முதல் சந்திப்பிலே அவள் பேச்சும்,தைரியமும் அவனுக்கு பிடித்துப்போனது.நாளாக,அது.காதலாய் முற்றியது.
அது வளர்ந்து,இன்னும் சில காலங்களில் திருமணத்தில் கொண்டு வந்து விட போகிறது.
குளித்துமுடிந்து வேக வேகமாக இறங்கி வந்தான் ஆதித்யா.
"ஆதி!"-அவனை தடுத்து நிறுத்தியது யாத்ராவின் குரல்.
"என்ன?"
"இந்தா..இதை அம்மாக்கிட்ட கொடு!"-என்று ஒரு நகை பெட்டியை தந்தாள்.
"எப்போ வாங்கின?"
"நேற்று இதை வாங்க தான் சீக்கிரம் உன்னை வர சொன்னேன்.நீ என்னிக்கு என் பேச்சை கேட்டு இருக்க?அதான்..நானே போய் வாங்கி வந்துட்டேன்!"-அவன் காதல் ததும்பும் பார்வையை அவள் மேல் வீசினான்.
"என்னை பார்க்கிறதை விட்டு போய் அம்மாக்கு விஷ் பண்ணு!நீ சொன்னா அப்பறம் தான் நான் சொல்லணும்!"
"ஏன்?"
"பின்ன??இத்தனை வருஷமா முதல் விஷ் நீதான் பண்ற!இப்போ திடீர்னு நீ பண்ணலைன்னா அவங்களுக்கு ஒரு மாதிரி இருக்காது!?"
"ஐயோ...என் செல்லமே!!"-என்று அவளை இழுத்து அவன் கன்னத்தில் தன் இதழ் பதித்தான்.
"ப்ச்...சீக்கிரம் போ!!"
"எங்கே போ?நீயும் வா!!"-என்று அவள் கரத்தை பற்றி இழுத்து சென்றான் அவன்.
பூஜை அறையில் அமைதியாக அமர்ந்திருந்தார் ஜானகி.
"அம்மூ!"-மகனின் குரல் உசுப்ப திரும்பினார்.
அவரருகே வந்தவன்,"ஹேப்பி பர்த்டே அம்மூ!"-என்றான்.
"ஹேப்பி பர்த்டே மா!"-இருவரும் சேர்ந்து பரிசை அளித்தனர்.
மனதில் ஒரு வித ஆனந்தம் பொங்கி வழிந்தது.இருவரையும் தன்னோடு அணைத்து கொண்டார்.
"உங்களைவிட சிறந்த பரிசு என்னடா இருக்க போகுது எனக்கு?இதெல்லாம் எனக்கு எதுக்கு?"
"எங்களோட ஆசைக்காக அம்மூ!"
"வாங்கிக்கோங்கம்மா!"-அவர் அதை வாங்கி இறைவனின் பாதத்தில் வைத்தார்.
இருவரும் அவர பாதம் பணிந்தனர்.
"போன வருட பிறந்தநாளுக்கு நீ யாத்ராவை கிப்டா தந்த!இந்த வருடம் அநேகமா இன்னிக்கு உங்க கல்யாண தேதியை குறித்துவிடுவேன்!அடுத்த வருட பிறந்தநாளுக்கு ஒரு பேரனையோ,பேத்தியையோ தருவீங்களா?"அவர் ஆர்வத்தோடு கேட்டார்.யாத்ராவின் முகம் நாணத்தால் சிவந்து போனது!!அவள் நாணத்தோடு ஆதித்யாவை நோக்கினாள்.அவனது பார்வை ஒரு ஏக்கத்தோடு அவளை எதிர்கொள்வதை உணர்ந்தவள் சிரம் தாழ்ந்தாள்.
"அம்மூ!அதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம்!நீ வா!நாம வெளியே போகலாம்!"
"எங்கே?"
"உன் ஃபேவரட் ஸ்பாட்!"-அவன் ஜானகியை இழுத்துக் கொண்டு சென்றான்.
தாயாக உருமாறிய ஸ்திரியின் அதிகப்பட்ச இச்சை யாதென அறிவீர்களா??தன் புதல்வன் சற்றும் தன்மீதான அன்பையும்,உரிமையையும்,நம்பிக்கையையும் இழக்கவில்லை என்னும் நம்பிக்கை மட்டுமே!!!
ஒரு பெண் தாய்மை அடைந்தப்பின்னே முழுமை அடைகிறாள் என்னும் கூற்றின் காரணம் என்ன?அவள் வம்ச விருத்தியை புரிகிறாளே அதனாலா??தன் கணவனது பிரதி பிம்பத்தை அறிமுகம் செய்கிறாளே அதனாலா??அல்ல...
ஈன்ற புதல்வனை நன்முறையில் வளர்ப்பது அவசியமாகிறது!!!உலகிற்கு சிறந்த மனிதனை அறிமுகப்படுத்துவது தாயின் கடமையாகிறது!!!ஈன்ற பாலகனானவன் உலகியலோடு ஒன்றி உலக மக்களுக்கு நன்மை புரிய வேண்டும்.சுயநலமற்ற வாழ்வை அவன் வாழ வேண்டும்!!சுயநலமற்ற வாழ்வை
அவன் அடைய சுயநலமற்ற,நிர்மூலமான,ஒருநிலைப்பட்ட அன்பானது அவசியமாகிறது!!அக்குணம் வாய்ந்த அன்பினை தாய்மையால் தான் அளிக்க இயலும்!!தாய்மை என்பது சுயநலமற்ற,நிர்மூலமான,ஒருநிலைப்பட்ட அன்பே அன்றி வம்ச விருத்தி செய்யும் பண்பல்ல!!!
எண்ணற்ற பாதுகாப்பற்ற குழந்தைகள் அங்கு வசித்துக்கொண்டிருந்தனர்...
பெற்றோர்களால் கைவிடப்பட்ட சின்னஞ்சிறு மழலைகள்...
ஆனால்,மனதளவில் துவளாமல்,மற்றவரையும் துவளவிடாமல் ஆத்மபலம் ஒன்றையே அடிப்படையாக கொண்டு ஆனந்தமாக விளையாடி கொண்டிருந்தனர்.
ஜானகிக்கு மாதம் ஒருமுறையாவது இவர்களோடு இருக்க மனம் துடிக்கும்!!கள்ளமில்லா புன்னகையை காணும் நொடியினில் மனமானது குதூகலித்து குழந்தையாகவே மாறிவிடும்!!
அக்குழந்தைகளோடு ஜானகி ஒன்றி ஆனந்தமடைவதை மகிழ்வோடு பார்த்துக்கொண்டிருந்தனர் ஆதித்யாவும்,யாத்ராவும்..!!!