இன்னைக்கு தங்கச்சியை ஊருக்கு அனுப்பிட்டு நானும் கிளம்பணும். ஆனாலும் இவங்க எப்படியோ போகட்டும்ன்னு விட்டுட்டு என்னாலே ஊருக்கு போக முடியலைடா. இவங்க கையாலே கொஞ்ச நாள் சாப்பிட்டிருக்கேனே அதனாலேயான்னு தெரியலை...' என்றான் சஞ்சா. அன்பெனும் சிறையில் மட்டுமே கட்டுப்படும் சஞ்சா.
இப்படிகூட இருக்க முடியமா? என்று வியப்புடனே அவனை பார்த்தாள் அருந்ததி. பணம், புகழ் என எல்லாம் இருக்க அவளது அம்மா மேகலா ஆடிய ஆட்டங்களை பார்த்து வளர்ந்தவள் தானே அருந்ததி.
யோசனையுடன் அவனையே பார்த்திருந்தவள் அவனிடம் எல்லாம் சொல்லிவிடலாம் என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்டாள்.. இத்தனை நாட்கள் அவனை விட்டுப்போன காதல் மறுபடியும் கை கூடி இருக்கும் இந்த நேரத்தில், அவன் தலையில் இதையெல்லாம் திணிக்க வேண்டுமா???
உண்மைகள் தெரிந்தால் தான் ஊருக்கு போவதை கொஞ்ச நாட்கள் தள்ளி வைத்தாலும் வைத்துவிடுவான் என தோன்றியது அவளுக்கு. வேண்டாம்!!!!! சந்தோஷமாக ஊருக்கு போய்விட்டு விட்டு வரட்டும் எங்கள் நண்பன்.
'நீ கிளம்பு சஞ்சா...' என்றான் ரிஷி. 'நான் இவங்களை பார்த்துக்கறேன்....'
'ஆமாம் சஞ்சா... நீ சந்தோஷமா ஊருக்கு போயிட்டு வா'.' புன்னகை மின்ன சொன்னாள் அருந்ததி.
'அப்போ நான் கிளம்பட்டுமா.?? என்றவன் புரிந்து சொன்னானோ புரியாமல் சொன்னானோ 'ரிஷியை நீதான் பத்திரமா பார்த்துக்கணும்டா 'என்றான் அருந்ததியை பார்த்து.
'கண்டிப்பா சஞ்சா..' என்றாள் அவள் மெதுவாக.
'அடேய்... கிளம்பு முதல்லே... ரொம்ப ஓவரா இருக்கு' அவனை பிடித்து வெளியே தள்ளி விட்டான் ரிஷி.. போனவன் சில நொடிகளில் திரும்பி வந்தான்.
'சொல்ல மறந்திட்டேன்... உங்க அம்மாவையும் அண்ணனையும் இப்போதான் இங்கே பார்த்தேன். அப்பாவுக்கு உடம்புக்கு ஏதாவது இருக்குமோன்னு நினைக்கிறேன்டா. நான் அவங்களை எதுவும் கேட்கலை' அருந்தியை பார்த்து சொன்னான் சஞ்சா.
'அப்பாக்கா???.' அதிர்ந்தாள் மகள்.
'சரிடா நான் பார்த்துக்கறேன். நீ கிளம்பு' ரிஷி சொல்ல இருவரிடமும் விடைபெற்று கிளம்பிவிட்டிருந்தான் சஞ்சா. அவன் சென்றதும் பேசாமல் அங்கிருந்த ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்துக்கொண்டாள் அருந்ததி.
'இனிமே யாரவது சம்மந்தி, அம்மா அண்ணன்ன்னு ஏதாவது சொந்தம் கொண்டாடிட்டு அந்த வீட்டு பக்கம் போங்க. அப்புறம் இருக்கு' அன்று ஆணை இட்டவனையே பார்த்திருந்தாள் பெண். ஆனாலும் உயிர் வலித்தது அவளுக்கு.
'எத்தனை நேரம் இப்படியே உட்கார்ந்து இருக்க போகிறாளாம்???' அவள் எண்ண ஓட்டங்கள் புரிந்து அவனும் பார்த்திருந்தான். சில நிமிடங்கள் கடந்தும் நகரவில்லை அவள். அருகில் வந்தான் ரிஷி.
'அறிவிருக்கா உனக்கு??? எந்த நேரத்திலே எதை யோசிக்கறதுன்னு இல்லை. பாவம்டி உங்க அப்பா.... போய் பார்த்திட்டு வா... நானும் வருவேன்... வந்தா உங்க அண்ணன் ஏதாவது பேசுவான்... பிரச்சனை வரும்.. அவங்க கிட்டே பணம் இருக்கான்னு கேளு.... . எந்த ஹெல்ப் வேணும்னாலும் கேட்க சொல்லு...புரியுதா.....' நடந்த எல்லாவற்றையும் மறந்து உண்மையான அக்கறையுடன் சொன்னவனை வியப்புடன் பார்த்தபடியே நடந்தாள் அருந்ததி.
அவர்கள் அறைக்குள் நுழைந்து அப்பாவை பார்த்த மாத்திரத்தில் ஓடி சென்று அவர் அருகில் அமர்ந்தாள் மகள். கண் திறந்து அவளை பார்த்து புன்னகைத்தார்.
'அப்பா... என்னப்பா ஆச்சு. ஏன் பா நெத்தியிலே காயம்???"
'ஒண்ணுமில்லை மா. தலை சுத்தல் அவ்வளவுதான். அப்படியே கீழே விழுந்திட்டேன் விடும்மா எல்லாம் சரியாயிடும்'
'ஹேய்... எங்கே வந்தே நீ??? இப்போ என்ன திடீர் பாசம்...' அஸ்வத் துவங்க 'அஸ்வத் மேகலாவின் அதட்டலான குரல் அவனை இறக்கியது. சில நிமிடங்கள் அப்பாவுடன் பேசிவிட்டு அம்மாவின் அருகில் வந்தாள் அருந்ததி.
'கையிலே பணம் இருக்காமா? இல்லைனா சொல்லுமா???'
யாரு அவன் கேட்க சொன்னானா??? அவன்கிட்டே போய் நிக்கற அளவுக்கு என் நிலைமை இன்னும் அவ்வளவு தூரம் கீழே போகலைன்னு சொல்லு இப்போ கிளம்பு' எள்ளலாக சொன்னார் மேகலா.
நிலைமை கீழே வர இன்னும் வெகு சில நாட்களே இருக்கின்றன என்று அப்போது அறிந்திருக்க வில்லை மேகலா. அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை அருந்ததி. பேசாமல் நகர்ந்தாள்.
அவள் வெளியே சென்றவுடன் 'அருந்ததி..' அழைத்தார் அப்பா.
'என்ன வேணும் உங்களுக்கு???' ---- மேகலா.
'அருந்ததி ஹேன்ட் பேக்கை இங்கேயே வெச்சிட்டு போயிட்டா பாரு. அவகிட்டே கொடுத்திடு' அப்பா சொல்ல மேகலாவின் கை சேர்ந்தது அந்த கைப்பை.
'ஆமாம்... எனக்கு வேறே வேலை இல்லை..' என்று சொல்லிவிட்டு ஏதோ ஒரு உந்துதலில் அதை மெல்ல திறந்தார் மேகலா.