அவர் கண்ணீரை துடைத்தபடியே சொன்னது தீக்ஷா 'பாட்டி அழாதே...'. மழை அங்கே!!! அன்பு மழை ஜானகியின் மீது.
'போதும். இதற்கு மேல் இங்கே நின்றால் எனது உறுதி கரைந்து போகும். என் மகனின் தோளில் எல்லா உண்மைகளையும் கொட்டி விடுவேன்.' புரிந்தே போனது அவருக்கு.
கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு 'நான் வரேன்பா' ரிஷியிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடியே விட்டிருந்தார் அம்மா. கொஞ்சம் திகைப்புடன் அவர் சென்ற திசையையே ரிஷி பார்த்திருக்க...
'பாவம் டா. அவங்களுக்கு உன்னை பார்த்ததும் அவங்க பையன் ஞாபகம் வந்திருக்கும் நாளைக்கு மத்தியானம் தான்டா நான் ஊருக்கு போறேன். அதுக்குள்ளே அவங்களை சமாதான படுத்தி உங்களோட விட்டுட்டு போறேன்டா. கொஞ்ச நாள் அங்கே இருக்கட்டும்'
சில மணி நேரங்கள் கழித்து எல்லாரிடமும் விடை பெற்றுக்கொண்டு குழந்தையையும் அழைத்துக்கொண்டு கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்ந்திருந்தனர் ரிஷியும் அருந்ததியும்.
சாவிக்கொடுக்கப்ட்ட பொம்மையாக உலவிக்கொண்டிருந்த சந்திரிக்கா அவர்கள் வீட்டினுள் நுழைந்த மறு நிமிடம் அவசரமாக ரிஷியிடம் ஓடி வந்தார். அவன் கேசம் வருடி கன்னம் தடவி பல நாள் பிரிந்திருந்த மகனை பார்ப்பது போன்ற ஒரு பாவத்துடன் கேட்டார் சந்திரிக்கா..
'எங்கேடா.. போனே இவ்வளவு நேரம் ஆச்சு???"
'ஏன்மா??? சஞ்சா வீட்டுக்குதான் போனேன்.... சொல்லிட்டு தானே போனேன்...'
'இல்லை... அது சும்மாதான்... கேட்டேன்... அங்கே என்ன பண்ணே?"
'போய் சாப்பிட்டுட்டு வரேன். சூப்பர் சாப்பாடு மா... ஜானகி அம்மான்னு ஒருத்தங்க சமைச்சு இருந்தாங்க பாருங்க... அந்த ரசமும்... அவியலும்... வாழ்கையிலே மறக்கவே முடியாது என்னாலே...' சொல்லிக்கொண்டே உள்ளே போய் விட்டான் ரிஷி
'ஜானகி அம்மா...' என்ற அந்த வார்த்தைக்கு பிறகு வேறெதுவும் காதில் விழவில்லை சந்திரிக்காவுக்கு.
'அப்படி என்றால்... மேகலா சொல்வது உண்மைதானா? இது அந்த ஜானகி தானா?'
நேரம் இரவு பத்தை தாண்டி இருந்தது. குழந்தை தூங்கி இருக்க, தனது கைப்பேசியை துழாவிக்கொண்டிருந்தான் ரிஷி. அறைக்குள் வந்து படுத்துக்கொண்டாள் அருந்ததி. நிஜமாகவே அவள் மனம் ஒரு நிலையில் இல்லைதான். நாளை அவளுக்கு பிறந்தநாள்.!!!!
'எனக்கென வந்திருக்கிறதே ஒரு ஜீவன் அது என் பிறந்தநாளை நினைவில் வைத்திருக்குமா? மறந்திருக்குமா?? என்ன செய்ய காத்திருக்கிறதோ???? என்று ஒரு கவலை!!!!! பெரிதாக எதிர்ப்பார்ப்பெல்லாம் இல்லை அவளுக்கு. அவன் வாய் திறந்து வாழ்த்தி விட மாட்டானா என்று சின்னதாக ஒரு ஆசை. பார்க்கலாம்!!!
இந்த நினைப்பில் சரியாக சாப்பிட கூட இல்லை அவள். கைப்பேசிக்குள் கொஞ்ச நேரம் மூழ்கிக்கிடந்தவன் அடுத்து லேப்டாப்க்குள் தலையை விட்டுக்கொண்டான். என்னதான் செய்கிறானாம் அதற்குள்ளே???? தெரியவில்லை. ஒரு வேளை பன்னிரண்டு மணி வரை நேரம் கடத்துகிறானோ???
எழுந்து சென்று தனது பையை எதற்கோ குடைந்துக்கொண்டிருந்தான். ரகசியமாக ஏதாவது வாங்கி வைத்திருக்கிறானோ? பரபரத்தது மனம். அவளுக்கே கொஞ்சம் சிரிப்பாக கூட இருந்தது. நான் தானே எதுவும் கூடாது என்றேன். மறுபடி மறுபடி எதிர்பார்த்தால்???
நேரம் 11.30. விளக்கை அணைத்துவிட்டு படுத்துவிட்டான் அவன். உறங்கப்போகிறானா? அவ்வளவுதானா? எதுவும் இல்லையா? சில நிமிடங்கள் அப்படியே கரைய சீரான சுவாசம் அவனிடம். உறங்கி விட்டான்.
மறந்திருப்பானோ? அப்படித்தான் இருக்கக்கூடுமோ???
'இப்போது என்ன வாயிற்று என்று இப்படி தவிக்கிறேன் நான். பிறந்தநாள் வருடா வருடம் வருவது தானே. இந்த வருடம் இல்லாவிட்டால் அடுத்த வருடம் வாழ்த்த போகிறான்!!!' 'ம்ஹூம்....' சமாதானமடைய மறுத்தது மனம்.
நேரம் கொஞ்சம் கொஞ்சமாக நகர அசையக்கூட இல்லை அவன். 11.58... 11.59... ஆழ்ந்த உறக்கத்தில் அவன். ஒரு வேளை பன்னிரண்டு மணிக்கு அவனது கைப்பேசியில் அலாரம் வைத்திருப்பனோ.????
'நேரம் பன்னிரெண்டு ஆகப்போகிறது. நிச்சயமாக ஏதேனும் நடக்கும்'. அவள் தவிப்பின் உச்சியில் இருக்க, நேரம் பன்னிரெண்டை தொட...
அங்கே....... ஒன்றுமே நடக்கவில்லை.!!! நிஜமாகவே நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான் அவன். தோற்று போன பாவம் அவள் முகத்தில். மறந்துவிட்டான்!!!! மறந்தேதான் விட்டான்!!!! பொங்கி பொங்கி வழிந்தது உள்ளம். சில நிமிடங்கள் கடந்தும் உறக்கம் கிட்டவில்லை. இரவும் சரியாக உண்ணவில்லை. பசி வயிற்றை கிள்ளியது.
'உன்னை துரத்தி துரத்தி லவ் பண்ணி கல்யாணம் பண்ணேன் பார் என்னை சொல்லணும்' உள்ளுக்குள் புலம்பிக்கொண்டே எழுந்தாள் அவள்.
அந்த அறையின் ஓரத்தில் இருந்த ஃபிரிஜ்ஜிலிருந்து ஒரு ஆபிள்ளை எடுத்துக்கொண்டு, அதன் மேலேயே இருந்த கத்தியையும் எடுத்துக்கொண்டு அங்கே இருந்த மேஜையில் சென்று அமர்ந்தாள்.