“அதெல்லாம் சரி…அங்கிள் இதுக்கு என்னடா சொல்லுவாங்க…?” ப்ரபாத்தின் கன்சர்ன்.
“கண்டிப்பா சுகவி எக்கேடும் கெடட்டும் உனக்கென்னன்னு சொல்ல மாட்டாங்க…. நான் அவள மேரேஜ் பண்ண போறேன்னு சொன்னாலும் கண்டிப்பா நோ சொல்ல மாட்டாங்க….மன்யத் விஷயத்துல நான் ஹெல்ப் கேட்டப்ப அப்பா பிகேவ் பண்ண விதம் அப்படி….ஆனா இதுக்கு என்ன சொல்லுவாங்கன்னு தெரியலை….இதவிட பெட்டரா எதுவும் சொன்னாலும் சொல்லுவாங்க….பேசிப் பார்க்கனும்….” அரணின் அணுகுமுறை டுவர்ட்ஸ் அப்பா.
“அதோட எல்லாத்துக்கும் மேல ரொம்ப முக்கியமான விஷயம்….நீ அவள கூட்டிட்டு வந்த பிறகு, அவ ஆட்டம் பாட்டம் எல்லாம் முடிச்சு கூலான பின்னால......இப்டி மிரட்டினாளே அதுக்காக அவ வாய்ல நல்லா நாலு அடி போடு…” வேற யாரு ப்ரபாத்தான்.
“என் கோட்டா ஏற்கனவே ரெண்டு இருக்குது ….அன்னைக்கு பீச்ல வச்சு மிரட்டினாளே அதுக்கு….. இதையும் சேர்த்தா சிக்ஸர்….. சாத்திடுவோம்…..ப்ரொவைடட் உன் தங்கச்சி அதுக்கு ஒத்துகிடனும்…”
“அட பாவி…”
“பின்னே அதுக்கு ஒரு தடவை ஜெயிலுக்கு அனுப்புவாளே யார் போறதாம்…?”
“அதுக்கில்லடா உனக்கு சிக்ஸர் அடிக்க என் தங்கச்சிதான் கிடச்சாளா?”
“அதானப் பாத்தேன் பால்பாக்கெட் வெள்ளெலிய விட அவ விரோதிய சப்போர்ட் பண்ணுதேன்னு…..”
அடுத்து அரண் சென்று நின்றது தன் அப்பாவிடம். அவரிடம் நடந்த அனைத்தின் சம்மரி சொன்னான் அவன். அதோடு அவனது அடுத்தகட்ட திட்டத்தையும். அப்பா இவன் வரையில் ஆங்ரி பெர்சன் கிடையாது ஆனால் அவரிடம் பேசும் போது ப்ராக்ரஸ் ரிப்போர்ட் பார்க்கும் எஃபெக்ட் இருக்கும். தன் தவறுகள் புரியும்.
“அடுத்தவங்க நம்ம பத்தி என்ன நினைப்பாங்கன்னு அனவரதன் ரொம்ப வருத்தப் படுவார்தான்….. ஆனா எப்பவும் நியாய அநியாயம் பார்க்கனுமே தவிர மான அவமானம் பார்க்க கூடாதுன்றது என் நம்பிக்கை…. அதோட சுகாவுக்கு இப்ப நீ ஹெல்ப் பண்ணாம விட்டு அவ எதாவது செய்துகிட்டான்னா வாழ்நாளைக்கும் உனக்கும் எனக்கும் ஏன் அந்த அனவரதனுக்குமே வலிக்கும். ஆனாலும் இதப் பத்தி முடிவு சொல்றதுக்கு எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.” என முடித்தார்.
அங்கு சுகவிதா வீட்டிலோ புஷ்பம் பரிதவிக்க தொடங்கி இருந்தார். முதலில் மகள் இயல்பான கல்யாண டென்ஷனில் இருக்கிறாள் என்றுதான் அவரும் நினைத்திருந்தார். அதோடு பல மாதமாய் இந்த பெலிக்ஸும் விரும்பி மகளை பெண் கேட்ட கதை அவருக்கும் தெரியும். விரும்பி கேட்கிறவன் மகளை நன்றாக வைத்துக் கொள்வான் என்ற நம்பிக்கை.
ஆனால் நாள் போகப் போக அவருக்கு வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது. அவர் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்தான். ஆனால் திருமணத்திற்குப் பின் அமெரிக்க வாசி. பலதரப்பட்ட நட்பிற்கு அறிமுகமானவர்.
இப்பொழுதுதெல்லாம் கல்யாணம் நிச்சயமான பிள்ளைகள் ஃபோனிலேயே உயிர்வாழ்வதும், கிடைக்கும் சான்ஸிலெல்லாம் சங்கோஜமின்றி மீட் பண்ணிக் கொள்வதும் என்று இருப்பது தான் இயல்பு என அவருக்கும் தெரியும்.
ஆனால் சுகியும் மருமகானாய் வரப் போகிறவனுக்கும் இடையில் அப்படி எந்த கெமிஸ் ட்ரியும் இல்லை. இருவரும் நேரில் சந்திக்க அனவரதன் அனுமதிக்க மாட்டாராய் இருக்கலாம், ஆனால் மகள் ஃபோனில் பேசியே தெரியவில்லையே…..
அதோடு அது இது என்று ஒவ்வொரு விஷயம் விசாரிக்கவும் பெலிக்ஸ் வீட்டில் இருந்து யார் யாரோ வர்றாங்க போறாங்க…..மாப்ள பையன் ஏன் வரவே இல்லை….?
மகள் சிரித்துப் பார்த்து பலயுகம் ஆன மாதிரி ஒரு ஃபீல்….
அவரே சுகியை தனியாக சந்தித்துப் பேச நினைத்தால் அதற்கு வழி இல்லை. எப்பவும் கூட இருந்து வில்லடிக்கும் ஒரு கோஷ்டி. ஏதோ மனதிற்குள் பலமாய் நெருடுகிறது பெற்ற அன்னைக்கு.
சுகி யாரையும் லவ் பண்றாளோ? அது அவ அப்பாக்கும் தெரிஞ்சிருக்குமோ? அதான் இப்டி நாசுக்கா அடச்சு வச்சிருக்கிறாரோ? மிரண்டு போனார் அவர்.
எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பார் இவர் ஆனால் மகளின் கல்யாண வாழ்க்கையை போய் ஹஸ்பண்டோட ஈகோக்கு இரையாக்க முடியாது. அதோடு சுகிக்கு காதல் என்றதும் ஏனோ மனக் கண்ணில் அந்த அரண் முகம் தான் வருகிறது இந்த அம்மாவுக்கு.
Are ல் வைத்து பார்த்ததுதான். மகள் முகம் வாடி இருக்கவும் அவன் முகத்தில் வந்து அமர்ந்த அந்த கன்சர்ன்ட் லுக். தாயுள்ளத்தை அப்பொழுதே அது அசைத்தது உண்மை.
ஆரம்பத்துல இருந்து எல்லாம் ஒழுங்கா போயிருந்தா இந்த பையனே சுகாக்கு அமைஞ்சிருந்தாலும் அமஞ்சிருப்பான்…. மகளை மட்டுமல்ல அவ பிறந்த வீட்டையும் சந்தோஷமா வச்சுக்க தெரிஞ்சவன்….. என்று ஒரு எண்ணம் அப்பொழுதே.
அரண் றதால அப்பா ஒத்துக்க மாட்டார்னு நினச்சு மகள் மனசுல உள்ளத சொல்லவே இல்லையோ? அதை அவரா தெரிஞ்சு வச்சுகிட்ட அவ அப்பாவும் இவர்ட்ட சொல்லலையோ? இப்படியாய் ஓடியது அவர் மனது.
மகளை தனிமையில் பிடித்து விசாரித்தார்.
சுகவிதாவிற்கு அம்மா எதற்காக இப்படி விசாரிக்கிறார் என்றெல்லாம் தெரியாது. ஏனெனில் புஷ்பம் அரண் பெயரை எல்லாம் உளறி வைக்கவில்லை.
“உனக்கு கல்யாணத்தைப் பார்த்து பயமா இருக்குன்னு நினச்சேன் சுகிமா….இப்ப என்னமோ இந்த மாப்பிள்ள தான் பிடிக்கலையோன்னு தோணுது…..”
இருந்த எமோஷனல் பிரஷரில் கதறிவிட்டாள் சுகவிதா. அப்பொழுதும் ஜீவாவைப் பற்றிப் பேச அவளுக்கு தைரியமில்லை.
“அந்த பெலிக்ஸ்ட்ட அவ்ளவு சொல்றேன்மா எனக்கு இந்த வெட்டிங்ல விருப்பம் இல்லைனு…அவன் என்னைப் பத்தி கண்டுக்கவே இல்லைமா……இந்த மேரேஜ் பத்தி அவன் ஏற்கனவே எல்லார்ட்டயும் சொல்லிட்டானாம்……அதனால நான் அவனை கல்யாணம் செய்துதான் ஆகனுமாம்…எவ்ளவு முக்கியமான விஷயத்தில என்னை, என் முடிவை அவன் மதிக்கலை? அதுவும் அவன் ப்ரெஸ்டீஜுக்காக….. இவனா பின்னால என்னை மதிச்சு குடும்பம் நடத்தப் போறான் ? எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்மா…..”
புஷ்பத்தின் மொத்த நிம்மதியை கொன்றுபோட இது போதுமானதாக இருந்தது. பையனிடம் போய் ஒரு பெண் தனக்கு விருப்பமில்லை என்று சொல்வதென்றால்? அதை கூட பையன் அசட்டை செய்வதென்றால்…..?கண்டிப்பாய் இது நல்லதிற்கு இல்லை….
அவர் தன் கணவனிடம் இதையெல்லாம் சொல்ல முடியாது. சொன்னால் இவர் எதை நினைத்து கலங்குகிறார் என்பதெல்லாம் அவருக்கு உறைக்காது.
‘நான் பார்த்த பையன்ட்ட எவ்ளவு தைரியம் இருந்தா இவ உன்னைப் பிடிக்கலைனு சொல்லுவா? அப்ப எனக்கு இந்த வீட்ல என்ன மரியாதை இருக்கு?’ என்று ஆடி விடுவார் ஆடி… அது ஒன்றும் ப்ரச்சனையை தீர்க்கப் போவது இல்லை. பெரிதாக வேண்டுமானல் ஆக்கும். இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? இன்னும் 7 நாளில் கல்யாணம்.
ஒன்றும் புரியாமல் நெஞ்சடைத்துக் கொண்டு வருகிறது அவருக்கு. உணர்வுகளில் உள்ளமெங்கும் சிறை சுவர்கள். எப்பொழுது இப்படி தவிப்பாய் இருந்தாலும் சர்ச்சுக்கு போவது அவர் பழக்கம். அங்குள்ள 24 மணி நேர ஜெப அறையில் அமர்ந்து ஆண்டவரை துதித்துப் பாடிவிட்டு வருவது அவரது வழக்கம்.
துதி விலங்குகளை கழற்றி சிறை கதவுகளை திறக்கும் என்பது அவர் அனுபவம்.
சர்ச்சை விட்டு வெளியே வரும் போது மனதில் காரணம் புரியாத சமாதானம். அதோடு எதிரில் உள்ளே நுழைந்து கொண்டிருந்தது திரியேகன்.
“ வணக்கம், நல்லா இருக்கீங்களா மிசர்ஸ். அனவரதன்? சுகா மேரேஜுக்காக ப்ரேயர் பண்ண வந்தீங்களா? நானும் அதுக்காக ப்ரே பண்ணிக்கிறேன்….” என்றார் அவர்.