அதே நேரத்தில் அங்கே மேகலாவின் வீட்டில்...
நம்மால் மற்றவர்களுக்கு ஏற்படும் காயங்கள், நாம் தவறென்று அறிந்தே மற்றவர்களுக்கு கொடுக்கும் வலிகள் என எல்லாவற்றுக்கும் கணக்கு வைத்திருக்கிறதே காலம்!!!! இறைவன் ஏற்படுத்தி வைத்திருக்கும் சட்டம்!!!! யாரை எங்கே அடித்தால் யாருக்கு எப்படி வலிக்குமென தெரிந்து வைத்திருக்கிறதே அந்த சட்டம். இப்போது மேகலாவை நோக்கி திரும்பியது அதன் பார்வை!!!!
'இயக்குனர் இந்திரஜித்!!! பொறாமை, அகங்காரம் போன்ற குணங்களின் மொத்த வடிவமாக மேகலா இருந்த போதும், மேகலாவின் பலகீனமான புள்ளி இயக்குனர் இந்திரஜித். அவருக்கு ஏதாவது ஒன்று என்றால் அதை தாங்கிக்கொள்ளும் சக்தி நிச்சயமாக மேகலவிடம் இல்லை,
அருந்ததி ஆறு மாத குழந்தையாக இருந்தபோது தனது முதல் மனைவியை இழந்தார் இயக்குனர். அதன் பிறகு அவர் தளர்ந்து கிடந்த நேரங்களில் எல்லாம் அவருக்கு துணை மேகலா. அவர் மீது ஒரு கண்மூடித்தனமான காதல் மேகலாவுக்கு.
அவரை துரத்தி துரத்தி மணந்து.... அவரது குழந்தைகளுக்கும் அன்னையாகி.... இந்த நிமிடம் வரை அவருக்கு ஒரு நல்ல மனைவியாகவே இருக்கிறார் மேகலா. அதே போல அஸ்வத்துக்கும் தந்தை என்றால் உயிர். இதையெல்லாம் குறிப்பெடுத்து வைத்திருந்தது காலம்.
உறக்கத்திலிருந்து விழித்து எழுந்த மேகலா சில நிமிடங்கள் அருகே உறங்கிக்கொண்டிருந்த இயக்குனரையே பார்த்தபடி அமர்ந்திருந்தார். கணவர் இரவு முழுவதும் சரியாக உறங்கவில்லை. சில நாட்களாக சரியாக சாப்பிடுவதும் இல்லை. உறங்குவதும் இல்லை. ரொம்பவும் சோர்ந்து போய் இருக்கிறாரே என்னவாக இருக்கும்???
யோசித்தபடியே முகம் கழுவிக்கொண்டு அவர் கீழே வந்துவிட, சில நிமிடங்கள் கழித்து படுக்கையில் இருந்து எழுந்தார் இயக்குனர். அப்படி ஒரு சோர்வு அவரை அழுத்தியது. மாடியில் இருக்கும் படுக்கை அறையை விட்டு வெளியே வந்து மாடிப்படியில் இறங்கியவர் அப்படியே தடுமாறி விழுந்து படிகளில் உருண்டார்.
அதே நேரத்தில் சஞ்சாவின் கெஸ்ட் ஹௌசில்...
கொஞ்சம் திணறியவாறே 'கை இப்போ பரவாயில்லை வசி' என்றாள் அருந்ததி. அந்த புகைப்படத்தை அவன் பார்த்துவிட்டால்??? நிஜமாகவே என்ன ஆகும் என அவளால் யூகிக்கவே முடியவில்லை. இப்போது அவனுக்கு இது தெரியக்கூடாது என்பது மட்டுமே புரிந்தது அவளுக்கு.
'எங்கே காட்டு பார்ப்போம்' அவன் அவளது வலது கையை உயர்த்த முயல, அவள் கஷ்டப்பட்டு விலக்கிக்கொண்டு
'இப்போ ஒண்ணும் இல்லை வசி' என்றாள்
'என்னது அது கையிலே. அப்பவே எதையோ சீரியஸா பார்த்திட்டு இருந்தியே?'
'ஓ... ஒண்ணுமில்லை..'
'ஹேய்.. காமிங்கறேன் இல்ல' அவன் அவள் கையிலிருப்பதை பார்க்க முயல செய்வதறியாது ஒரு நொடி திகைத்தவள், அடுத்த நொடி அவனது இதழோடு இதழ் பதித்திருந்தாள். அவன் சுதாரிப்பதற்குள் அவள் கையிலிருந்த அந்த புகைப்படம் பறந்து சென்று அவன் பின்னால் இருந்த மேஜையின் அடியில் விழுந்திருந்தது.
சில நொடிகளில் கழித்து கொஞ்சம் நிம்மதி கலந்த வெட்க சிரிப்புடன் அவள் அவனை விட்டு விலக
'அடியேய்... என்னது இது???' என்றான் அவன் கண் சிமிட்டிய படியே 'நான் கை சரியாகட்டும் அப்படின்னு பார்த்தேன். நீ விட மாட்டே போலிருக்கே...'
'அதெல்லாம் இல்லை. . இது சும்மா...'
'என்ன சும்மா???? இப்போ ஒரு ரிகர்சல் மட்டுமாவது பாப்போம்..' என்று அவளை தன்னோடு சேர்த்துக்கொண்டவன் அவள் கண்களை பார்த்துக்கேட்டான் 'ஆமாம் எனக்கு தெரியாம என்னத்தை பின்னாடி தூக்கி போட்டே???'
அதிர்ந்தே போனாள் அவள். 'அதெல்லாம் இல்லையே???'
'இல்லையா.???.' என்று திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தவன் கண்களில் மேஜையின் அடியில் இருந்த அந்த புகைப்படம் சிக்கவில்லை.
'பொய் சொல்றடி ரோஜாப்பூ..' என்றவனின் கைகள் அவளுக்கு மாலையாகின.
'இ.. இ... இல்லை வசி' அவள் தடுமாற இருவரையும் கலைத்து விலகி நிற்க வைத்தது அந்த குரல்.
'அப்பா...' அழைத்தது தீக்ஷா!!!! கட்டிலில் எழுந்து அமர்ந்திருந்தது அது. அரை குறை உறக்கம் அதன் கண்களில்.
'அப்பா..' என்று அழைத்தது குழந்தை 'எனக்கு போட்டோ வேணும்... அப்பா போட்டோ..' மொத்தமாக திடுக்கிட்டாள் அருந்ததி. அந்த புகைப்படத்தை தான் குறிப்பிடுகிறதா குழந்தை.
ஒரு முறை அருந்ததியை திரும்பி பார்த்துவிட்டு குழந்தையின் அருகில் சென்று அமர்ந்தான் ரிஷி. 'அப்பா போட்டோவா? எங்கே இருக்கு???'
சுற்றும் முற்றும் தேடியது குழந்தை. சோபாவின் மீது இருந்த அருந்ததியின் கைப்பை அதன் கண்ணில் படவில்லை. 'அது... பேக்லே...'
அந்த புகைப்படத்தை என் பையில் போட்டது தீக்ஷாதானா????? உறங்கி விழித்ததும் அது நினைவுக்கு வர கேட்கிறதோகுழந்தை????
'எந்த பேக்டா..' அள்ளிக்கொண்டான் குழந்தையை அது பதில் சொல்வதற்குள் முந்திக்கொண்டாள் அருந்ததி.