பின்னே, என்ன இருந்தாலும் அவளின் தாய்மாமன் அல்லவா?... தன் வீட்டுப் பெண்ணை அடுத்தவர்களிடத்தில் விட்டா கொடுத்திடுவார்?...
சரயூவின் மாமா சொன்னது போல் இருவரையும் எழுந்து இங்கேயும் அங்கேயும் நிற்க வைத்து பார்த்த போது, உயரப்பொருத்தம் சரியாக இருப்பது போலேயே தோன்றியது அனைவருக்கும்…
பின்னர், “இது தான்ம்மா எங்க பையன்… பார்த்து உனக்கு பிடிச்சிருக்கான்னு சொல்லு…” என்ற பெரியவர்களின் வார்த்தை காதில் விழ, இதற்கு மேலும் தரையை பார்த்திருந்தால், அவ்வளவுதான் என நினைத்தபடி, மெல்ல அவள் விழி உயர்த்தினாள்…
தூரத்தில் ஒரு உருவம் மங்கலாய் தெரிய, என்னடா இது?... என கண்ணை தட்டி முழித்து அவள் மீண்டும் பார்க்க, மறுபடியும் அவளுக்கு மங்கலாகவே தெரிந்தது..
“பார்த்து பிடிச்சிருக்கான்னு சொல்லுன்னு சொன்னாங்களே… இப்போ அவங்க கேட்டா நான் என்ன சொல்லுறது?.. பார்க்கவே இல்லையே… அதைவிட தெரியவே இல்லைன்னு சொன்னா தான் ரொம்ப பொருந்துமோ…” என தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டவளுக்கு அடுத்து என்ன செய்ய என தெரியவில்லை..
“நீ உள்ளே போம்மா…” என சரயூவின் தாய்மாமன் சொன்னதும்,
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
படிக்க தவறாதீர்கள்...
“ஷ்… அப்பாடா….” என்ற நிம்மதி பெருமூச்சோடு அவள் மெல்ல உள்ளே சென்று அமர்ந்தாள்…
“என்னடி.. மாப்பிள்ளை பிடிச்சிருக்கா?... உனக்கு ஓகே தான?...” என அவளின் தோழிகள் கேட்க, அவளுக்கு தலையில் அடித்துக்கொள்ளலாம் போல இருந்தது..
பார்க்கவே இல்லை… அதற்குள் பிடித்திருக்கிறதா?.. ஒகேயா?... என கேட்டால் பாவம் அவள் தான் என்ன செய்வாள்…
சரி… அவ்வளவுதான்… இனி எல்லாம் பெரியவர்கள் பேசி முடித்திடுவார்கள்… நம்மிடம் சம்மதம் கேட்கவா போகிறார்கள்… முடிந்தது எல்லாம்… என அவள் கைகளை பிசைந்த வண்ணம் இருந்த போது,
“உள்ளே வரலாமா?...” என்ற குரலில் அவள் நிமிர்ந்த போது அங்கே திலீப் நின்றிருந்தான்…
மங்கலாய் தெரிந்த உருவம் இவனுடையது தானா?... இந்த கலர் தானே தெரிந்த்து… எனில் இவன் தான் மாப்பிள்ளையா?... என்ற எண்ணம் நொடிக்குள் மூளைக்கு செல்ல, அடுத்த நொடி அவள் சட்டென எழுந்திருந்தாள்…
“உட்காரு… உட்காரு…” என்றவனும் சற்று பெரிய இடைவெளி விட்டே அமர, அவள் எதுவும் பேசவில்லை..
“என்னப்பா… திலீப் உனக்கு பொண்ணை பிடிச்சிருக்கா?... நீ சொல்லிட்டா நாங்க பெரியவங்க மேற்கொண்டு பேச வேண்டியதை பேசுவோம்…” என வந்திருந்த பெரியவர்களில் ஒருவர் கூற,
“நான் பொண்ணுகிட்ட கொஞ்சம் தனியா பேசணும்…” என்ற அவனின் பதிலில் தூக்கிவாரிப்போட்டபடி அவனை பார்த்தனர் சண்முகமும், சுகன்யாவும்…
பின்னே அமைதியின் சிகரம் ஆயிற்றே அவன்… சிடுமூஞ்சி மாதவனும் கூட… அப்படிப்பட்ட அவன், பார்த்து சில நிமிடங்கள் கூட ஆகாத பெண்ணிடம் பேச வேண்டும் என சொல்லும்போது அவனின் அப்பாவும், தங்கையும் அதிர்ந்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லையே…
சண்முகமும், சுகன்யாவும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக்கொள்ள,
சரயூவின் தாய்மாமனோ, வாசந்தியையும், வாசந்தியின் கணவன் ரவீந்திரனையும் பார்த்தார்…
அவர்கள் எதுவும் பேசாமல் இருக்க, சரயூவின் தாய்மாமன் “சரி… நீங்க போய் பேசிட்டு வாங்க… வந்து உங்க பதிலை சொல்லுங்க…” என சரயூவின் அறையை அவருக்கு காட்ட, அவனும் அவளின் அறைக்கு வந்துவிட்டான்…
“வீடு முழுக்க, ஒரே வசனமா ஒட்டியிருக்கே… நீ சர்ச்சுக்கு போவீயா?...” என அவன் கேட்டதும்,
“இல்ல… எனக்கு வசனம் பிடிக்கும்… எப்பவாச்சும் போவேன்… ரெகுலரா இல்ல…” என்றாள் அவள் மெதுவாக…
“உனக்கு என்னை பிடிச்சிருக்கா?...” என அடுத்த கேள்வியில் அவளை அவன் விழி நிமிர்த்தி பார்க்க செய்ய,
அவள் அவனை அப்போது தான் நன்றாக பார்த்தாள்…
பெண் பார்க்க வருகிறோம் என்று சொல்லிதான் அழைத்து வந்திருப்பார்கள்.. அப்படி இருந்தும் அவன் க்ளீன் சேவ் செய்திருக்கவில்லை… தாடியுடன் இருந்தான் அவன்… எந்தவித எதிர்பார்ப்புடனும், அவன் பெண் பார்க்க வந்ததாக தோன்றவே இல்லை அவளுக்கு…
பின்னே அவளுக்கும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லையே இந்த நொடிவரை… அவனும் அதுபோலவே இருக்கிறான் என அவளது ஏழாம் அறிவு அவளுக்கு எடுத்துரைக்க, மனதினுள் சற்றே புன்னகை உதித்தது… பின்னே தன்னை போலவே எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத இனத்தை கண்டுபிடித்துவிட்டாளே… ஆச்சரியம் தானே.. உவகை வராமல் இருக்குமா என்ன?.. அந்த அறிவாளி பெண்ணுக்கு…
அவனை பிடிக்கவில்லை என ஒரு காரணமும் அவளால் சொல்லமுடியவில்லை… பார்க்க நன்றாகத்தான் இருக்கிறான்… பெண்ணின் சம்மதத்தை வேண்டி இதோ தன் முன்னாடி நிற்கிறான்… இது போதும் என்று அவளின் மனதிற்கு தோன்றி இருக்குமோ ஒருவேளை… தெரியவில்லை…
சட்டென்று. “பிடித்திருக்கிறது…” என்ற வார்த்தைகளும் அவள் மனதிலிருந்து வெளியேறி, அவளின் வார்த்தைகளில் தஞ்சம் கொள்ள, அவனின் முகத்தில் சின்ன சந்தோஷம்…
“எனக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு…” என்றபடி, அவன் அறையை விட்டு வெளியேற, சரயூவிடம் மாப்பிள்ளை என்ன சொன்னார் என உறவினர் பெண்கள் கேட்கையில் அவள், பிடிச்சிருக்கான்னு கேட்டார்… நான் சரின்னு சொன்னேன்… அவ்வளவுதான்… என சொல்ல,.
அவளது அறை வாசலில் நின்று கொண்டிருந்த சரயூவின் அம்மா வாசந்திக்கும், அப்பா ரவீந்திரனுக்கும் திக் என்றிருந்தது…
தொடரும்
{kunena_discuss:995}