06. காதல் பின்னது உலகு - மனோஹரி
நிலவினியின் மிரண்ட பார்வை நின்ற விதத்திலேயே ஏதோ சரி இல்லை என யவ்வன் புரிந்துகொண்டான் தான். ஆனால் என்னது சரியில்லை என்று அவனுக்கு எப்படி தெரியுமாம்?
அவள் பார்வை பட்ட கன்னத்தை தொட்ட படி “என்ன?” என புரியாமல் அவன் கேட்கும்போதே காதில் விழுகிறது “எங்க உன் அழகுப் பொண்ணு? நளைக்கு கல்யாணம் ஆகப் போகுது கொஞ்சமாவது பொறுப்பு இருக்கான்னு பாரு….. நிச்சய புடவைய அப்படியே கட்டில் மேல பரத்தி போட்டுட்டு வந்திருக்கா?” நிலவினியின் லோக்சோடொன்டா அத்தை தான். இவள் அம்மாவிடம் விசாரிப்பது காதில் விழுகிறது
இருந்த பயத்தில் இன்னும் ஃப்யூயல் வார்த்து ஃபயர் வைக்கிறது இந்த விசாரிப்பு நிலவினுக்குள்….. ஐயோ!!!!
“பட்டு சேரிய கழட்னதும் மடிக்க கூடாதுன்னு நான் தான் சொல்லிருக்கேன்……கொஞ்சம் காத்தாட கிடக்கனும்… அப்பதான் நல்லது” அம்மா இவளுக்கு பரிந்து பேசினாலும்
“அதுக்காக இப்படி கட்டில்லயா போடனும்….? எதாவது சின்ன பிள்ள அதுல எதையாவது கொட்டினா என்ன ஆகும்? பின்னால கிணத்து மேட்ல தான இருப்பா….நான் போய் நாலு வார்த்தை சொல்லி வைக்கிறேன்…. இது ஒன்னு….வீட்ல விருந்தாளி இருக்கப்ப கூட எதுக்கெடுத்தாலும் இந்த கிணத்துல போய் உட்கார்ந்துடறது….” என்றபடி அத்தை இவளை விடுவதாய் இல்லை என கங்கணம் கட்டிக் கொண்டு வர….
விதிர்விதிர்த்துப் போனாள் நிலு. பதறிக் கொண்டு வந்தது அவளுக்கு…
அவள் முதல் பார்வையிலேயே என்னவென்று புரியவில்லை எனினும் கன்னத்தை யவ்வன் தேய்க்க தொடங்கி இருந்தாலும் அது என்ன பவ்டரா? கைட்ட லேசா துடைக்கவும் கலைய…. அது அப்படியே இருக்க…
அத்தை இவளை இவனோடு பார்த்தாலே என்னவெல்லாம் பேசி வைப்பாரோ? அதில் இப்படி அவன் கன்னத்தில் இவள் லிப்ஸ்டிக்…… கடவுளே!!! கை காலெல்லாம் உதறுது பொண்ணுக்கு….. இப்ப இவ என்ன செய்யனும்…என்ன செய்யனும் நான்…. என்ன செய்யனும் நான்….
அத்தையின் காலடி சத்தம் காதில் விழ தொடங்குகிறது வெகு அருகில்…. ஐயையோ!!
இவள் ஹார்ட் பீட் தெளிவா இவ காதுல கேட்குது….. அவ்வளவுதான் சட்டென கை நீட்டி இவளே அந்த கரையை அழுந்த துடைத்து விட்டாள். இருந்த பதட்டம் டென்ஷனில் அவளுக்கு தான் என்ன செய்கிறோம் எனபது கூட உறைக்கவில்லை…
ஹேய்…என சற்றும் இதை எதிர்பாரத யவ்வன் அனிச்சை செயலாய் முகத்தை சற்று பின் இழுத்தாலும்…. அதற்குள் அவனுக்கும் விஷயம் புரிந்துவிட்டது….. அவன் முகத்தில் குட்டியாய் புன்னகை எட்டிப் பார்க்கிறது.
அதையெல்லாம் கவனிக்கும் நிலையிலா இருக்கிறாள் நிலவினி? அந்த லோக்ஸோடொன்டா இங்கு வர்றதுக்குள்ள இதை துடச்சிடனும் அதுதான் இப்போ மனசுல இருக்கிற ஒரே தாட்….
“ப்ச்… போக மாட்டேங்குது….. இப்ப நான் என்ன செய்ய?” சட்டென தன் தாவணி முந்தியை வலக்கையில் எடுத்தவள் இடக்கையால் அவன் தாடையை பிடித்தபடி …இல்லைனா முகத்தை பின்னால கொண்டு போய்டுறானே…. அழுத்தமாக அந்த கரையை துடைத்தாள்.
சுத்தமாய் இதை யவ்வன் எதிர்பர்க்கவில்லை எனினும்……அந்த நொடி அவளது டென்ஷனின் அளவும் நன்றாகவே புரிகிறது அவனுக்கு…. அதோடு எக்கி இவன் முகம் பார்க்கும் அந்த முட்டைக் கண்ணும் நன்றாக தெரிகிறது….
ஜார்ஜட் தாவணி என்பதால் அது வழுக்கிக் கொண்டு தான் வருகிறதே தவிர கன்ன கரை அப்படியே நிற்கிறது…. என்ன லிப்ஸ்டிக்கோ…இனி இந்த ப்ராண்டே வாங்க கூடாது…..கழுத பவி…அவளால வந்தது…. இப்ப நான் என்ன செய்வேன்….. நிலுவின் கவனம் அவளது மிஷனிலே
“வினி….. கூல் டவ்ண்…” என்றபடி யவ்வன் விலக முயன்றால் அவன் தாடையை இன்னுமாய் இறுக்கிப் பிடித்தாள் நிலவினி…. ஆப்ஜக்ட் அசைஞ்சா எப்படி? எப்படி துடைக்க? எப்படி போகும்? இவ்ளவுதான் அவளுக்கு இப்போ விஷயம்…
இதற்குள் யவ்வன் தன் கர்சீப்பை எடுத்து இப்பொழுது அவள் துடைத்த இடத்தை தான் துடைக்க முயல….. அந்த காட்டன் கர்சீஃபில் லிப்ஸ்டிக் கரை போனாலும்….அவன் யூகத்தில் தோராயமாய் தானே துடைக்க முடியும்….. கரை முழுதாக போகாமல் இன்னுமாய் இருக்கிறதே…
“ஏய் நிலவினி….” கூப்பிட்டுக் கொண்டே லொக்ஸோடொன்டா வேற பக்கத்துல வந்தாச்சே…. ஐயோ அம்மா!!!!
படக்கென அவன் கர்சீஃபை பிடுங்கி அவசர அவசரமாக அவன் கன்னத்தை துடைத்து….. நிலுதான்..…… இப்போது யவ்வனுமே எந்த மறுப்பையும் காண்பிக்கவில்லை…. காண்பித்தால் கைகலப்பானாலும் ஆச்சர்யமில்லை….
“அத்தை…. உங்களுக்குன்னு துபாயில இருந்து ஒன்னு கொண்டு வந்தேன்….இங்க வாங்க….” அக்கா அத்தையை கூப்பிடுவது கேட்க….உடல் விரைக்க காதை கூர்மையாக்கி கவனித்தாள் நிலு.
‘லொக்ஸடொன்டா வழக்கம் போல இதுல கவுந்துடனுமே கடவுளே’
“துபாய்ல இருந்தா கட்டிப் பிள்ள வாங்கிட்டு வந்த…..? வரவுமே உன்ட்ட பேசனும்னு நினச்சேன்…..ஆமா ஏன் கண்ணு நீ இப்படி இளச்சு போய்ட்ட?....” அத்தை கேட்டுக் கொண்டே அக்கா பின் செல்வதை இவளால் உணர முடிகிறது….