05. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி
அன்று மாலை வீட்டிற்கு சென்ற பிரத்யு எதுவும் மாமியாரிடம் பேச வில்லை. அவள் மாமியாரும் முதல் நாள் போல் தன் மகனிடம் பேசியது எதையும் அவளிடம் சொல்லவில்லை.. அவளை கண்டு கொள்ளவில்லை.
இரவு வழக்கம் போல் ஆதி சாட் செய்ய வந்தவனிடம், அவள் வித்யா பேசியதை சொல்லலாம் என்று எண்ணியிருந்தாள்.
“ஹாய்.. டார்லிங்... “ என்றான். நேற்று மாதிரி இல்லாமல் இருவருமே தங்கள் வருத்தங்களை மறைத்து வெளியே சிரித்தார்கள்.
“ஹாய்..”என்றவள், வழக்கம் போல் அவன் சாப்பாடு, வேலை பற்றி விசாரித்தாள். அவனும் அதையே கேட்க, அவளும் பதில் சொன்னாள்.
அவன் முதலில் தன் அம்மா பேசியதை அவளிடம் சொல்லலாம் என்று யோசித்தவன், பிறகு பிரயுவை கஷ்டபடுத்த வேண்டாம் என்று எதுவும் சொல்லாமல் விட்டான்.
பிரயுவும் வித்யா பேசியதை சொல்ல வந்தவள், பிறகு அந்த எண்ணத்தை கை விட்டாள்.
“ப்ரயு ...நான் ஒன்று சொல்வேன் கேட்பாயா?” என்றான்.
“என்ன. ..ஆதிப்பா ..?” என்றாள். இப்போதும் இருவருமே அந்த ஆதிப்பாவை கவனிக்கவில்லை.
“இனிமேல் .. நீயோ நானோ வித்யா விஷயத்தில் தலையிட வேண்டாம். அம்மா என்ன செய்ய சொல்கிறார்களோ அதை மட்டும் செய்வோம்... அதோடு தேவை இல்லாமல் நாம் இருவரும் யாரிடமும் கெட்ட பெயர் வாங்க வேண்டாம்.” என்றான்.
பிரயுவிற்கு தோன்றியது, அவன் இப்படி சொல்வதென்றால் இன்றும் ஏதோ நடந்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டாள். அவள் ஒரு நிமிடம் யோசித்து விட்டு,
“சரி ஆதிப்பா” ... அவள் யோசிக்கும் இடைவெளியில் அவன் உணர்ந்து கொண்டான் ... அவளுக்கும் ஏதோ பிரச்சினை .. என்று.. அவள் சரி எனவும் விட்டு விட்டான்.
ஆனால் இப்போது அந்த ஆதிப்பவை கண்டு கொண்டவன் , மகிழ்ச்சியோடு,
“ஹே.. இப்போ நீ என்ன சொன்ன ?”
“சரி ஆதிப்பா என்றேன் “ புரியாமல் விழித்தாள்..
“ஹே.. பிரயும்மா... நீ இன்னிக்கு ஆதிப்பா சொன்னாய்.. எவ்வளவு நாள் கூப்பிட சொன்னேன்.. இன்னிக்கு கூப்பிட்டியே “ என்று விசிலடித்தான்
பிரயுவின் முகம் சிவக்க, “அது.. அது .. என்று திணறினாள்”
அதை வீடியோவில் பார்த்தவன் , அவளை அள்ளி அணைக்க துடித்தான்.. பிறகு தன்னை கட்டுபடுத்தியவனாக,
“ப்ரயு .. நான் சொன்னதற்கு காரணம் .. நம் வாழ்க்கை யாராலும் சிக்கலாக மாறக் கூடாது.. நாம் பேசும் வார்த்தைகள் தான் நம்மை புரிந்து கொள்ள உதவும். வார்த்தைகள் கொஞ்சம் வித்தியாசபட்டாலும், உணர்வுகளின் மூலம் புரிந்து கொள்ள நீயும் நானும் ஒரே இடத்தில் இல்லை.
கணவன் மனைவி உறவு என்பதுதான் கடைசி வரை கூட வருவது... அம்மாவாக இருந்தாலும் ஒரு எல்லை வரையே நிற்க வேண்டியவர்கள். அவர்களை பாசத்தோடு பாதுகாப்பது நம் கடமை.. அதற்கு மேல் அவர்களுக்காக யோசித்து , நாம் நம் உறவில் விரிசல் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.
உனக்கு என்னை பற்றி எந்த குறை இருந்தாலும் நாம் நேரடியாக பேசிக் கொள்ளலாம். நானும் எனக்கு உன்னிடத்தில் பிடிக்காத விஷயத்தை நேரடியாக சொல்கிறேன். நம்மால் மாற்ற முடிந்ததை மாற்றிக் கொள்வோம்.. இல்லை அப்படியே ஏற்றுக் கொள்வோம்.
இதில் வேறு யாரையும் உள்ளே விட வேண்டாம். மேலும் அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.. யாரும் நம்மிடம் கருத்து கேட்டால் சொல்வோம்.. அதை எடுத்துக் கொள்வதும், விடுவதும் அவர்கள் விருப்பம்.. நாம் அம்மாவிற்கும், வித்யாவிற்கும் நம் கடமையை செய்வோம்” என்று நீளமாக பேசி முடித்தான்.
சற்று நேரம் யோசித்த ப்ரயு “நீங்கள் சொல்வது சரிதான் ஆதிப்பா. யார் விஷயத்திலும் நாம் தலையிடாமல் ஒதுங்கலாம்... ஆனால் அவர்கள் அப்படி இருப்பார்களா? அது சந்தேகம் தான்”.
பிரயுவிற்கு தன் அத்தையோ, வித்யாவோ அப்படி இருப்பார்கள் என்று தோன்றவில்லை.
“எனக்கும் புரிகிறது கண்ணம்மா.. ஆனால் வீண் பிரச்சினைகளை தவிர்த்து விடலாமே என்று தான் யோசிக்கிறேன்”
“சரி ப்பா” என்று முடித்தாள்.
“எனக்காக ஒன்றே ஒன்று செய்ய வேண்டும் கண்ணம்மா... நீ சொன்னது போல் இப்போதைய நிலையில் நாம் இருவரும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. அதனால் நான் திரும்பி வரும் வரை அம்மாவை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்.. இதை நீ எனக்காக செய்ய வேண்டும்.. ப்ளீஸ்.”
“இது என்ன..? அது என் கடமை.. இப்படி ஒரு நிலையில் என் அம்மா இருந்தால் நான் விடுவேனா? அதே போலே தான் அவர்களும்.. தனியாக எக்காரணம் கொண்டும் விட மாட்டேன்.. அதே போல் அவமரியாதையும் செய்ய மாட்டேன். நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்” என்று முடித்தாள்.