அப்படியே கடித்து சாப்பிட்டு அவளுக்கு பழக்கம் இல்லை.. கட்டு போடப்பட்டிருந்த கையின் விரல்களாலேயே ஆப்பிளை பிடித்துக்கொண்டு அதை வெட்ட முயல ஆப்பிள் நழுவி கத்தி விரல்களின் மீது இறங்க......
'அ....ம்..மா...' சற்று சத்தமாக அவள் குரல் ஒலிக்க திடுக்கென்று விழித்துக்கொண்டான் ரிஷி. அரை குறை இருட்டில் அவள் முகம் பார்த்தவனுக்கு ஏதோ பிரச்சனை என்று புரிய சட்டென அவள் அருகில் வந்தான். அவள் விரல்களில் ரத்தம்.
அடுத்த நொடி பதறிக்கொண்டு அவள் கையை ஏந்திக்கொண்டான்
'என்னாச்சுடா??? கையை வெட்டிக்கிட்டியா? அடிப்பட்ட கையோட நீ ஏன்டா??? அய்யோ.. பாரு ரத்தம் வருது .. இரு... இரு வரேன்..' பதற்றம். அவன் உடல் முழுவதும் பதற்றம்.
'பாரு எவ்வளவு ரத்தம். என்னடா நீ என்னை எழுப்பி இருக்கலாம் இல்ல. ஏற்கனவே அடிப்பட்ட கை... ரொம்ப வலிக்குதாடா. எதுக்குடா கத்தியை எடுத்த??? ஆப்பிள் வெட்டவா? ஏன்டா பசிக்குதா? சரியா சாப்பிடலையா? படுத்தேன். அப்படியே தூங்கிட்டேன். ஒரு குரல் கொடுத்து இருக்கலாம் இல்ல???
தனது பெட்டியில் இருந்து முதலுதவி பெட்டியை எடுத்து வந்து, அவளை அங்கே இருந்த நாற்காலியில் அமர வைத்து, ரத்தத்தை துடைத்து அவளுக்கு பேண்ட் எய்ட்டை ஒட்டி முடிப்பதற்குள் இத்தனை கேள்விகள்.!!!! அத்தனை பதற்றம்.!!!!!
மறந்திருந்தான். இத்தனை நாள் அவன் காத்திருந்த அந்த பேசா விரதத்தை அவள் ரத்தத்தை பார்த்த மாத்திரத்தில் சுத்தமாக மறந்தே விட்டிருந்தான் ரிஷி. பேசிக்கொண்டே இருந்தான் அவன். பார்த்துக்கொண்டே இருந்தாள் அவள்.
தான் அவளுடன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று கூட உணர முடியவில்லை அவனால். அவளுக்கு புரிந்தது. அவளது சின்ன வலியும், ஒரு துளி ரத்தம் கூட அவனை எவ்வளவு தூரம் பதற வைக்கிறது என்று புரிந்தது. எத்தனை அன்பையும், நேசத்தையும் உள்ளுக்குள் பூட்டி வைத்திருக்கிறான் என புரிந்தது. இதை விட பெரிய பிறந்தநாள் பரிசு இருக்க முடியுமா என்ன???
'பசிக்குதாடா??? இரு வரேன் இரு' அடுத்த இரண்டாம் நிமிடத்தில் ஒரு தட்டு நிறைய ஆப்பிள் துண்டுங்களுடன் வந்தான் அவன். அவள் எதிரில் அமர்ந்து.......
'ம்.. ஆ... சொல்லு...' ஊட்டி விட்டான் அவன்.
சில ஆப்பிள் துண்டுகள் அவள் தொண்டைக்குள் இறங்க..... கொஞ்சம் பதற்றம் தணிந்து இருக்க வேண்டும் அவனுக்கு. ஒரு அழமான சுவாசம் அவன் எடுத்துக்கொள்ள, அவன் முகத்தை விட்டு விழி அகற்றவில்லை அவள். அவள் விழிகளில் நீர் சேர தவறவில்லை.
'என்னாச்சுமா??? ரொம்ப வலிக்குதா??' இடம் வலமாக தலை அசைத்தவள்.......
'வ.......சி....' என்றாள் மெல்ல.
நிஜமாகவே தான் அவளுடன் பேசிவிட்டோம் என்பது அப்போதுதான் புரிந்தது ரிஷிக்கு. அவனே கொஞ்சம் திகைத்துப்போய் கண்களை மூடி தலை அசைத்துக்கொண்டான்.. பின்னர் மெல்ல கண் திறந்தான்.
'இப்படி தோத்துட்டியே வசி..' கண்ணீர் பளபளக்கும் கண்ணை சிமிட்டி சிரித்தாள் அருந்ததி.
'ஆமாம்டி. தோத்துட்டேன்.. இப்போ என்னங்கறே? எனக்கு உன் கையிலே ரத்தம் பார்த்ததும் அப்படியே..... நான் பெரிய ரொமாண்டிக் ஹீரோ எல்லாம் கிடையாதுதான். வெறும் எமோஷனல் ஹீரோதான் போதுமா... . எனக்கு உன்னை அசத்த தெரியலைதான். என் காதலை எனக்கு ப்ரூவ் பண்ண தெரியலைதான். நான் இப்படிதான்.'
'அசத்த தெரியலையா. நான் அசந்து போய் தானே உட்கார்ந்து இருக்கேன் வசி' சொல்லிக்கொள்ளவில்லை அவள்.
'ஆக்சிடென்ட் ஆகலைன்னா எனக்கு தாலி கட்டி இருப்பியான்னு அன்னைக்கு நீ கேட்டே இல்ல. கட்டி இருப்பேனான்னு தெரியலை. என் நிலைமை அப்படி. ஆனா உன்னை தவிர எப்பவும் வேறே யாருக்கும் தாலி கட்டி இருக்க மாட்டேன். அது மட்டும் நிச்சயம். எனக்கு பொண்டாட்டின்னா அது நீ மட்டும் தான்''
சின்ன புன்னகையுடன் கண்களை தாழ்த்திக்கொண்டாள் அவள்
'உன்னை தப்பா திட்டிட்டேன்தான். உன்னை திருப்பி அனுப்ப வழி தெரியலை. திட்டிட்டேன். நான் செஞ்சது ரைட்டுன்னு சொல்லலை ஆனா அதுக்காக நீ கார எடுத்துகிட்டு... நிஜமாவே உயிர் போயிடுச்சுடி எனக்கு...' கண்களில் கண்ணீரும் இதழ்களில் புன்னகையும் ஒன்றாக தேங்கி நிற்க அவன் நேற்று கையில் வரைந்த மருதாணி கோலங்களையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அருந்ததி.
'ஏதாவது பேசுடி..' கண்களை கூட நிமிர்த்தவில்லை அருந்ததி.
'பேசலைன்னா போ.. நான் போய் தூங்கறேன்...' அவன் எழுந்துக்கொள்ள அவன் கை பிடித்துக்கொண்டாள் அவள்.
'எனக்கு பசிக்குது...'
பேசாமல் அமர்ந்தான் அவன். அவன் ஊட்டி விட... அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை.... இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை. அவளுக்கு ஊட்டி முடித்துவிட்டு எழுந்தான் அவன்.
'குட் நைட். தூங்கு போ...' அவள் முகம் பார்க்காமல் அவன் திரும்பி நடக்க...