பிறக்கப்பவே அவனுக்கு முடி நல்ல அடர்த்தி…. அதுல கொஞ்சத்தை ஆசைக்குன்னு வெட்டி சேர்த்து வச்சேன்…..அதாவது உன்ட்ட காமிக்கனும்றதுக்காவே…..கைல எடுத்துப் பாரு எவ்ளவு சாஃப்டா இருக்குதுல்ல….
இது அவனுக்குன்னு வாங்கின முதல் டாய்….
இது அவனோட ஃபர்ஸ்ட் செய்ன்…… அடிக்கடி வாய்ல வைப்பான்னு அக்கா சொல்லுவா…..யூஎஸ் போறப்ப கொடுத்துட்டுப் போனா….
எங்க பக்கம் குழந்தைக்கு இடுப்புக்கொடி தங்கத்துலதான் போடுவாங்க….அதான் இப்டி வாங்கினேன்……
எனக்கு மித்ரன் பிறக்கும் வரை வயித்ல இருக்றது பெண் குழந்தைன்னு ஒரு நினைப்பு…..பேர் கூட பையனா இருந்தாலும் பொண்ணா இருந்தாலும் வைக்கலாம்னு மனு ன்னு செலக்ட் செய்து வச்சுருந்தேன்…..அப்டிதான் இந்த கொலுசும் வாங்கி வச்சேன்….. அவன் பிறந்த பிறகு பையனுக்கு பெண் குழந்தைக்குள்ள எதையும் போட்டு பார்க்கிறது தப்புன்னு ஆசைக்கு கூட ஒரு டைமும் போட்டுப் பார்க்கலை….உங்களுக்கு பெண் குழந்தை பிறந்தா இதையும் போட்டீங்கன்னா சந்தோஷப் படுவேன்…..அவங்க அப்பாவும் நானுமா போய் வாங்கினோம் இதெல்லாம்…. (மித்ரன்னு பேர் செலக்ட் செய்தது அவங்க அப்பா)
இந்த ராட்டிலைதான் அவன் முதல் முதல்ல கைல எடுத்து விளையாடினான்…
இது அவனுக்கு விழுந்த முதல் பல்….அக்கா தந்தா…..
இப்படி தெளிவான கையெழுத்து குறிப்புகளுடன் ப்ளாஸ்டிக் கவரில் தனித்தனியாய் பாக் செய்யப்பட்டிருந்தது ஒவ்வொரு ஐட்டமும்……
சோஃபாவில் அமர்ந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்தவளை அருகிலிருந்தவன் எப்போது தோளோடு சேர்த்து அணைத்து தன்னோடு சாய்த்துக் கொண்டான் என்பது இருவருக்குமே தெரியாது….
ஒவ்வொன்றாய் பிரித்துப் பார்ப்பதும்….அடுத்து அதற்கான தன்னவன் முகபாவம் பார்ப்பதுமாய் இருந்த மனோ
இது அவன் பிறந்த அன்னைக்கு அவன் அப்பா எடுத்த ஃபோட்டோ….. என்ற கவரைப் பிரிக்கும் போது நெகிழ்ச்சி மற்றும் எக்ஸைட்மென்ட்டில் இருந்தாள்….
பாலும் ரோஜாப் பூவும் கலந்து செய்த குழந்தைப் படம்…..
இது மூனு மாசத்துல எடுத்தது…….
பொக்கை வாய் சிரிப்பில் அல்வா கீத்து ஈர உதடுகளோடு….ஓரளவு கொழுக் மொழுக்காய்…..
எந்தப் பெண்ணுக்குத்தான் தோணாது…..தன் கணவனின் அத்தகைய படத்தைப் பார்க்க ‘நம்ம குழந்தையும் இப்டிதான் இருக்குமோ……’ என….. மனோ மனதில் அதுவாய் கற்பனை விரிய….
அவளை தன்னோடு சாய்த்திருந்தவனோ…. அதே நேரம் அவள் கன்னத்தில் இதழ் பதித்து…..”நமக்கு முதல்ல பொண்ணு…..அப்றம் தான் பையன்… ஓகேவா மனுப்பொண்ணு…” என்க…
அப்படியே கண் மூடி சற்றே திரும்பி தன்னவன் மார்பில் புதைந்து கொண்டாள் அவள்…… வெட்கமல்ல அது…..அனுபவிக்கும் அத்தனை உணர்ச்சிக்கும் என்ன பெயர் என தெரியாது பெண்ணிற்கு…..ஆனால் இதைவிடவும் உச்ச சுகம் உலகில் இருக்காது என்று மட்டும் தோன்றுகிறது நிச்சயம்….
மொத்தமாய் தன்னோடு அணைத்துக் கொண்டான் அவளவன் இப்போது…. அடுத்ததாய் அவள் உச்சந்தலையில் சின்னதாய் ஒரு முத்தம்…..
அணைத்திருந்தாள் தன்னவனை பெண்ணவள்….
“மனு” காதலாகி கசிகிறது வார்த்தை….
சொல்லியது அவனில்லை….அவள்…..ஒழுக்க எல்லைகள் மீறாமல்…இழுத்து கட்டிய இதயத்துடன் வளர்ந்தவள் அவள்…..முதன் முறையாக எல்லை இழந்து….தன்னை விரித்து தன்னவனை தானே அவன் என தடைகளற்று அவள் உணர்ந்த தருணம்….. அதில் மித்ரன் மனுவாகி இருந்தது…….
“ம்…”
“மனுப்பா”
“சொல்லு மனுப்பொண்ணு….”
அவள் என்ன சொல்ல வந்தாளோ…… வெளியே ஏதோ விழுந்து உடையும் சத்தம்…… இதில் இயல்புக்கு வந்திருந்த மனைவியோ….. இன்னுமாய் அணைத்திருந்த அவன் அணைப்பிலிருந்து மெல்ல உருவிக் கொண்டாள்…..
“வெளியோ எதோ வித்யாசமா சத்தம் கேட்குது மனுப்பா….”
“ம்….எனக்கு தெரிஞ்சு அந்த பாட்டி எதையாவது நாம இருக்ற ரூம் வாசல்ல வந்து போட்டு உடச்சுறுக்கும்….” அவன் குரல் இறுகி இருக்க
மனோ தான் ஓடிப் போய் அறைக் கதவை திறந்து பார்த்தாள்….பார்த்தவள் கொதித்துப் போனாள்…… ஏனெனில் வாசல் முன்பு சிதறிக் கிடந்தது மீன் தொட்டி……துடி துடித்துக் கொண்டிருந்தன சிதறிக் கிடந்த மீன்கள்….
இந்த அறைக்குள் வரும் போது வாசலின் பக்கவாட்டில் அந்த தொட்டி இருந்தது ஞாபகம் வருகிறது இவளுக்கு….
மாடிப் படிகளில் இறங்கிப் போய்க்கொண்டிருந்தார் பாட்டி…..