ஆனால் சம்யுவே இதை ஒத்துக் கொள்ளும் போது... அவள் காதலை அடைய இப்படி செய்திருப்பாளோ என்று தான் நினைக்க தோன்றியது கவிக்கு... ஆரம்பத்திலிருந்தே அவள் காதல் விஷயத்தை இவளிடம் சொல்லவில்லை... அதற்கு பின் இவளுக்கு தெரிய வந்த போது இந்த காதல் வேண்டாமென்று தான் இவள் கூறினாள்... ஆனால் சம்யு அதை ஏற்கவில்லை...
சப்னா விஷயம் தெரிந்த பின்பு கூட கவியே கேட்டதும் தான் விஷயத்தை கூறினாள்... பிருத்வியிடம் காதலை சொன்னதையோ... திரும்பவும் நியூயார்க் போகப் போவதை பற்றியோ இவளிடம் அவள் சொல்லவில்லை... அவள் வேதனையில் இருப்பாள் என்று நினைத்து இவள் வரட்டுமா என்று கேட்டதற்கு வர வேண்டாம் என்று கூறிவிட்டாள்... பிருத்வியின் பிறந்தநாள் விழாவிற்கு செல்வதை இவளிடம் சொல்லவில்லை... அந்த தவறு நடந்த பிறகு கூட இதுவரையிலும் அன்று எதனால் அப்படி நடந்ததென்று அவள் கூறவேயில்லை....
இதையெல்லாம் யோசித்து பார்க்கும் போது சம்யு இதை செய்திருப்பாள் என்று நம்பினாள்... அந்த கோபத்தில் அவளிடம் பேசிவிட்டு வந்த கவிக்கு... என் காதல் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று யுக்தா கூறியது சப்னா பற்றி அவள் அறிவதற்கு முன் கூறியது என்பதை அவள் மறந்து போனாள்.
அந்த சம்பவத்திற்கு பிறகு இதோ அதோ என்று பத்து நாட்கள் நகர்ந்துவிட்டது.... ஆனால் இரு வீட்டின் நிலைமையும் அப்படியே தான் இருந்தது... இன்னும் சொல்ல போனால் கொஞ்சம் மோசமாக தான் இருந்தது....
மாதவன் எப்போதும் போல யாரிடமும் பேசாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தார்.. சுஜாதாவோ சில சமயம் யுக்தாவை திட்டிக் கொண்டும்.... சில சமயம் இந்த நிலைமைக்கு தான் தான் காரணம் என்று வருத்தப்பட்டுக் கொண்டும் இருந்தாள்... யுக்தா வழக்கம் போல அந்த அறை வாசத்தையே தொடர்ந்தாள்...
கவி இன்னும் யுக்தா மீது கோபமாக தான் இருந்தாள்.... கோபத்தை விட்டு யுக்தாவிடம் அவள் சென்று பேசவுமில்லை.... யுக்தா கவியை சமாதானப்படுத்த முயலவுமில்லை.... ஆனால் ஒரே வீட்டில் இருந்துக் கொண்டு யுக்தாவிடம் பேசாமல் இருப்பது கவிக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது... அதற்காக யுக்தாவை அவள் மன்னிக்கவும் தயாராக இல்லை... அதனால் தானாகவே பெங்களூர் செல்வதற்கான முயற்சியில் இறங்கினாள்.... சாவித்திரி தான் யுக்தா மீது கோபமாக இருந்தாலும் அவளை கவனித்துக் கொண்டாள்.
அங்கோ பிருத்வி பயங்கர கோபத்தில் இருந்தான்... யுக்தா சம்பந்தமான எந்த விஷயத்தையெல்லாம் அவன் நினைத்து சந்தோஷப்பட்டும்... வருத்தப்பட்டும் பொழுதை கழித்தானோ... அதெல்லாம் யுக்தா மீது சந்தேகமாக திரும்பியது... அதை அவன் அவளிடம் கேட்ட போது கூட யுக்தா தீர்க்கமாக மறுப்பாள் என்று தான் நினைத்தான்...
நினைத்தான் என்பதை விட எதிர்பார்த்தான் என்று தான் சொல்ல வேண்டும்.... அவள் மீது சந்தேகம் வந்தாலும் அவள் அப்படி செய்திருக்கக் கூடாது என்று உள்மனது எதிர்பார்த்தது... ஆனால் அவள் தான் அந்த காரியத்தை செய்தால் என்று ஒத்துக் கொண்டது மட்டுமல்லாமல் அவனை உதாசீனப்படுத்தி பேசியது... அவனுக்கு கோபத்தை வரவழைத்தது... அந்த கோபத்தை குறைக்க வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முயற்சித்தான்... ஆனால் முடியவில்லை.
வளர்மதிக்கும் செந்திலுக்கும் யுக்தா அப்படி செய்தாள் என்ற கோபத்தை விட அவள் அப்படி நடந்துக் கொண்டதற்கு அவர்களும் ஒரு வகையில் காரணம் என்பது உறுத்தலாக இருந்தது... யுக்தா பிருத்வியை காதலித்தால் என்பது அவர்களுக்கு புதிய செய்தி... அது தெரியாமல் அவளை இங்கு வரவழைத்து அவளின் நம்பிக்கையை வளர்த்துவிட்டதாக எண்ணி வருந்தினர்...
வளர்மதிக்கோ இன்னும் கூடுதலாகவே உறுத்தலாக இருந்தது... பிருத்வியின் காதலைப் பற்றி முன்பே சுஜாதாவிடம் சொல்லியிருந்தால் பிரச்சினைகள் எதுவும் இல்லாமலே போயிருக்கும் என்று நினைத்தாள்...
பிரணதி இந்த விஷயத்தில் தலையிடாமல் இருந்தாலும்... சப்னாவை தன் அண்ணன் திருமணம் செய்ய போவதில்லை என்று சந்தோஷப்பட்டாள்... ஆனால் இப்போது யுக்தா செய்த குழப்பத்தில் சப்னா திரும்பவும் தன் அண்ணனை திருமணம் செய்து கொள்வாளோ என்று பயந்தாள்.
இதற்கிடையில் பிருத்வியின் பிறந்தநாளுக்கு வந்து போன மறுநாளிலிருந்து பிருத்விக்கு சப்னா ஃபோன் செய்து கொண்டிருந்தாள்... ஆனால் அவன் தான் அழைப்பை ஏற்கவில்லை... ஒரு வாரம் கழித்து அவள் அம்மாவும் அப்பாவும் ஊருக்கு போனதும் பிருத்வியை நேரில் பார்க்க வந்தாள்... முதலில் அவளை பார்த்து விஷயத்தை சொல்ல தயங்கினான்... பிறகு எல்லா விவரத்தையும் கூறிவிட்டான்...
விஷயத்தை கேட்டதும் சப்னாவிற்கு முதலில் அதிர்ச்சியே... ஆனால் நிலைமை கைமீறி போகவில்லை என்பதை உணர்ந்தாள்... பிருத்வியின் மனதை மாற்ற முயற்சித்தாள்... யுக்தாவிடம் நடந்து கொண்டது போதையில் தான்... அது அவளின் சதி... அதை இவள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று அவனை சமாதானப்படுத்த முயற்சித்தாள்....