னொரு திரையுலக நண்பன். சஞ்சீவினுடைய இன்னுமொரு நலம் விரும்பி. அவன் சொன்ன செய்தி சஞ்சீவை அதிர்ச்சியில் மூழ்கடித்தது.
'வாட்ஸ் ஆப்லே ஷேர் பண்ணி இருக்கேன் பாரு...' என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான் நண்பன்.
'அல்வா துண்டு...'
'சஞ்சா... சொல்லு சஞ்சா... '
'ம்? என்ன சொல்லணும். உன்னை பார்க்கணும் போலிருக்குன்னு சொல்லவா?'
.'நிஜமாவா சஞ்சா???? என்ன சஞ்சா திடீர்னு?.
'அதுவா ப்ரிமியர்லே உன்னை பார்த்ததிலேர்ந்து உன் ஞாபகமாவே இருக்குடி'
'சஞ்சா.... 'என்னை மன்னிச்சிட்டியா சஞ்சா? நான் செஞ்சதெல்லாம் மறந்துட்டியா சஞ்சா'
'ஹேய்... பழசையெல்லாம் எதுக்கு இப்போ ஞாபக படுத்தறே? யாரும் பண்ணாத தப்பையா நீ பண்ணிட்டே'
தொடர்ந்து கொண்டே போனது உரையாடல். இருவரும் பேசிக்கொண்டும், கொஞ்சிக்கொண்டும்..... அவனுக்குள்ளே அதிர்வலைகள்.
அச்சு அசலாக அவன் குரல். இணையத்தில் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறதாம் இந்த உரையாடல். 'யார் செய்த வேலை இது? எதற்காகவாம் இது? ஒரு வேளை இது அஹல்யாவின் வேலையாகவே இருக்குமா? இல்லை யாரேனும் விளையாட்டு தனமாக செய்ததா? அவன் தலைக்குள்ளே அலை அலையாக கேள்விகளும் குழப்பங்களும்.
சட்டென கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அவனது கைப்பேசியை துழாவிக்கொண்டிருந்த பரந்தாமனின் ஞாபகம் வந்தது. 'இது அவர் வேலையாகதான் இருக்க வேண்டும்' உள்ளுக்குள் கொதிப்பேற துவங்க, விருட்டென எழுந்தான் சஞ்சீவ். 'அவரை பிடித்து உலுக்கும் விதத்தில் உலுக்கினால் எல்லாவற்றையும் கக்கி விட மாட்டாரா அந்த மனிதர்.'
இரண்டடி நடந்தவனை உள்ளுக்குள் இருந்து ஏதோ ஒன்று தடுத்து நிறுத்தியது. அவனை சுற்றி ஏதோ ஒரு வலை பின்னப்படுவது உண்மை. அது தனக்கு தெரியுமென காட்டிக்கொள்வது புத்திசாலித்தனமா? உடனே எதிராளி தனது பாதையை திசை திருப்பிக்கொள்ள மாட்டானா?
ஒரு அமைதியான மூச்சை எடுத்துக்கொண்டு, அமர்ந்தான் அவன். சில நிமிட யோசனைக்கு பிறகு தனது மாடி அறையை விட்டு வெளியே வந்தான் சஞ்சா. கீழே பரந்தாமன் அவனது அக்காவின் கணவருடன் ஏதோ சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தார்.
'பரந்தாமன்..... ' அழைத்தான் சஞ்சீவ். 'கொஞ்சம் மேலே வாங்க....'
மேலே வந்தார் அவர். 'சொல்லுங்க சார்...'
'உங்க மொபைல் கொஞ்சம் கொடுங்க. ஒரு போன் பண்ணனும்.' அவர் முகத்தில் கேள்விக்குறிகள்.
'ஒரு புது ப்ரொட்யூசர் கிட்டே பேசணும். என் நம்பர் இப்போ கொடுக்க வேண்டாம்னு பார்க்கிறேன். உங்க மொபைல் குடுங்க.'
அடுத்த வினாடி தனது கைப்பேசியை எடுத்து அவனிடம் நீட்டினார் பரந்தாமன். அவரிடம் தயக்கம் இருப்பதாக தோன்றவில்லை அவனுக்கு.
'இப்படி உட்காருங்க அஞ்சு நிமிஷம்.' அறையில் இருந்த நாற்காலியை காட்டிவிட்டு அந்த அறையை ஒட்டி இருந்த பால்கனியில் சென்று, அதன் கண்ணாடி கதவை மூடிவிட்டு அங்கிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்துக்கொண்டான் சஞ்சா. அங்கிருந்த படியே பரந்தாமனை நன்றாக பார்க்க முடிந்தது அவனால். அவர் வெகு இயல்பாக அமர்ந்து நாளிதழை புரட்டிக்கொண்டிருந்தார். அவன் பக்கம் திரும்பக்கூட இல்லை அவர்.
அவன் விரல்கள் அவர் கைப்பேசியுடன் விளையாடின. அதில் சந்தேக படும் படியாக எதுவுமே தென்படவில்லை. குழப்பத்தின் விடைக்கான நூலிழை கூட தென்படவில்லை. ஐந்து நிமிடங்கள் கடந்திருந்த நிலையில், கைப்பேசியை அவரிடம் கொடுத்து விடலாம் என்ற எண்ணத்துடன் அவன் எழ எத்தனித்த நேரத்தில் ஒலித்தது அது. திரையில் ஒளிர்ந்தது அந்த பெயர்.
'இவரா???? இவர் எதற்கு பரந்தாமனை அழைக்கிறார்???? இது என்ன?? விடையின் நூலிழையா??? இல்லை விடையே இது தானா??? அழைப்பை ஏற்று விட வில்லை அவன். ஒரு முறை திரும்பி அவரை பார்த்தான். அவர் நாளிதழில் ஆழந்திருந்தார். கண்ணாடி கதவை தாண்டி கைப்பேசி ஒலிப்பது அவருக்கு கேட்டிருக்க நியாயம் இல்லை.
ஒலித்து ஓய்ந்தது அது. பலநூறு சிந்தனைகளுடன் அப்படியே அமர்ந்திருந்தான் அவன். சில நிமிடங்கள் கழித்து மறுபடியும் அதே அழைப்பு. இந்த முறை கொஞ்சம் சுதாரித்துக்கொண்டவனாக அழைப்பை ஏற்றான் சஞ்சா.
குரலை கொஞ்சமாக தாழ்திக்கொண்டவன்........
'ஹலோ......' என்றான்
'பரந்தாமன்????'
ம்.....