07. கிருஷ்ண சகி - மீரா ராம்
கதிரவன் ஒளி அறையினுள் பரவ ஆரம்பிக்க முயற்சித்த வேளை, படுக்கையிலிருந்து மெல்ல எழுந்து கொண்டான் மகத்… எழுந்தவன் உள்ளங்கையினை பரபரவென தேய்த்துக்கொண்டு அதில் தன் விழிகளை முதலாய் பதிக்க, அழைப்பு மணியோசை அவனது கவனத்தை ஈர்த்தது…
“இந்த அதிகாலையில் யார்?....” என்ற எண்ணத்துடன் போய் கதவைத்திறந்தவன் முகமெங்கும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி…
“அப்பா….” என தன் காலைக் கட்டிக்கொண்ட மகளை தூக்கிக்கொண்டவன் தன் எதிரே சிரிப்புடன் குருமூர்த்தி நிற்கவும்,
“வாங்க சார்… உள்ளே….” என அவன் அழைக்க, அவரும் உள்வந்தார்…
“என்ன சார்… இப்படி திடீர்னு சர்ப்ரைஸ் எல்லாம் குடுக்குறீங்க…. என்னால நம்பவே முடியலை… நதி என் பக்கத்துல இருக்குறான்னு….”
“சும்மாதான் மகத்… உங்க முகத்துல சந்தோஷத்தை பார்க்கணும்னு தோணுச்சு… அதான்….”
“ஆனாலும் இது நிஜமாவே பெரிய சந்தோஷம் சார்….”
“நீங்க எனக்கு செஞ்சதுக்கு முன்னாடி இதெல்லாம் ரொம்ப கம்மி மகத்….” என அவர் சொல்ல,
“அப்பா, நான் அந்த பூந்தொட்டியைப் பார்த்துட்டு வரட்டுமா?... அது அழகா இருக்கு…” என நதிகா மகத்திடம் கேட்க
“போடா… போய் பாரு…” என அவனும் மகளை அனுப்பி வைத்த பின்னர்,
“சார் நீங்க இன்னைக்கு வெளிநாடு….” என அவன் இழுக்க,
“கிளம்பணும் மகத்… நதிகாவை இங்க உங்ககிட்ட ஒப்படைச்சிட்டு அப்பறம் கிளம்பணும்னு நினைச்சேன்…”
“கண்டிப்பா நீங்க வெளிநாடு போய்த்தான் தீரணுமா சார்?...”
“வேற வழியில்லையே மகத்… இங்க இருந்தா என் நிம்மதி நிச்சயமா போயிடுமே…”
“நீங்க ஏன் சார் அப்படி நினைக்குறீங்க???…”
“வேற எப்படி மகத் நினைக்க சொல்லுறீங்க???…”
“இல்ல சார் நான்…..”
“வேண்டாம் மகத்… உங்க அளவுக்கு எனக்கு மனப்பக்குவம் இல்ல….”
“நீங்க வெளிநாடு போனா மட்டும் நிம்மதி கிடைச்சிடும்னு நினைக்குறீங்களா?...”
“கண்டிப்பா கிடைக்கும் மகத்… எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு…. எனக்கு அங்க நிம்மதி மட்டுமில்ல கொஞ்சம் சந்தோஷமும் கிடைக்கும்…” என அவர் சொன்னதும்
“அதனால தான மாசக்கணக்கா வெளிநாடே கதின்னு இருக்கீங்க….” என சொல்லிக்கொண்டே வந்த விசித்திர கன்யாவை பார்த்ததும் குருமூர்த்தி முகத்தை திருப்பிக்கொள்ள,
“ஓஹோ… என் மூஞ்சியைப் பார்க்க மட்டும் கசக்கும்… இதோ இங்க நிக்கிறாரே இவர் மூஞ்சியை பார்க்க மட்டும் இனிக்குமா உங்களுக்கு?...”
“மகத்… நான் கிளம்புறேன்…” என அவர் நகர முயற்சிக்க,
“கேள்வி கேட்டது நான்… பதில் ஏன் அங்க சொல்லுறீங்க?...”
“மகத்… நான் போகணும்…” என்றார் அவர் அழுத்தமாய்…
“போங்க… யாரு வேண்டான்னு சொன்னா, உங்களை பிடிச்சு வைக்க நான் ஒன்னும் ஆசப்படலை… எனக்கு அது தேவையும் இல்ல…”
“அதுதானே தன் தேவை மட்டும் தானே சிலருக்கு பெரிசு… அதனால தான நான் இப்படி ஊர் ஊரா அலையுறேன் நிம்மதியைத் தேடி… சே…” என அவர் வார்த்தைகளை சிந்த,
அவர் சொன்ன அர்த்தத்தினை புரிந்துகொண்டவள், “ஆமா, எனக்கு என் தேவை மட்டும் தான் முக்கியம்… வேற யார் பத்தியும் எனக்கு கவலை இல்ல….” என்றாள் மிக கோபமாய்…
“கவலை இல்லன்னு தான் நான் என்னைக்கோ தெரிஞ்சிகிட்டேனே… இன்னைக்கா அது எனக்கு தெரிஞ்சது?...”
“என்னத்த பெரிசா தெரிஞ்சிக்கிட்டீங்க?... என் ஆசையை தெரிஞ்சிகிட்டீங்களா?... என் உணர்வை புரிஞ்சிகிட்டீங்களா?... இல்ல கொஞ்சமாவது நம்ம தகுதியும் தராதரமும் தான் உங்க கண்ணுக்கு தெரிஞ்சதா?...”
அவள் சொன்னதின் அர்த்தம் அறிந்தவருக்கு, கோபம் அலை என பொங்கி வர, மகத் முகத்தினைப் பார்த்து அடக்கிக்கொண்டார் சிரமப்பட்டு…
“எதுவுமே தான் உங்களுக்கு தெரியலையே… உங்களுக்கு வேண்டியதெல்லாம் உங்க நிம்மதி மட்டும் தான்… அதுவும் நான் இல்லாத இடத்துல தான உங்களுக்கு கிடைக்கும்னு நீங்க நினைச்சிட்டிருக்கீங்க…???..”
“ஆமா, எனக்கு சிலர் இல்லாத இடம் தான் நிம்மதி….” என அவர் அழுத்தம் திருத்தமாய் சொல்லிவிட,
“அப்படி நீங்க நினைச்சா உங்களை விட முட்டாள் இந்த உலகத்துல யாரும் இல்ல… எங்க போனாலும் சரி, நீங்க வேண்டுற நிம்மதி நான் கிடைக்கவிடமாட்டேன் உங்களுக்கு… அதை உங்க மனசுல பதிய வச்சிக்கோங்க…”
“முட்டாள் தான்… பாசம் வைச்ச முட்டாள்….”
“பொல்லாத பாசம்… அப்படி பாசம் இருக்குற மனுஷன் தான் கொஞ்சம் கூட நான் வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல எனக்கு பிடிக்காத ஒன்றை என் வாழ்க்கையில திணிச்சீங்களா?...” என அவள் கேட்டதும்,
அதுவரை மறைமுகமாக பதில் சொல்லிக்கொண்டிருந்தவர் அவளை நேருக்கு நேர் பார்த்து,
“உனக்கு பிடிச்சதெல்லாம் செஞ்சு தான நீ இந்த நிலைமையில இருக்குற? இன்னும் என்ன செய்ய காத்திட்டிருக்க?...”
“என் வாழ்க்கை நிம்மதி இல்லாம இருக்குற மாதிரி உங்களையும் சந்தோஷமா வாழ விடாம பண்ணப்போறேன்…”
“அத தானே இத்தனை வருஷமா பண்ணிட்டிருக்குற… இனியும் பண்ணுறதுக்கு என்ன இருக்கு புதுசா?...”
“இருக்கு… அதை நீங்க பார்க்குற நாள் தூரத்துல இல்லை…”
“மகத் நான் கிளம்புறேன்… இனியும் இங்க இருந்தா எல்லாம் என் கை மீறி போயிடும்…” என்றவரிடத்தில்,
“ஓ… நான் இவ்வளவு சொல்லிட்டிருக்கேன்… மறுபடியும், அந்த ஆள் கிட்ட தான் பேசுறீங்கல்ல, எல்லாமே இவனால வந்துச்சு… இவனால மட்டும் தான்…” என்றவள் மகத்தினை கொலைவெறியோடு பார்க்க,
“அவரை மரியாதை இல்லாம பேசுறது இதுவே கடைசிதடவையா இருக்கட்டும்… சொல்லிட்டேன்…” என கைநீட்டி குருமூர்த்தி அதட்ட,
“மரியாதையா?... இவனுக்கா?... நான் எதுக்கு குடுக்கணும்?... என் சந்தோஷத்தை கெடுத்த பாவி இவன்… என் சந்தோஷமான வாழ்க்கை இப்படி ஆனதுக்கு காரணமே இவன் தான்….” என அவள் சொல்லிக்கூட முடிக்கவில்லை…
குருமூர்த்தியின் கைகள் அவளது கன்னத்தில் மாறி மாறி பதிந்தது… சட்டென்று மகத் வந்து மேலும் அடிக்கவிடாமல் அவரின் கைகளைப் பிடித்துக்கொண்டு, “என்ன சார் இப்படி பண்ணீட்டீங்க?...:” என அவன் அவரை அவளிடமிருந்து சற்று தூரமாய் அழைத்து செல்ல…
“விடுங்க மகத்… என்னை விடுங்க…” என்ற அவரின் திமிறலை அவன் இயன்றளவு கட்டுப்படுத்த,
அவர் அவனிடமிருந்து விலகி, அவளிடம் வந்தார்…
“எவ்வளவு திமிர் இருந்தா இப்படி எல்லாம் பேசுவ நீ?... கொஞ்சமாவது மரியாதை இருக்கா உனக்கு?... நாக்கு இருக்குன்னா இஷ்டத்துக்கு பேசுவீயா நீ?... கொன்றுவேன் உன்னை… ஒழுங்கா நடந்துக்க சொல்லிட்டேன்…” என அவர் கர்ஜிக்க,
இரு கன்னங்களையும் பிடித்துக்கொண்டவள், கண்ணீருடன், குருமூர்த்தியைப் பார்த்து
“பெத்த பொண்ணை விட, ஆஃப்ட்ரால், நம்ம ஹாஸ்பிட்டலில் வேலைப் பார்க்குற இவன் உங்களுக்கு பெரிசா போயிட்டான்ல?...” என அவள் சொல்ல..