16. சதி என்று சரணடைந்தேன் - சகி
இன்னும் விவாஹத்திற்கு சில தினங்களே உள்ளன.
ஒரு ஸ்திரியின் அவள் ஜெனனத்தின் பின் மறக்க இயலாத நாள் அவளது உரிமையை,உணர்வினை,அவள் சங்கல்பங்களை,அவள் காதலை,பெண்மையின் இயல்புகளை ஒரு வேற்று ஆடவன் தனதாக்கும் நாள்!
உண்மையில் அவள் மனநிலை என்னவென்று அவளுக்கே தெரியவில்லை.
புயலென ஒரு நாள் வந்தது.
பெண் பார்த்தனர்.நிச்சயித்து முடித்தனர்.இன்னும் சில தினங்களில் விவாஹம் என்கின்றனர்.
மனதின் ஒரு பாதி வருங்காலத்தை எண்ணி பூரிப்படைய!மறு பாதி கடந்த காலத்தை எண்ணி கலங்கி கொண்டிருந்தது.
இனி தந்தையின் அன்பு,தாயின் அரவணைப்பு,தமையனின் நேசம்...
அண்ணியிடம் செய்யும் குறும்பு அனைத்தும் தூரமாக போகின்றன...
திரிசங்கு சொர்க்கத்தில் வாழ்ந்தவளின் கேசம் அன்பு கரம் ஒன்றால் கோதப்பட்டது.
"என்னடா ஆச்சு?"-ஆதரவாக ஒலித்தது ராகுலின் குரல்.
அனு அவன் அணைப்பினுள் சேர்ந்தாள்.
"என்னாச்சு செல்லம்?"
"நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்!உன்னை எல்லாம் விட்டு போக மாட்டேன்."
அவன் மனமும் கலங்காமல் இல்லை.
"ஏ...அனு!இங்கே பார்..!!!எதுக்கு அழுற?"அவள் விசும்பினாள்.
"அனு!"-அவள் முகத்தை கையில் ஏந்தியவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
"இதோ பாரு ஸ்வீட்டி!நீ சின்ன வயசுல என் கூட சண்டை போடுவல்ல!நான் தான் பெரிய பொண்ணாகிட்டேனே!இன்னும் ஏன் என்னை குழந்தை மாதிரி டிரீட் பண்றன்னு!ஞாபகமிருக்கா??"
"ம்..."
"இப்போ உண்மையிலே அதுக்கான நேரம் வந்துடுச்சும்மா!நீ கௌதமுக்கு மனைவியா மட்டும் போகலை!அவன் வாழ்க்கையை பகிர்ந்துக்க போற!சீக்கிரமே அந்த குடும்பத்தோட சந்தோஷம் நீயாக போற!கௌதம் மட்டுமில்லை...அந்த குடும்பமும் உனக்கு சொந்தமாக போகுது!அவங்களோட இன்ப துன்பங்களை பகிர்ந்துக்க போற!உனக்குள்ள தைரியம் அவசியம் இருக்கணும்!"
"அது மட்டுமில்லாம நான் அடிக்கடி சொல்வேனே பசங்களைவிட பொண்ணுங்களுக்கு தைரியம் அதிகம்னு அதுக்கு காரணமும் இதான்.ஏன்னா,கல்யாணத்துக்கு அப்பறம் ஒரு ஆண் நிச்சயம் அவன் குடும்பத்தை விட்டு வர மாட்டான்.ஆனா,ஒரு பொண்ணு தைரியமா தன் சொந்தங்களை விட்டுட்டு இன்னொரு குடும்பத்தை தனக்கு சொந்தமாக்குறா!இப்போ சொல்லு இதுல நீ தைரியசாலியா?இல்லை கௌதமா?"-கணநேரத்தில் அவன் பேச்சின் போக்கை மாற்றியது அவளுக்கு புரிந்தது.
"சும்மா இருக்க மாட்டியா?மாட்டியா?"-அவனை செல்லமாக அடித்தாள் அனு.
"ஏ...வலிக்குது!இன்னும் கல்யாணமே ஆகலை!அதுக்குள்ள சப்போர்ட்டா?"
"போண்ணா!"-என்று அவன் மேல் சாய்ந்து கொண்டாள் அவள்.
அவள் தலையில் முத்தமிட்டான் ராகுல்.
நான் சில நேரம் குழம்பிய கேள்வி ஒன்று உண்டு!!
ஏன்??மாதா,பிதா,குரு,தெய்வம் என்று கூறியவர்கள் தமையனையும்,நண்பனையும் இப்பட்டியலில் சேர்க்கவில்லை.??
என்னை பொருத்தவரை இவர்கள் இருவரும் மேற்கூறிய நால்வரின் பணியை தனியாய் செய்யும் தகுதி உடையவரே!!!
"அனு!நாளைக்கு ரெடியாகு!"
"எங்கே?"
"பிரின்சஸ்க்கு நகை வாங்க போறோம்!"
"அண்ணா!"
"என்ன?"
"ரகு அப்பாவையும் கூப்பிடலாமா?"-அவன் முகம் இருண்டது.
"ப்ளீஸ்ணா!"
"உனக்கு அதான் இஷ்டம்னா!சரி!"
"நிஜமா?தேங்க்யூண்ணா!"-அவன் கன்னத்தில் முத்தமிட்டு துள்ளி குதித்து ஓடினாள் அனு.
அவள் சென்றதும் அவன் முகம் கலை இழந்தது.
"என்னங்க?"
"ம்..."
"என்னாச்சுங்க?திடீர்னு சோகமாயிட்டீங்க?"
"அப்போ இவ்வளவு நேரம் இங்கே தான் இருந்தியா?"
"நான்...அது...அனுவை தூங்க சொல்ல வந்தேன்!நீங்க பேசிட்டு இருக்கவே நின்னுட்டேன்!"-அவள் எப்படி கூறுவாள் அவ்வளவு நேரமும் அவனை தான் அவள் கவனித்து கொண்டிருந்தாள் என்று!!!